Banner 468 x 60px

 

Monday, November 24, 2014

உங்கள் கை ராசியானதா?

0 Facebook
ன் எதிர்காலம் உன் கையில்தான்’ என்று பெரியவர்கள் சொல்வார்கள். 'உன் கைரேகையும், அது காட்டும் வழியில் உள்ள உழைப்பும்தான் உன் உயர்வுக்குக் காரணம்’ என்பதே அந்த வாக்கியத்துக்கான பொருள்.

கைரேகை மூலம் பலன் சொல்வது, திறமையான வைத்தியர் ஒருவர் நோயை சரியாக நிர்ணயித்து குணப்படுத்துவது போன்றது. வியாதியின் பொதுவான அடையாளங்களை வைத்து, இது மலேரியா, இது டைஃபாய்டு அல்லது இன்ஃப்ளூவென்சா என்று யூகிக்க முடிந்தாலும், ரத்தம் மற்றும் சிறுநீர் பரிசோதனைகள் வாயிலாகவும், சில நேரங்களில் எக்ஸ்ரே முதலான பரிசோதனைகள் மூலமும் வியாதியின் மூலகாரணங்களைக் கண்டுபிடித்து, அது தீர்வதற்கான மருந்துகளை நிர்ணயித்து வியாதியைக் குணப்படுத்துவார்கள்.

அதுபோலவே, ரேகை சாஸ்திரத்திலும் கையின் அமைப்பு, உள்ளங்கை, ரேகைகள், மேடுகள் மற்றும் உள்ளங்கையில் அமைந்துள்ள குறிகளின் தன்மைகளைக் கண்டறிந்து, ஒப்பிட்டு, விளக்கமும் பலனும் சொல்லவேண்டும்.

முதலில் கையின் அமைப்பை அறிவோம்.

கையின் வடிவமைப்பு: உள்ளங்கையைத் தரையில் வைத்து, விரல்களைச் சற்று அகற்றி வைத்துக்கொண்டு, கைகளின் மேற்புற அமைப்பைப் பார்த்து, வடிவமைப்பை நிர்ணயிக்கவேண்டும். இந்த வடிவங்களை பொதுவாக மிகச் சிறிய கை, சிறிய கை, சாதாரண கை, நீளமான கை, மிக நீளமான கை என ஐந்து விதமாக வகைப்படுத்துவார்கள்.

இங்கே பெரிய கை, சிறிய கை என்றதும், பெரியவர்களின் கை, சிறியவர்களின் கை என்று எடுத்துக்கொள்ளக் கூடாது. குறிப்பிட்ட வயதினருக்கு பொதுவாக கையின் அமைப்பு எப்படி இருக்கும் என்பதை நிர்ணயித்துக்கொள்ளவேண்டும். 'இந்த வகை கைக்கு இன்ன பலன்கள்’ என்று குறிப்பிடப்படும் அம்சங்கள் அனைத்தும் அப்படியே பொருந்தும் என்று முடிவெடுத்துவிடக் கூடாது. கைகளில் இருக்கும் ரேகைகள், குறிகள் ஆகியவற்றையும் ஆராய வேண்டும். கை அமைப்பு ஒன்றியிருந்தாலும் ரேகைகள், குறிகள் ஆகியன மாறுபட வாய்ப்பு உண்டு.

இனி, கையின் ஐவகை வடிவங்களையும், பொதுவான இயல்புகளையும் பற்றிக் காண்போம்.

மிகச் சிறிய கை: சுயநலம் மிகுந்தவர். பணம் - பொருளில் ஆசை மிகுந்தவர். சந்தேகக் குணமும் சண்டை போடும் சுபாவமும் மிகுந்திருக்கும். குறுகிய மனப்பான்மை கொண்டவர்கள். தனது சுயநலத்துக்காக எதையும் செய்பவர்கள்.

மேலும், சந்தர்ப்பவாதிகளாகவும், மற்றவரை குறை கூறுபவர்களாகவும் இருப்பார்கள். இவர்களுக்குத் திறமை இருந்தாலும், பிறரால் விரும்பப்படாதவராகத் திகழ்வார்கள்.

சிறிய கை: திறமை மிகுந்தவர். முன்னுக்கு வரவேண்டும் எனும் ஆசை இருக்கும். ஆனாலும், சோம்பல் மிகுந்தவர்கள். உழைப்பதில் ஆர்வம் இருக்காது. போலித்தனமாக வாழ்பவர்கள். சிந்திப்பதைச் செயல்படுத்தும் துணிவு இருக்காது.

தங்களுடைய தோல்விக்கு மற்றவர்களைக் குறை சொல்வார்கள். அதிர்ஷ்டத்தை நம்புபவர்களாகவும், எல்லாம் தானாகவே நடக்கும் என்ற எண்ணம் கொண்டவர்களாகவும் இருப்பார்கள். போலி வேதாந்தம் பேசுபவர்கள். குறுக்குவழியில் வெற்றியடைய நினைப்பவர்கள்.

சாதாரண கை: பெரும்பாலனவர் களின் கை இந்த வகையில் அடங்கும். இந்த வகையினர் பொறுமைசாலிகள். வாழ்வில் கஷ்டநஷ்டங்களையும், மேடு பள்ளங்களையும் அறிந்தவராக இருப்பார்கள்.

திட்டமிடலும், எது சாத்தியமோ அதையே செயல்படுத்துபவராகவும் விளங்குவார்கள். போதுமான திறமை, சாமர்த்தியம் உள்ளவர்கள்.

நம்பிக்கைக்கு உகந்தவர்கள். இவர்கள், பெரிய அளவில் சாதனைகள் புரியாவிட்டாலும், தோல்வி அடைய மாட்டார்கள். சிறுகக் கட்டிப் பெருக வாழ்பவர்கள். சந்தர்ப்பத்துக்கு ஏற்ப வளைந்துகொடுத்து வாழ்வார்கள்.

இயன்ற அளவு பிறருக்கு உதவி செய்யக்கூடியவர்கள். பொதுவாக இவர்கள் நடுத்தர வாழ்க்கைச் சூழலில், அமைதியுடனும் பிறரின் விருப்பத் துக்கு உரியவர்களாகவும் வாழ்வார்கள்.

நீளமான கை: மிகவும் திறமைசாலிகள். புத்தி சாதுர்யமும்,  துணிச்சலும், ஆவேசமும் உள்ளவர்கள். வாழ்வில் உயர்வதற்காக கடுமையாக உழைப்பவர்கள். நேர்மையாளர்களாகவும், வெளிப்படையாகப் பேசுபவர்களாகவும் விளங்குவர்.

பிரச்னைகளைச் சமாளிப்பதில் இவர்கள் வல்லவர்களாகத் திகழ்வார்கள். தலைவர்களாக இருக்கத் தகுந்தவர்கள். தனக்கும் பிறருக்கும் பயனுள்ளவர்கள். பாசமும், நேசமும், பற்றும் மிகுந்தவர்கள். நினைத்ததை முடிக்கும் ஆற்றல் உள்ளவர்கள்.  நம்பிக்கைக்குப் பாத்திரமானவர்கள். அதேநேரம், கர்வமும், பிடிவாதமும் இவர்களிடம் உண்டு.

மிக நீளமான கை: இவர்கள் முற்றிலும் வித்தியாசமானவர்கள்.

திறமைசாலிகளாகவும், அதிமேதைகளாகவும் விளங்குவார்கள். ஆனால், இவர்களைப் புரிந்துகொள்வது கடினம்.

சட்டம், ஒழுங்கு, சமுதாயக் கட்டுக்கோப்புக்குள் அடங்காதவர்கள்; சுதந்திரப் பிரியர்கள். பிறரைப் பற்றிக் கவலைப்பட மாட்டார்கள். கஷ்ட நஷ்டங்களை லட்சியம் செய்யாதவர்கள். வெளியில் தங்களை தைரியமுள்ளவர்களாகக் காட்டிக்கொண்டாலும், உள்ளுக்குள் அச்சம் மிகுந்தவர்களாக இருப்பார்கள். இவர்களை நம்புவது கடினம். ஆனால், இவர்கள் கெட்டவர்கள் அல்ல; வித்தியாசமானவர்கள்!


சேவாரத்னா டாக்டர் டி.எஸ்.நாராயணஸ்வாமி

0 Facebook:

Post a Comment

 
ஆன்மிகம் © 2011 - WebSite & Designig by Yazhini