Banner 468 x 60px

 

Monday, July 13, 2015

பகவான் விஷ்ணுவின் கல்கி அவதாரம் -சிறப்பு தகவல்கள்


பகவான் விஷ்ணுவின் கல்கி அவதாரம் -சிறப்பு தகவல்கள்

உலகம் எங்கும் அநீதிகள், நியாயமில்லாத விஷயங்கள், சிறுவயதிலேயே ஒழுக்கம் தவறிய செயல்கள் அதிகம் நடக்கின்றன. இவற்றை கட்டுப்படுத்துவது என்பது இயலாத காரியமாகும்.

எங்கும் நிறைந்திருக்கும் இறைவனால்தான் இதை சரி செய்ய முடியும் என ஆன்மிகவாதிகள் நம்புகின்றனர். மேலும் கலியுகத்தில் இப்படித்தான் உலகம் இருக்கும் என நம்பப்படுகிறது. கலியுகத்தின் இறுதியில்தான் பகவான் விஷ்ணு கல்கி அவதாரம் எடுத்து இதை எல்லாம் அழித்து புதிய உலகை உருவாக்குவார் எனவும் ஒரு நம்பிக்கை நிலவுகிறது.

சில தமிழ் திரைப்படங்களில் கூட கதாநாயகன் தன்னை கல்கி அவதாரமாக நினைத்து கொண்டு அநீதிகளை அழிப்பதாகவும்
கதைகளில் வருகிறது. கல்கி அவதாரம் பற்றிய நம்பிக்கை பற்றியும் அது நிகழ்வதாக கூறப்படும் காலம் பற்றி புராணம் சொல்லும் தகவல்களை சற்று விரிவாக பார்ப்போம்.

கண்ணன் தன் அவதாரத்தை முடிக்கும் காலம் வந்துவிட்டது என எண்ணி, குரா மரத்தடியில் சரிந்து அமர்ந்தார்.

அங்கு வந்த ஜரா எனும் வேடன் எய்த அம்பு குறி தவறி கண்ணனின் காலில் தைத்தது; கண்ணனின் உயிர் பிரிந்தது. அவர் சரீர தியாகம் செய்து கொண்ட இடம்தான் இப்போது தோரஹரசாகர் என அழைக்கப்படுகிறது. இது ஹிரண்ய நதிக்கரையில் உள்ளது. இந்த நதிக்கரையில் அர்ச்சுனன் கண்ணன் மகனின் உதவியுடன் சந்தனக் கட்டைகளை அடுக்கி, கண்ணனுக்கு ஈமக்கிரியைகளைச் செய்து முடித்தான் என நம்பப்படுகிறது.

அப்போது கண்ணனின் தேகம் ஒரு மரக்கட்டையாகி நீரில் மிதந்து பூரி கடற்கரையருகில் ஒதுங்கியது.

அதை எடுத்து ஒரு சிலை செய்து பூரி ஜகந்நாதர் ஆலயத்தில் பிரதிஷ்டை செய்ததாக சொல்லப்படுகிறது.

ராமாவதாரத்தில் ராமனின் அம்பு பட்டு இறந்த வாலியே ஜரா என்ற வேடனாக  கிருஷ்ணாவதாரத்தில் வந்து கண்ணன்மீது அம்பெய்து கண்ணனைக் கொன்றான். "முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்' என்பது கடவுள் அவதாரத்துக்கும் பொருந்தும் என்பதை இதனால் நாம் அறிந்து கொள்ளலாம். கிருஷ்ணாவதாரம் துவாபரயுக முடிவில் நிறைவுற்றது. அதன்பின் தோன்றிய யுகம்தான் நாம் வாழும் இந்த கலியுகம்.

கிருஷ்ணாவதாரம் பூர்த்தியான நாள்தான் துவாபர யுகத்தின் கடைசி நாள். அன்று பிற்பகல் 2.00 மணி, 27 நிமிடம், 30 வினாடிகளில் கண்ணன் சரீரத் தியாகம் செய்தார். அதுதான் கி.மு. 3102-ஆம் ஆண்டு, பிப்ரவரி 18-ஆம் நாள் என்று குறிப்பிடுகிறார்கள். அதன்பின் கி.மு. 3102, பிப்ரவரி 20-ஆம் நாள் கலியுகம் பிறந்தது என்றும் கூறப்பட்டுள்ளது.

சோம்நாத் அருகேயுள்ள பிரபாசபட்டினத்தில் 7-9-2004 அன்று நடந்த மாநாட்டில் ஞானானந்த சரஸ்வதி சுவாமிகள் தன் ஆராய்ச்சிக் கட்டுரையிலும் இதையே குறிப்பிட்டுள்ளார். இவர் விஷ்ணு புராணம், மத்சய புராணம், மகாபாரதம், பாகவத புராணம் ஆகியவற்றில் உள்ள குறிப்புகளின் அடிப்படையில் கணினி மூலம் கணித்து நிர்ணயம் செய்துதான் மேற்கண்ட விவரங்களைத் தெளிவுற விளக்கியுள்ளார். மேலும் கண்ணன் மறைந்த தினமான பிப்ரவரி 18-ஐக் கொண்டாட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார். கண்ணன் 125 வருடம், 7 மாதம், 6 நாட்கள் பூவுலகில் வாழ்ந்துள்ளார் எனக் குறிப்பிட்டுள்ளார். உலகம் தோன்றி 198 கோடியே, 67 லட்சத்து, 73 ஆயிரத்து, 109 ஆண்டுகள் ஆனதாக கூறப்படுகிறது.

கல்கி அவதாரம் என்பது விஷ்ணு பகவானின் பத்தாவதும் இறுதியுமான மகா அவதாரம் என நம்பப்படுகிறது. கல்கி பகவான் கலியுகத்தில் தோன்றி அனைத்து தீயவைகளையும் அழிப்பார் என்பதும் மக்களின் நம்பிக்கை.

கலியுகத்தில் என்னென்ன நடக்கும், மக்கள் எப்படி இருப்பார்கள், நாம் செய்ய வேண்டியது என்ன என்பதை கண்ணன் கூறியுள்ளார்.

"மனிதர்கள் எல்லாவற்றையும் அடைய வேண்டும் என வெறியுடன் இருப்பார்கள். பணத்தாசையுடன் அலைவர். துறவிகள்கூட பணத்திற்காகத் தவறுகள் செய்வார்கள். ஆண்கள் மனைவிக்கு மட்டும் கட்டுப்பட்டு பெற்றோரை உதாசீனம் செய்து தூஷிப்பார்கள். மனைவிவழி உறவினர்களிடம் மட்டுமே உறவாடுவார்கள். திருமணத்தில் முறை இருக்காது. சிறிதளவு சொத்துக்குக்கூட உறவினர்களைக் கொல்லத் தயங்க மாட்டார்கள். ஒருவருக்கொருவர் கெடுதல் செய்து கொள்வார்கள்' என்று கூறியுள்ளார் இறுதியில் கல்கி அவதாரம் நிகழும் என்று புராணங்கள் கூறுகின்றன.

பகவான் கண்ணன் கீதையில் தர்மம், நீதி தவறும்போது நான் மீண்டும் பிறப்பெடுப்பேன் என கூறியுள்ளார்.

கல்கி அவதாரம் நிச்சயம் நிகழும் என பலர் நம்பிக்கையுடன் இருக்கிறார்கள். மறுபுறம் 'கல்கி அவதாரம்' குறித்து தவறான கருத்துகள் பலவும் நிலவி வருகின்றன. புராணங்களின் துணை கொண்டு அவதார உண்மைகளை உணர்ந்து தெளிவு பெறலாம்

கலியுக முடிவிலேயே 'கல்கி அவதாரம்' நிகழும் என்று புராணங்கள் அறுதியிட்டுக் கூறுகின்றன. கலியுகம் 4,32,000 ஆண்டுகளைக் கொண்டது. தற்பொழுது 5,105 ஆண்டுகளே முடிவடைந்து உள்ளது. யுகம் நிறைவு பெற சுமார் 4,27,000 ஆண்டுகள் மீதமுள்ளது.

கல்கி அவதாரம் தசாவதாரங்களில் 10-ஆவது அவதாரமாகும். அது எப்போது என தெரியாவிட்டாலும் நிச்சயம் நடக்கும் என புராணங்கள் சொல்கின்றன. அதில் 'சம்பளம்' என்னும் கிராமத்தில்  "யாஸஸ்” எனும் பிராமணருக்கு மகனாக கல்கி பிறப்பார். இவர் சகல வல்லமையுடன் பட்டுப் பீதாம்பரம் அணிந்து, மார்பில் துளசி மாலை துலங்க, கையில் வாளும் கேடயமும் தரித்து வெண்புரவி மீதேறி புறப்பட்டு வந்து, சிரஞ்சீவியான பரசுராமரிடம் சென்று பற்பல கலைகள் பயின்று உபதேசம் பெற்றபின், குதிரை மீதேறி வாயு வேகத்தில் மூன்று இரவுகள் உலகை வலம் வருவார். பாற்கடல் வாசனான பரந்தாமன் கோடி சூர்ய பிரகாசமாய் கல்கி அவதாரம் எடுத்து அருளுவார் என ஸ்ரீவிஷ்ணு புராணம் தெரிவிக்கிறது.

ஸ்ரீகல்கி, தர்மத்துக்கு விரோதமாக செயல்படும் அனைத்து கொடியவர்களையும் சம்ஹரித்து, உலகம் முழுவதும் தர்மத்தை நிலை பெறச் செய்தருளுவார் என்பது நம்பிக்கை.

அதன்பின் கல்கி அவதாரம் நிறைவடையும். கலியுகமும் முடிவடையும். பின் புதிய யுகமான சத்ய யுகம் பிறக்கும். அதில் அமைதியும் அன்பும் மட்டுமே மலரும்.

ஒரு கல்பம் 14 மன்வந்திரங்களைக் கொண்டது. ஒரு மன்வந்திரம் 71 சதுர்யுகங்களைக் கொண்டது. நான்கு யுகங்களைக் கொண்டது ஒரு சதுர்யுகம் (கிருத யுகம், திரேதா யுகம், துவாபர யுகம், கலி யுகம்).

தற்பொழுது நடைபெறுவது  (7ஆம்) மன்வந்திரம் - 28ஆவது சதுர்யுகத்தின் கலியுகம். இதன் முடிவில் 29ஆவது சதுர்யுகத்தின் முதல் யுகமான 'கிருத யுகம்' துவங்கும்.

தர்மவிரோத செயல்களைக் காணும் பொழுது 'கலி முற்றிவிட்டது' என்று பொதுவாகக் குறிப்பிடும் வழக்கம் உள்ளது. உண்மையில் இவை எல்லாவற்றையும் தாண்டி நிற்கும் அளவுக்கு கலியுகத்தின் கொடுமைகள் முற்ற இன்னும் எண்ணற்ற ஆண்டுகள் மீதமுள்ளது. இப்போதே நாம் அதை சிறிது சிறிதாக உணர முடியும்.

கல்கி அவதாரம் தோன்றும் முன்பே அவருக்கு ஆலயம் அமைத்து வழிபாடும் செய்கின்றனர். திருவனந்தபுரத்தில் முட்டத்தரா எனும் இடத்தில் கல்லுமேடு சந்திப்பின் அருகே கல்கி ஆலயம் அமைத்துள்ளனர். இவ்வாலயத்தின் பெயர் ஸ்ரீ மகாவிஷ்ணு- தேவி க்ஷேத்திரம் என்பதாகும்.

நடைபெறும் அதர்ம நிகழ்வுகளை, கலிகாலம் என்று சொல்லி கண்டும் காணாது இருந்து விடாமல், ஒவ்வொருவரும் தங்கள் சக்திக்கு உட்பட்டு, இயன்ற அளவில் அதர்மத்தை எதிர்த்து, தர்மத்தை நிலை நிறுத்த முயல வேண்டும் என்பதே இறைவனின் எதிர்பார்ப்பு.

 
ஆன்மிகம் © 2011 - WebSite & Designig by Yazhini