
ஒருமுறை, பிரம்மன் ஒரு பெரிய வேள்வியைச் செய்தான். அந்த வேள்விச் சாலையிலிருந்த கும்பத்தில் சிவபெருமானின் ஓர் அம்சம் ஒளிவடிவமாக இறங்கியது. வேள்வியின் முடிவில் அது முனிவனாக உருப்பெற்றது. அட்சமாலை, கமண்டலம், யோக தண்டம், ஞானமுத்திரை ஆகியவற்றைத் தாங்கியவராக வெளிப்பட்ட அவரைக் கும்பமுனி என்றும் குடமுனி என்றும் தேவர்கள் போற்றித் துதித்தனர்.
பிறக்கும்போதே ஞானஒளியைத் தன்னகத்தே கொண்டிருந்த தால் அவரை அகஸ்தியன் என்றனர். அவர் குள்ளமான உருவமுடையவராக இருந்ததால் குறுமுனி என்றும் அழைக்கப்பெற்றார். அவர் சிவபெருமானைக் குறித்துக் கடுந்தவம் செய்தார். சிவபெருமான் அவர் முன்னே தோன்றி, அவரை முனிவர்களில் சிறந்தவராகவும் நட்சத்திரமாக ஒளிரவும் அருள்புரிந்தார்.
ஒருசமயம் அகத்திய முனிவர் ஒரு காட்டைக் கடந்து கொண்டிருந்தார். அக்காட்டில் அநேக முனிவர்கள் தலைகீழாகத் தொங்கிக்கொண்டிருந்தனர். அவர்களிடம் அகத்தியர், ``நீங்கள் ஏன் இப்படித் தொங்கிக்கொண்டிருக்கிறீர்கள்?'' என்று கேட்டார். அவர்கள், ‘‘அன்பனே, எமது வம்சத்தில் தோன்றிய அகத்தியன் என்பான், தனது இல்லறக் கடமைகளைச் செய்யாது இருக்கிறான். அவன் இல்லறம் உகுந்து உரிய கடன்களைச் செய்தால்தான் நாங்கள் சொர்க்கம் புக முடியும்” என்று கூறினர்.
அதைக் கேட்ட அகத்தியர் அவர்களைப் பணிந்து, ``நான்தான் அந்த அகத்தியன். உங்கள் விருப்பத்தை உடனே நிறைவேற்றுவேன்” என்று கூறினார். பின்னர் அகத்தியர் விதர்ப்ப நாட்டு இளவரசியான லோபாமுத்திரையை மணந்து கொண்டு இல்லறம் நடத்திவந்தார். அதனால் அவருடைய முன்னோர்கள் சுவர்க்கம் புகுந்தனர். மக்களுக்கு இன்னல் விளைந்தபோதெல்லாம் அவற்றை விலக்கி அருள்புரிந்துள்ளார்.
முனிவர்களுக்குத் தீங்குசெய்து அவர்களைக் கொன்றுவந்த வில்லவன் வாதாபியை அடக்கியது; சூரியனின் போக்கைத் தடுமாறவைத்த விந்திய மலையை அடக்கியது; இந்திரனுக்கு எதிராகப் போரிட்டுக் கடலில் ஒளிந்துகொண்ட விருத்திரா சூரனைக் கண்டுபிடிக்க கடலை ஒருமுறை உள்ளங்கையில் அடக்கிக் குடித்து முடித்தது; ராவணனை இசையால் வென்று இலங்கைக்கு ஓட்டியது முதலியன இவருடைய அருஞ் செயல்களாகும்.
பின்னும் அகத்தியர் அநேக தவங்களைச் செய்து அஷ்டமா ஸித்திகள் கைவரப்பெற்றார். மனிதகுலம் மேன்மை அடையும் பொருட்டுத் தமிழ்மொழியை வளப்படுத்த இலக்கணங்களைச் செய்தார். அநேக ஜோதிட, வைத்திய, ஞானநூல்களை இயற்றி அளித்தார். பல அரிய செயல்களைச் செய்தபின், பொதிகை மலையில் அருவநிலையில் வாழ்ந்து வருகிறார். அவ்வப்போது வெளிப்பட்டு அன்பர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.
பொதிகை மலை மட்டுமல்ல, அகத்தியர் போற்றி வழிபட்ட திருத்தலங்களும், அவரைப் போற்றும் திருத்தலங்களும் அகத்திய முனிவரின் திருவருள் நிறைந்து திகழ்கின்றன.
0 Facebook:
Post a Comment