Banner 468 x 60px

 

Monday, November 10, 2014

தோஷம் போக்கும் நவக்கிரக பரிகாரங்கள்

0 Facebook
சூரியன் :

பித்ருக்களுக்கு நாம் செய்யும் திதியின் பலனை நம்மிடமிருந்து பெற்று பித்ரு தேவதைகளின் வழியாக இறந்து போன நமது மூதாதையர்களிடம் சேர்ப்பவர் சூரியன். தினந்தோறும் அதிகாலையில் நீராடியவுடன் கிழக்கு திசையை நோக்கி சூரிய பகவானை வணங்குவதும், ஏதேனும் புண்ணிய நதிகளில் நீராடியவுடன் முழங்கால் அளவு தண்ணீரில் நின்று கொண்டு சூரியனை நோக்கி இரண்டு கைகளிலும் நீர் விடுவது சூரியனுக்கு மிகவும் உகந்தது.

சந்திரன் :

சந்திரனின் பலம் அதிகரிக்க மனித மூளையின் செயல்பாட்டு திறன் அதிகரிக்கிறது. வளர்பிறையில் மனிதனின் அறிவாற்றல் அதிகரிக்கிறது. தேய்பிறையில் அறிவாற்றல் குறைகிறது. அதனால்தான் நல்ல காரியங்களை வளர்பிறையில் துவங்குகிறார்கள். திங்கட்கிழமையில் விரதமிருந்து ஏதாவது கோவிலுக்குச் சென்று மாலையில் தீபம் ஏற்றி வழிபடுவது சந்திர தோஷத்தை நீக்கும் பரிகாரம் ஆகும்.

செவ்வாய் :

பகைவரைக் கண்டு அஞ்சாத உள்ளத்தை தருபவர் செவ்வாய். செவ்வாய் தோஷம் என்பதைக் கேட்டாலே பெண்ணைப் பெற்றவர்கள் பதறுவார்கள். செவ்வாய் கிழமைகளில் விரதமிருந்து அருகில் உள்ள கோவில்களில் தீபமேற்றுவது செவ்வாய் தோஷத்தால் ஏற்படும் பாதிப்புக்களைக் குறைக்கும்.

புதன் :

வாக்கு வன்மை, பேச்சினாலே பிறரை வசீகரிக்கும் திறன், பண்பு, கணிடம், ஜோதிடம், சிற்பம், பன்மொழிப் புலமை தருவது, எழுத்தாற்றல், கவிபாடும் திறன் ஆகியவற்றைத் தருபவர் புதன். புதன் நமது ஜாதகத்தில் தோஷமாக இருந்தால் கல்வித்தடை ஏற்படும். புதன் கிழமை விரதமிருந்து ஏதேனும் கோவிலில் தீபமேற்றி வழிபடுவது, படிக்க வசதியில்லாத ஏழைக் குழந்தைகளுக்கு உடைகள், புத்தகம், நோட்டுகள், பேனா, பென்சில் போன்றவற்றை வழங்குவது போன்றவற்றால் புதன் தோஷம் நீங்கும். கல்வியறிவு மேம்படும்.

வியாழன் :

திருமணம், குழந்தைப் பேறு இரண்டும் நம் வாழ்வின் மிக முக்கியமான திருப்பங்கள் ஆகும். அவற்றை நமக்குத் தருபவர் வியாழன். வியாழக்கிழமைகளில் விரதமிருந்து மாலை நேரத்தில் ஏதேனும் ஒரு கோவிலில் தீபமேற்றி வழிபடுவதுடன், பெரியவர்கள், துறவிகள், மகான்கள், சாதுக்கள் ஆகியோரை வணங்கி அவர்களின் ஆசியைப் பெறுவதாலும் வியாழனால் ஏற்படும் தோஷங்கள் நீங்கி அனைத்து விதமான நலன்களையும் பெறலாம்.

சுக்கிரன் :

கலையுணர்ச்சி, அழகுணர்ச்சி, காதல், போகம் போன்றவற்றிற்கு அதிபதியாக விளங்குபவர் சுக்கிரன். வாழ்க்கை நமக்குத் தரும் சுகங்களை மன திருப்தியோடு அனுபவிக்க சுக்கிரனின் அருள் வேண்டும். திருமால் சந்நிதியில் விளக்கேற்றி வழிபடுவதுடன் வெள்ளிக்கிழமைகளில் விரதமிருந்து ஏழை சுமங்கலிப் பெண்களுக்கு உடை, ஏழைகளுக்கு அன்னதானம் போன்றவற்றைச் செய்வதால் சுக்கிரன் தோஷம் நீங்கி சுகம் பெறலாம்.

சனீஸ்வரன்  :

நீண்ட ஆயுளையும், நல்ல செல்வத்தையும் வாரி வழங்குபவர் சனீஸ்வரன். நவக்கிரகங்களில் ஈஸ்வரன் பட்டம் பெற்ற ஒருவர் இவரே. சனிக்கிழமைகளில் விரதமிருந்து மாலையில் ஏதாவது ஒரு கோவிலுக்குச் சென்று விளக்கேற்றி வழிபடுவதுடன் எள் கலந்த சாதம் படைத்து நைவேத்தியம் செய்வது, ஏழைகளுக்கு அன்னதானம் செய்வதுடன், தினந்தோறும் காக்கைக்கு உணவு வைப்பதும் சனீஸ்வரனால் ஏற்படக்கூடிய தோஷங்கள் அனைத்தையும் நீக்கும்.

ராகு :

ஜாதகத்தில் புத்திர தோஷம், களத்திர தோஷம், மாங்கல்ய தோஷம், சயன தோஷம், காலசர்ப்ப தோஷம் இருப்பவர்கள் ராகுவிற்குரிய பரிகாரங்களைச் செய்து கொள்வது நன்மை பயக்கும். அருகில் உள்ள கோவில்களில் எரிந்து கொண்டிருக்கும் விளக்கில் நெய் சேர்த்து வருவது ராகுவிற்குரிய தோஷப் பரிகாரமாக விளங்கும்.

கேது  :

உலக பாசங்களில் அதிக ஈடுபாடு இல்லாமல் ஆன்மீக ஈடுபாடு கொண்டவர்கள் அனைவரும் கேதுவின் அருள் பெற்றவர்களே. பாப விமோசனத்தை நமக்கு அளிப்பவர் கேது. கேதுவினால் தோஷம் ஏற்படுபவர்களுக்கு சரும நோய்கள், பில்லி சூனிய துன்பங்கள் போன்ற தொல்லைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. தினம்தோறும் நல்லெண்ணெய் தீபம் ஏற்றி கேதுவை வழிபடுவதுடன், காஞ்சிபுரத்திற்கு அருகேயுள்ள சித்ரகுப்தர் கோவிலுக்குச் சென்று வழிபடுவதும் கேது தோஷங்களை நீக்கி நிம்மதியான வாழ்வைத் தரும்.

0 Facebook:

Post a Comment

 
ஆன்மிகம் © 2011 - WebSite & Designig by Yazhini