திருச்சி சமயபுரம் அருகில் இந்த புகழ்பெற்ற கோவில் உள்ளது. மத்திய பிரதேச மாநிலம் உஜ்ஜைனி சென்றுதான் காளியை வழிபடவேண்டும் என்ற அவசியமில்லை.
உஜ்ஜைனியில் உள்ள காளிக்கு நிகரான காளியம்மன் சிலை இந்த கோவிலில் உள்ளது. இதை இங்கு கொண்டு வந்ததும் உஜ்ஜைனியை ஆட்சி செய்த விக்ரமாதித்த மாமன்னனேயாவார்.
சக்திக்கு உகந்த ஸ்தலங்களில் தமிழக அளவில் மிகவும் புகழ்வாய்ந்தது சமயபுரம் மாரியம்மன் கோவில். அதற்கு அருகிலேயே அம்மனுக்குரிய புகழ் வாய்ந்த ஸ்தலமாக மாகாளிக்குடி என்ற இடத்தில் அமைந்துள்ளது. சமயபுரம் கோவிலில் இருந்து அரை கிலோ மீட்டர் தூரத்தில் இக்கோவில் உள்ளது.
விக்கிரமாதித்தனால் கொண்டுவரப்பட்ட சிலை உள்ள கோயில். இங்கு அம்பிகை அர்த்தநாரீஸ்வர கோலத்தில் ஒரு மார்பு இல்லாமல் காட்சிதருகிறார்.
இங்குள்ள அம்பாள் ஆனந்த சவுபாக்கிய சுந்தரிக்கு என்ற பெயரில் அழைக்கப்படுகிறாள். இவளுக்கு மூன்று கைகள் உள்ளன. பொதுவாக அம்மனுக்கு இரண்டு, நான்கு, எட்டு என்ற விதத்தில் கைகள் இருக்கும். ஆனால் ஒற்றைப்படையாக மூன்று கைகள் உள்ள அம்மன் இங்கு மட்டுமே இருப்பது குறிப்பிடத்தக்கது. வேதாளத்திற்கு இங்கு சிலை இருப்பது குறிப்பிடத்தக்கது.
சீனிவாச பெருமாள் லட்சுமி தாயாருடன் எழுந்தருளி உள்ளார். மதுரையின் காவல் தெய்வமான மதுரை வீரன் இங்கும் பொம்மி, வெள்ளையம்மாளுடன் அருள்பாலிக்கிறார்.
இந்த கோயிலில் உஜ்ஜைனி காளியம்மனும் காட்சி தருகிறாள். விக்கிரமாதித்தன் இந்த சிலையை இக்கோயிலுக்கு தந்ததாக கூறப்படுகிறது. இதை மெய்ப்பிக்கும் வைகயில் விக்கிரமாதித்தனுடன் வந்த வேதாளமும், விக்கிரமாதித்தனின் மதியுக மந்திரியான கழுவனும் இங்கு வந்துள்ளனர்.
வேதாளத்திற்கும் கழுவனுக்கும் இங்கு சிலைகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.
வேறு எந்த தலத்திலும் வேதாளத்திற்கு சிலை கிடையாது. இவர்களில் கழுவனை வழிபட்டால் விடாமுயற்சி செய்யும் தன்மையைப் பெற்று, எதிலும் வெற்றி பெறும் திறன் உண்டாகும்.
"கழுவன் சாதனை' என்ற வார்த்தை இப்போதும் வழக்கில் உள்ளது. இதற்கு "தனது நிலையிலேயே நிலைத்திருத்தல், எதற்கும் அசையாமல் இருத்தல் என்று பொருள்.
ஸ்தல வரலாறு
மத்திய பிரதேசம் உஜ்ஜயினியைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்து வந்தவர் விக்ரமாதித்த மகாராஜா. காட்டில் ஆறு மாதமும், நாட்டில் ஆறு மாதமும் ஆட்சி செய்வது வழக்கம்.
இவரது குலதெய்வம் உஜ்ஜயினி மாகாளி. இவளைத்தான் தமிழகத்தில் "உச்சினி மாகாளி, உச்சிமாகாளி என்று பெயரிட்டு அழைக்கின்றனர். ஒரு சமயம் காட்டில் ஆட்சி செய்ய, காவிரிக்கரையிலுள்ள மகாகாளிகுடி காட்டுக்கு தான் வழிபட்ட காளி சிலையுடன் வந்தார்.
இங்கே தங்கி பூஜை செய்து கொண்டிருந்தார். அவர் நாடு திரும்பும்போது, தான் வழிபட்ட சிலையை எடுக்க முயன்றார். முடியவில்லை. அம்பாளைத் தன்னுடன் வரும்படி எவ்வளவோ கெஞ்சினார். அப்போது அவர் முன் தோன்றிய காளி, இந்த இடத்திலும் தனது சக்தி தங்கும் என்று கூறி விட்டாள். அதைத் தொடர்ந்து அம்பாளுக்கு கோயில் கட்டி வழிபாட்டை துவக்கினார்.
சிவனும் சக்தியும் எவ்வித வேறுபாடும் இல்லாதவர்கள் என்பதை எடுத்துக்காட்டும் வகையில் அர்த்தநாரீஸ்வர வடிவம் அமைந்தது. பார்வதிதேவி தனக்கும் சிவனைப் போலவே பூஜைகள் நடக்கவேண்டும் என கேட்டதன் விளைவாக இவ்வாறு நடந்ததாக சொல்வர்.
இதை மெய்ப்பிக்கும் வகையில் அம்பாளுக்குள் சிவன் அடங்கும் விதத்தில் மாகாளிக்குடியில் ஆனந்த சவுபாக்கிய சுந்தரியாக அம்பிகை எழுந்தருளினாள்.
செல்லும் வழி
திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் இருந்து சமயபுரம் செல்லும் பேருந்துகளில் ஏறி சமயபுரத்தில் இறங்கி அரை கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள மாகாளிக்குடி கோவிலுக்கு ஆட்டோக்களில் செல்லலாம்.