Banner 468 x 60px

 

Sunday, March 1, 2015

அபிராமி அந்தாதி

ம்பிகையைப் பற்றிய ஓர் அற்புதமான பாடல். இதை எழுதியவர், அம்பிகையை நேரில் தரிசித்த அபிராமி பட்டர். இவர் பெயரைச் சொன்னதும், அபிராமி அந்தாதிதான் நினைவுக்கு வரும். அபிராமி அந்தாதி உயர்ந்ததுதான். சந்தேகம் இல்லை. ஆனால், அதில் உள்ள பல பாடல்களுக்கு விளக்க உரை இருந்தால்தான் அர்த்தம் புரியும். ஆனால், படிக்கும்போதே எளிமையாகப் பொருள் புரியும் வண்ணம், அதேநேரம் நேருக்கு நேராக அம்பிகையிடம் முறையிடும் விதமாக அமைந்துள்ள பல பாடல்களையும் அபிராமி பட்டர் எழுதியுள்ளார்.

அபிராமி அந்தாதியைப் படிப்பவர், பாராயணம் செய்பவர், அவள் புகழ் கேட்பவர், போற்றி வணங்குபவர் அனைவரும் எல்லா நலன்களும் பெறுவார்கள். அவர்களுக்கு வாழ்க்கையில் எந்நாளும் துன்பமில்லை; இன்பமே அடைவார்கள்.

 "தனம் தரும்' என்ற பாட்டில் அபிராமி தேவி அன்பர்களுக்கு "நல்லன எல்லாம் தரும்' என்று மொழிந்து, விரிவாகப் பாடிய அபிராமி பட்டர், "நூற்பயன்' பாட்டில் ரத்னச் சுருக்கமாக அருளியுள்ளார்.  அபிராமி தேவியை வழிபடுவார்க்கு ஒரு துன்பமும் வராது என்று உறுதியுடன் கூறுகிறார். ""முக்கண்ணியைத் தொழுவார்க்கு ஒரு தீங்கில்லையே'' எனக் குறிப்பிடுகிறார்.

அவள் உலகத்தைப் படைத்த தாய்; பராசக்தி. அவள் புகழ், பூத்த மலரின் புதுமணம்போல் எங்கும் பரவி நிறைந்திருக்கிறது. அவள் மாதுளம் பூ போன்ற இளம் சிவப்பு நிறமுடையவள். உலக உயிர்கள் அனைத்தையும் காத்தருள்கின்றவள். ஐந்து மலர்க் கணைகள், பாசம், அங்குசம், கரும்பு இவைகளை அழகிய கைகளில் சேர்த்தவள். கதிரவன், மதி, கனல் மூன்றையும் கண்களாகக் கொண்டவள்.

 இத்தகு சிறப்புடைய அபிராமியை வணங்கித் துதிப்பவர்க்கு ஒரு சிறு துன்பங்கூட வரவே வராது என உறுதிபடக் கூறுகிறார் அபிராமி பட்டர். அபிராமிபட்டர் "ஒரு தீங்கில்லையே' என நூற் பயனைப் பற்றி வரும் பாட்டில் சொல்லியிருக்கிறார்.

 இருள் இல்லை என்றால் வெளிச்சம்தான். தாழ்வு இல்லையென்றால் வாழ்வுதான். ""ஒரு தீங்கில்லையே'' என்றால் ""எல்லாம் நன்மையே'' என்பதுதான் பொருள்.

அபிராமி அந்தாதி வழி, அபிராமியை வழிபடுவோர்க்கு வாழ்வில் எக்காலத்திலும் எந்நிலையிலும் மங்கலங்களே பொங்கி வரும். மாசற்ற வாழ்க்கை அமைந்து அவர்கள் தேசுடன் புகழ் வீசும் வண்ணம், மண்ணில் நல்ல வண்ணம் வாழ்வார்கள் என்று நிறைவு செய்கிறார் அபிராமி பட்டர்.

இருளிலிருந்து ஒளிக்கும் பொய்மையிலிருந்து சத்தியத்துக்கும் பிறப்பு-இறப்பிலிருந்து பெருவாழ்வுக்கும் அழைத்துச் செல்லும் நூல்.   அபிராமி அந்தாதியை நாள்தோறும் மறவாமல் பயின்று நலன்களுடன் வாழ்வோம்.


கணபதி காப்பு

தாரமர் கொன்றையும் சண்பகமாலையும் சாத்தும் தில்லை
ஊரார் தம் பாகத்து உமைமைந்தனே! உலகு ஏழும் பெற்ற
சீர் அபிராமி அந்தாதி எப்போதும் என் சிந்தையுள்ளே
காரமர் மேனிக் கணபதியே! நிற்க கட்டுரையே.

பொருள்:  கொன்றைப்பூ மாலை அணியும் தில்லை வாழ் கூத்தபிரானுக்கும் சண்பகப்பூ மாலையணிந்து அவரின் இடப்பாகத்தில் அமைந்த உமையவளுக்கும் தோன்றிய மைந்தனே! கருநிறம் பொருந்திய கணபதியே! ஏழு உலகங்களையும் பெற்ற சிறப்புமிக்க அன்னையின் பேரில் நான் தொடுக்கும் அபிராமி அந்தாதி என் நெஞ்சில் நிலைத்திருக்க அருளுவாயாக!

தொடரும் ...........
 
ஆன்மிகம் © 2011 - WebSite & Designig by Yazhini