குழந்தை பிறந்ததும் ஜாதகம் கணிக்க நாள், நட்சத்திரம் பார்ப்பது வழக்கம். ஆடி மாதத்தில் ஆண் குழந்தை பிறந்தாலும், பெண் குழந்தை பிறந்தாலும் அதனால் தோஷம் வருமோ என்று கவலைப்படுவார்கள். ஆனால் இனி கவலைப்படத் தேவையில்லை. தேடிப்பிடித்து தெய்வங்களை வழிபட்டால் ஆடியில் பிறந்தவர் களைத் தேடி அதிர்ஷ்டம் வந்து சேரும். ஆடி மாதத்தில் பிறந்த எத்தனையோ பேர் இன்று கோடீஸ்வரர்களாக வாழ்கிறார்கள். எல்லாவற்றிற்கும் நவக்கிரகங்கள் தான் காரணமாக அமைகின்றன.
'நாளும், கோளும் செய்வதை நல்லவன் கூட செய்ய மாட்டான்' என்பது பழமொழி. அப்படிப்பட்ட கோள்களில் ராஜ கிரகமாகப் போற்றப்படும் சூரியன், கடக ராசியில் சஞ்சரிக்கும் காலம் தான் ஆடி மாதமாகும். இந்த மாதம் ஆண் குழந்தைகள் பிறந்து விட்டால், 'பெற்றோர்களை ஆட்டி வைக்கும்' என்று சொல்வார்கள்.
பெற்றோர்கள் நல்ல செல்வ வளத்தோடும், செல்வாக்கோடும் இருக்கும் நேரத்தில் ஆடி மாதத்தில் ஒரு குழந்தை பிறக்கின்றது என்று வைத்துக் கொள்வோம். அந்தக் குழந்தை பிறந்த பிறகு அவர்களுக்கு தொழிலில் இழப்புகள் ஏற்பட்டால் கூட, தங்கள் சுயஜாதகத்தின் தெசாபுத்தி பலம்இழந்திருக்கிறதா என்பதை அறியாமல் பிறந்த குழந்தை மீது குற்றம் சுமத்துவது சமூக வழக்கம்.
குழந்தை பிறந்த நேரத்தில் ராசிநாதன், லக்னாதிபதி ஆகியவற்றின் பலமறிந்து அதற்கான பரிகாரங்களையும், வழிபாடுகளையும் மேற்கொண்டால் பெற்றோர்களுக்கும் பெருமை வந்து சேரும். பிரச்சினைகள் இல்லாமல் பிள்ளைகளும் கல்வியில் சிறந்து விளங்க வழிகோலும்.
பொதுவாக ஆடி மாதத்தில் பிறந்தவர்கள் பலர் மேதைகளாகவும், தலைசிறந்த அறிஞர்களாகவும் விளங்குகிறார்கள். பிடிவாத குணத்தை மட்டும் இவர்கள் தளர்த்திக் கொண்டால் பெரிய அளவில் முன்னேற்றம் ஏற்படும்.
பொதுவாக ஆடி மாதத்தில் பிறந்த பிள்ளைகள் பெற்றோர்களின் சொற்களைக் கேட்காமல் ஆடி, ஓடிக்கொண்டு திரியும் சுட்டிப் பிள்ளைகளாக விளங்குவர். இளம் பருவத்திலேயே நல்ல அறிவு முதிர்ச்சியைப் பெறுவர். எதையும் ஒருமுறை பார்த்தாலே அதை அடிமனதில் ஆழமாக பதித்து வைத்துக் கொள்வர். இவர்களுக்கு மூளை பலம் அதிகம் உண்டு.
வழக்குகள் எத்தனை வந்தாலும் கடைசியில் இவர் களுக்குத் தான் வெற்றி கிடைக்கும். இவர்களது சுறு சுறுப்பு மற்றவர்களைக் கவர்ந்திழுக்கும். பார்ப்பதற்கு அவசரக்காரர்களைப் போல தோற்றமளித்தாலும் எதையும் ஆலோசித்து முடிவெடுப்பர். எதிர்ப்புகளைத் தாங்கிக் கொள்ளும் ஆற்றல் இவர்களுக்கு உண்டு. வாழ்வில் சுகபோகமாக வாழ வேண்டும் என்று விருப்பப்படுவர்.
முன்பின் அறிமுகம் இல்லாதவர்களிடம் கூட சாமர்த்தியமாகப் பேசி காரியங்களை எளிதில் சாதித்து விடுவார்கள். தூக்கத்தையும், துக்கத்தையும் ஒதுக்கி வைத்து விட்டு துள்ளித்திரியும் செயல்வீரர்களாக விளங்குவர்.
திருமண விஷயத்தில் மற்றும் பெற்றோர்களின் சொல்லிற்கு கட்டுப்படுவார்களா? என்பது சந்தேகம் தான். இவர்களிடம் கொடுத்த வாக்கை நிறைவேற்றாமல் தப்பிக்க முடியாது. தங்களிடம் பணம் சம்பாதிக்கும் திறமை இருப்பதை வெளிக்காட்டிக் கொள்ள மாட்டார்கள். எளிமையாகவே எப்பொழுதும் காட்சியளிப்பர்.
இவர்கள், கட்டிடத் தொழிலுக்குரிய பொருட்கள் விற்பனை நிலையம், மளிகை, பதப்படுத்தாத உணவுப் பொருட்கள், தண்ணீர் வஸ்துக்கள் வியாபாரம், நூல், துணி விற்பனை நிலையங்கள், ஆயத்த ஆடையகம், மின்சாரம் மற்றும் திரையரங்கத் துறைகளைத் தேர்ந் தெடுத்து தொழில் செய்து வளர்ச்சியும், வருமானமும் காண்பர்.
இந்த ஆடி மாதம் பிறந்த ஆண், பெண் இருபாலரும் ஆவணி, கார்த்திகை, தை ஆகிய மாதங்களில் பிறந்தவர்களை வாழ்க்கைத் துணையாகத் தேர்ந்தெடுத்துக் கொண்டால் வாழ்வில் நலமும், வளமும் வந்து சேரும்.
நீங்கள் ஆடியில் பிறந்தவர்களாக இருந்தாலும், உங்கள் குழந்தைகள் ஆடி மாதம் பிறந்திருந்தாலும் அவர் களின் ராசி அதிபதி, லக்னாதிபதியின் நிலைமைக்கேற்ற ஆலய வழிபாடுகளைத் தேர்ந்தெடுத்துச் சென்று வழிபட்டு வந்தால் கண்டிப்பாக கோடி, கோடியாய் நன்மை கிடைக்கும். ஆடியில் பிறந்தவர்களை எண்ணி யாரும் பயப்படத் தேவையில்லை. அதிர்ஷ்டம் தானே தேடிவரும்.