சிவனுக்கு கொண்டைக்கடலை:
திருநெல்வேலியில் இருந்து தூத்துக்குடி செல்லும் வழியில், 17 கி.மீ., தூரத்திலுள்ள முறப்பநாட்டில் உள்ள கைலாசநாதர், வியாழனுக்குரிய அதிபதியாக அருளுகிறார். அகத்தியரின் சீடரான உரோமச முனிவருக்கு, சிவன் குரு அம்சமாக இருந்து காட்சி கொடுத்த தலம். இந்த சிவனுக்கு, மஞ்சள் வஸ்திரம், கொண்டைக்கடலை மாலை அணிவித்து வழிபடுவர். கோயில் அருகில் ஓடும் தாமிரபரணி நதி, வடக்கிலிருந்து தெற்கு நோக்கி ஓடுகிறது. இதை “தட்சிண கங்கை’ என்பர். இதனால், இது கிரகதோஷம் நீக்கும் தலமாக உள்ளது.
பெருமாளுக்கு மஞ்சள் வஸ்திரம்:
திருநெல்வேலி- திருச்செந்தூர் ரோட்டிலுள்ள ஆழ்வார்திருநகரி ஆதிநாதப்பெருமாள் கோயில் குருவிற்கு உரியது. இங்கு பெருமாள், வியாழன் கிரகத்திற்கு அதிபதியாக அருளுகிறார். பொதுவாக, தெட்சிணாமூர்த்திக்குத்தான் மஞ்சள் வஸ்திரம் அணிவித்து, கொண்டைக்கடலை (சுண்டல்) மாலை அணிவித்து வழிபடுவர். ஆனால், இத்தலத்தில் பெருமாளுக்கு வழிபாட்டைச் செய்கின்றனர். குரு பெயர்ச்சியால் பரிகாரம் செய்ய வேண்டியவர்கள், வியாழக்கிழமைகளில் இவரை வழிபடுவது விசேஷம்.