Banner 468 x 60px

 

Wednesday, July 15, 2015

அற்புத பலன்தரும் ஆடி அமாவாசை



திதி என்பது சூரியனுக்கும் சந்திரனுக்கும் உள்ள தூரத்தை கோண அளவில் குறிப்பிடும் சொல்லாகும். சூரியனும் சந்திரனும் ஒரே பாகையில் பூமிக்கு நேராக வரும் பொழுது அமாவாசை திதி உண்டாகிறது. சந்திரன் சூரியனில் இருந்து பிரிந்து பூமியைச் சுற்றிவரும் மார்க்கத்தில், பூமிக்கும் சூரியனுக்கும் 180–வது பாகையில் வரும்பொழுது பவுர்ணமி திதி நிகழும்.

திதிகள் பூர்வபக்கத் திதிகள், அபரபக்கத் திதிகள் என இருவகைப்படும். அமாவாசைக்கு அடுத்த பிரதமை முதல் பவுர்ணமி இறுதியாகவுள்ள 15 திதிகளும் பூர்வபக்கம் எனப்படும். பவுர்ணமிக்கு அடுத்த பிரதமை முதல் அமாவாசை இறுதியாகவுள்ள 15 திதிகளும் அபரபக்கம் எனப்படும். பூர்வபக்கம், அபரபக்கம் என்பன முறையே சுக்லபட்சம், கிருஷ்ணபட்சம் என்றும்; வளர்பிறை, தேய்பிறை என்றும் அழைக்கப்படும்.

‘அமா’ என்றால், ஓரிடத்தில் பொருந்தியது (சேர்ந்தது– குவிந்தது) என்று பொருள்படும். ஓர் ராசியில் சூரியன், சந்திரன் இருவரும் சேர்ந்து உறவாகும், வாசியான நாள் ‘அமாவாசி’ எனப்படும்.

சூரியன் ஞானகாரகன், ஆத்மகாரகன் என்று அழைக்கப்படுகிறார். உயிர்களின் ஆத்ம அமைப்பு சூரியனால்தான் நிகழ்கின்றன. ஆண்மை, ஆற்றல், பராக்கிரமம், வீரம், தீரம், தவம் யாவும் சூரியனாலேயே தோன்றுகின்றன.

சந்திரன் மனதிற்கு அதிபதி. மகிழ்ச்சி, தெளிந்த அறிவு, உற்சாகம், இன்பம் முதலியன சந்திரனால் அடையத்தக்கவை. இத்தகைய சூரியர், சந்திரர் ஒரே ராசியில் சஞ்சரிக்கும் நாள் புனிதமான நாள் ஆகும். சகல தேவர் களும் அமாவாசையின் அதிபர்களாவர். சிறப்புமிக்க அமாவாசை தினத்தில் விரதம் மேற்கொள்வது, இறைவனுக்கு மகிழ்ச்சி அளிப்பதும், பெருமை தருவதுமான நன்னாளாகும்.

மாதந்தோறும் வரும் அமாவாசை தினமானது, இறந்த நமது முன்னோர்களை நினைத்து விரதம் அனுஷ்டிக்க ஏற்ற நாளாகும். இவற்றில் தை அமாவாசை, ஆடி அமாவாசை, புரட்டாசி அமாவாசை போன்றவை முக்கியத்துவம் கொண்டவை. மிகவும் விசேஷமானது ஆடி அமாவாசையாகும். ஆடி மாதத்தில் சந்திரன் உச்சம் பெற்ற கடக ராசியில், சூரியன் சஞ்சரிப்பதே இதற்கு காரணம். சூரியன் சிவ அம்சம். சந்திரன் சக்தியின் அம்சம். இந்த  இரண்டு அம்சங்களும் ஆடி அமாவாசை தினத்தில் ஒன்றிணைவதால் ஆடி அமாவாசை முக்கியத்துவம் பெறுகிறது.

இந்த விரதம் நமது முன்னோர்களை வேண்டி வணங்கும் விரதம் என்றாலும், இறந்த தந்தைக்காக பிள்ளைகள் அனுஷ்டிக்கும் விரதம் என்று கூறுவார்கள்.

காலையில் எழுந்து ஆற்றிலோ, குளத்திலோ நீராடிவிட்டு, கரையோரத்தில் அமர்ந்து அந்தணர்களைக் கொண்டு தர்ப்பணம் செய்ய வேண்டும். ஆற்றிலோ, குளத்திலோ நீராட முடியாதவர்கள், வீட்டில் நீராடிவிட்டு அருகில் உள்ள ஆலயத்துக்கு சென்று, அங்கு அந்தணர்கள் மூலம் தர்ப்பணம் செய்யலாம். மூதாதையர்களுக்கு தர்ப்பணம் செய்வதற்கு இந்தியாவில் காசியும், இலங்கையில் கீரி மலைக் கடற்கரையும் விசேஷமான தலங்களாக கருதப்படுகிறது.

வீட்டை சுத்தம் செய்து சமையல் செய்ய வேண்டும். யார், யாரை வணங்க வேண்டுமோ, அவர்களை நினைத்தபடி இலைகளை போட்டு, சமைத்த உணவை அதில் படைத்து தீப– தூபம் காட்டி வழிபட வேண்டும். பின்பு இலையில் இருந்து எல்லா பதார்த்தங்களிலும் சிறிது சிறிது எடுத்துத், தனியாக ஓர் இலையில் வைத்து, காகம் உண்ணக் கூடியதான உயரமான இடத்தில் வைக்க வேண்டும். அவ்வுணவைக் காகங்கள் உண்ணத் தொடங்கிய பின்னர், விரதம் இருப்பவர்களும் வீட்டில் உள்ளவர்களும் உணவை உண்பார்கள். நமது முன்னோர்களே காகங்களாக வந்து, உணவை உண்பதாக நம்பிக்கை இருக்கிறது.

மேற்கண்டவாறு விரதத்தை மேற்கொள்வதால், இறந்த நமது முன்னோர்களின் அருள் பூரணமாக கிடைக்கும் என்பது ஐதீகமாகும்.
 
ஆன்மிகம் © 2011 - WebSite & Designig by Yazhini