வைத்தீஸ்வரன் கோவிலில் பத்ரகாளியம்மனை வழிபடும் குரங்கை கண்டு பக்தர்கள் பரவசம் அடைந்தனர்.
வைத்தீஸ்வரன் கோவில்
நாகை மாவட்டம், சீர்காழி அருகே தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான வைத்தீஸ்வரன் கோவிலில் வைத்தியநாதசாமி, தையல்நாயகி, செல்வமுத்துகுமாரசாமி, விநாயகர், தன்வந்தரி மற்றும் அங்காரகன் (செவ்வாய்), சாமிகள் அருள்பாலித்து வருகின்றனர். இந்த கோவிலுக்கு தினந்தோறும் உள்ளுர் மற்றும் வெளியூர்களில் இருந்து ஏராளமானோர் வேண்டுதல்கள் மற்றும் பரிகாரங்கள் செய்து சாமியை தரிசித்து செல்கின்றனர். இந்த கோவில் வளாகத்தில் சுமார் 50-க்கும் மேற்பட்ட குரங்குகள் வசித்து வருகின்றன. இந்த கோவிலுக்கு வரும் பக்தர்கள் குரங்குகளுக்கு வாழைப்பழம், தேங்காய் போன்ற உணவு பொருட்கள் கொடுத்து மகிழ்வர்.
அம்மனை வழிபடும் குரங்கு
வைத்தியநாதர்சாமி கோவில் பிரகாரத்தில் கிருத்திகை மண்டபத்திற்கு அருகில் பத்ரகாளி அம்மன் தனி சன்னதி கொண்டு அருள்பாலித்து வருகிறார். இந்தநிலையில் நேற்று முன்தினம் மாலை பத்ரகாளி அம்மன் சன்னதிக்கு ஒரு குரங்கு வந்தது. பின்னர் அம்மன் முன்பு அமர்ந்து கொண்டு பக்தர்கள் கைகூப்பி சாமியை வழிபடுவதுபோல் குரங்கும் தன் இரண்டு கைகளையும் கூப்பி சாமியை வழிபட்டது. இதனைக் கண்ட பக்தர்கள் பரவசம் அடைந்தனர். நீண்ட நேரம் அந்த குரங்கு ஒரே இடத்தில் அமர்ந்து எந்தவித சேட்டையும் செய்யாமல் ஆழ்ந்த பக்தியுடன் அம்மனை வழிபட்டு கொண்டு இருந்தது. வழக்கம்போல் இரவு சுமார் 10 மணிக்கு நடைகள் மூடப்பட்டும் தனது வழிபாட்டில் இருந்து சற்றும் கலையாமல் அதே இடத்தில் அமர்ந்து இருந்தது.
பரவசம்
கோவில் பணியாளர்கள் சாமியை வழிபட்டு கொண்டிருக்கும் குரங்கை தொந்தரவு செய்யாமல் பத்ரகாளியம்மன் கோவில் சன்னதியை பூட்டிவிட்டு சென்றுவிட்டனர். மீண்டும் நேற்று காலை கோவில் பணியாளர்கள் பத்ரகாளியம்மன் சன்னதியை திறக்க முற்பட்ட போது, நேற்று முன்தினம் மாலை அமர்ந்து வழிபட்டு கொண்டிருந்த குரங்கு அதே இடத்தில் அமர்ந்து அம்மனை வழிபட்டு கொண்டிருப்பதை கண்டு பரவசமடைந்தார். இந்த செய்தி கோவிலுக்கு வரும் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் இடை«ய் பரவியதால் ஏராளமான பக்தர்கள் பத்ரகாளியம்மனை வழிபடும் குரங்கிற்கு வாழைப் பழம், தேங்காய், சாதங்கள் உள்ளிட்ட உணவு பொருட்களை குரங்கின் அருகில் வைத்தனர். அந்த குரங்கு பக்தர்கள் வழங்கிய உணவு பொருட்களை பெயரளவிற்கு மட்டுமே உண்டுவிட்டு மீண்டும் பத்ரகாளியம்மனை வழிபட தொடங்கியது. இந்த அதிசய சம்பவத்தை பார்ப்பதற்காக ஏராளமான பக்தர்கள் பத்ரகாளியம்மன் சன்னதியின் முன்பு குவிந்தனர்.
பரபரப்பு
ஆனால் அந்த குரங்கு யாரையும் பொருட்படுத்தாமல் தொடர்ந்து பத்ரகாளியம்மனை வழிபட்டு வருகிறது. ஆஞ்சநேயராக பாவித்து வணங்கப்படும் குரங்கு, பத்ரகாளியம்மனை இடைவிடாது வழிபட்டு கொண்டிருப்பது பெரும் ஆச்சரியத்தை பொதுமக்களியே உருவாக்கி உள்ளது. இதனைக் கண்டு பலரும் வியப்படைந்து சென்றனர். இந்த சம்பவம் வைத்தீஸ்வரன்கோவில் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.