ஒரு வீட்டில் துளசி இருந்தால் அங்கு சகல செல்வங்களும் வந்து சேரும் என்று நம்பப்படுகிறது. அதனால் தான் வீட்டு முற்றத்தில் துளசி மாடம் அமைத்து, அதில் துளசிச் செடியையும், அதனுடன் தொட்டாற் சிணுங்கி செடியையும் சேர்த்து நட்டு, நன்னீர்விட்டு வளர்க்க வேண்டும்.
நல்ல தினங்களில் துளசி மாடத்தைச் சுற்றிக் கோலம் இட வேண்டும். இதற்கு தேங்காய், பழங்களுடன், தாம்பூலம் மற்றும் நிவேதனப் பொருட்களைப் படைத்து மலர்வழிபாடு செய்ய வேண்டும். நம் நோக்கம் நிறைவேற துளசி மாடத்தை இருபத்தொரு முறை வலம் வந்து வணங்கினால் பலன் யாவும் கிடைக்கும் என்று புராணங்கள் கூறுகின்றன.
கார்த்திகை மாதத்தில் வட மாநிலங்களில் துளசிக்கும், சாளக் கிராமத்திற்கும் திருமணம் செய்வித்த பின்னரே தம் இல்லத் திருமணங்களை நடத்துகிறார்கள்.
வேர்ப்பகுதியில் சகல புண்ணிய நதிகளும் வாசம் செய்வதும், நடுப்பகுதியில் எல்லா தெய்வங்களும் உறைவதும், வேதங்கள் நான்கினையும் உச்சிப் பகுதியில் கொண்டதுமான புனிதம் நிரம்பிய துளசிச் செடியினை வணங்குகின்றேன்.
என்ற துதியைச் சொல்லி துளசியை வழிபாடு செய்து வந்தால் அது நமக்கு சகல செல்வமும் தரும்.