வீட்டில் பூஜை செய்யும்போது உள்ளன்போடு முறையாக குபேரனை வழிபாடு செய்தால் நாம் எல்லோருமே குபேரர் ஆகலாம். அதற்கான ஒரு ஆன்மிக வழிதான் லட்சுமி குபேர பூஜை. இந்த பூஜை செய்ய விரும்புவர்கள் முதலில் குபேரன் யார் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.
இலங்கைக்கு அரசனாக விளங்கிய இலங்கேஸ்வரனுக்கும் சூர்ப்பனகைக்கும் சகோதரனாகப் பிறந்தவன் குபேரன். இவன் சிவபெருமானிடம் அதிகமான பக்தி கொண்டு விளங்கினான். அதனால் சதா சர்வகாலமும் சிவபெருமானைக் குறித்தும்,பிரம்ம தேவனை நினைத்தும் பல கால தவம் செய்து கொண்டிருந்தான். இதைக் கண்டு மகிழ்ந்த சிவபெருமான் குபேரனை வடக்கு திசைக்கு அதிபதியாக நியமித்துவிட்டார்.
அன்றிலிருந்து செல்வ வளங்களுக்கும் அவன் அதிபதி ஆகிவிட அவனிடம் நவநிதிகளும் சேர்ந்துவிட்டன. ரிக்வேதத்தில் உள்ள துதியின்படி குபேரனும், மகாலட்சுமியும் தனத்திற்கு அதிதேவதைகளாக நியமிக்கப்பட்டுள்ளதால் லட்சுமி தேவியின் அஷ்டமாசக்திகளில் இருவராகிய சங்கநிதி, பதுமநிதி இருவரும் குபேரப் பெருமானுடைய இருபக்கங்களிலும் அருட்செல்வங்களாக நிற்கின்றனர். இந்த குபேரனை பூஜை செய்யும் முறை வருமாறு:-
சிவப்பு நிற பட்டின் மேல் பச்சரிசி பரப்பி, அதன் மேல் பஞ்ச வர்ண நூல் சுற்றப்பட்ட கலச சொம்பை வைத்து அதனுள்ளே தண்ணீர் வார்த்து, தாமரை மலர் பொறித்த தங்கக் காசு அல்லது ஒரு ரூபாய் நாணயம் போட்டு, ஏலக்காய், பச்ச கற்பூரம், குங்குமப்பூ தூள் செய்து இட வேண்டும். பிறகு தேங்காய், மாவிலை கொத்து, பூச்சரம், சந் தனம், குங்குமம் வைத்து கலசத்தை அலங்கரிக்க வேண்டும்.உங்கள் வீட்டில் வலம்புரிச்சங்கு இருந்தால் அதன்மேல் மூன்று பொட்டுகள் வைத்து துளசிநீர் நிரப்பி வைக்க வேண்டும்.
முதலில் மஞ்சள் பிள்ளை யாரைப் பிடித்து வைத்து அதற்கு அருகம்புல், மலர் சாற்றி வழிபட வேண்டும். இரண்டாவது, நவகிரகங்களை எளிய முறையில் வழிபட வேண்டும். மூன்றாவதாக தீபமேற்றி அதில் மஹாலட்சுமியை வரித்து மலர் தூவி வணங்குதல் வேண்டும். பிறகு தூபம் (ஊதுபத்தி) தீபம் (ஒருமுக தீபம்) காட்டுங்கள். லட்டு, ஜிலேபி, மைசூர்பாகு போன்ற மூவகை இனிப்புகள்,மூன்று வகை பூஜையை திவ்யமாக முடித்ததும் பழங்கள் வைத்து பால்பாயசம்,தேங்காய் உடைத்து, தாம்பூலம் வைத்து, நீர் சுற்றி பூஜையை நிறைவு செய்யுங்கள்.
பூஜை நிறைவு பெற்றதும்,மூன்று பெண்களை முப்பெருந்தேவிகளாக நினைத்து மனையில் அமர வைத்து திலகம் இட்டு, பூச்சூட்டி, தாம்பூலம் கொடுங்கள். வீட்டில் குபேர பூஜை செய்யும் ஒரு பெண்மணியை துர்க்கை, லக்ஷ்மி, சரஸ்வதி தேவியர் வாழ்த்தினால் அவருக்கு எல்லாப் பேறுகளும் கிடைத்து விடும். பூஜை திவ்யமாக முடிந்ததும் கலச நீரில் வலம்புரிச்சங்கு நீரைக் கலந்து வீடு முழுவதும் தெளிக்க வேண்டும்.
இந்த பூஜை நிச்சயம் உங்கள் குடும்பத்தை செல்வ செழிப்புக்கு மாற்றும். இந்த பூஜை தவிர குபேர மந்திரத்தை தினமும் சொல்லி வரலாம். இதுவும் குபேரனின் பேரருளைப் பெற நமக்கு உதவும்.