Banner 468 x 60px

 

Tuesday, June 30, 2015

தனுசு

மனிதநேயம் கொண்ட உங்க ளுடைய ராசிக்கு, இதுவரை 8ம் இடத்தில் இருந்து, பலவகைகளிலும் கஷ்டங்களைத் தந்த குருபகவான், 5.7.15 முதல் 1.8.16 வரை உங்கள் ராசிக்கு பாக்கியஸ்தானமான 9ம் வீட்டில் நுழைவதால், புதிய வியூகங்களை அமைத்து வாழ்வில் முன்னேறுவீர்கள். எதிர்பார்ப்புகள் யாவும் வெற்றியடையும். தொலை நோக்குச் சிந்தனை அதிகரிக்கும். தோல்வி மனப்பான்மையில் இருந்தும், எதிர்மறை எண்ணங்களில் இருந்தும் விடுபடுவீர்கள்.
வெகுநாட்களாக தடைபட்டுக் கொண்டிருந்த சுபநிகழ்ச்சிகள்  நல்ல விதமாய் நடந்தேறும். எதிர்பார்த்த வகையில் உதவிகள் கிடைக்கும். பணவரவு அதிகரிக்கும். உங்கள் தகுதிக்கேற்ற வேலை கிடைக்கும். தந்தைவழி உறவினர்களால் ஆதாயமடைவீர்கள். தெய்வ பிரார்த் தனைகளை நிறைவேற்றுவீர்கள்.  
குருபகவான் தனது 5ம் பார்வையால் உங்கள் ராசியைப் பார்ப்பதால், சோர்வு களைப்பு நீங்கும். உற்சாகம் பிறக்கும். வருமானம் கூடும். குடும்பத்திலும் கலகலப்பான சூழ்நிலை உருவாகும். மகளுக்கு நல்ல வரன் அமையும். மகனுக்கு எதிர்பார்த்த நிறுவனத்தில் உத்தியோகம் அமையும்.
உங்கள் ராசிக்கு 3ம் வீட்டை குரு தனது 7ம் பார்வையால் பார்ப்பதால், புதிய முயற்சிகள் யாவும் வெற்றியடையும். இளைய சகோதர வகையில் இருந்து வந்த பிணக்குகள் நீங்கும். திருமணம் தள்ளிப்போனவர் களுக்குத் திருமணம் கூடி வரும்.
குரு தனது 9ம் பார்வையால் உங்களின் 5ம் வீட்டைப் பார்ப்பதால், குழந்தை பாக்கியம் உண்டாகும். பூர்வீகச் சொத்து கைக்கு வரும். வழக்கு சாதகமாகும்.
குரு பகவானின் நட்சத்திர சஞ்சாரம்:
5.7.15 முதல் 6.9.15 வரை குருபகவான் கேதுவின் மகம் நட்சத்திரத்தில் செல்வதால், இக்காலக்கட்டத்தில் வேலைச்சுமை, சற்றே உடல் நலக்குறைவு வந்து நீங்கும். எதிர்பாராத சில வேலைகள் முடியும். சிலர் சொந்தத் தொழில் தொடங்குவீர்கள். மூலம் நட்சத்திரக்காரர்களுக்கு மனஉளைச்சல் அதிகமாகும்.
7.9.15 முதல் 16.11.15 வரை மற்றும் 20.5.16 முதல் 9.7.16 வரை சுக்ரனின் பூரம் நட்சத்திரத்தில் குருபகவான் செல்வதால், உங்கள் செயலில் வேகம் கூடும். பழைய கடன் பிரச்னை கட்டுக்குள் வரும். பணப்புழக்கம் அதிமாகும். பூராடம் நட்சத்திரக்காரர்களுக்கு தோலில் அலர்ஜி ஏற்படக்கூடும்.
17.11.15 முதல் 20.12.15 வரை மற்றும் 10.7.16 முதல் 1.8.16 வரை குருபகவான் சூரியனின் நட்சத்திரமான உத்திரம் 1ம் பாதம் சிம்ம ராசியில் செல்வதால், உங்களுடைய நிர்வாகத் திறமை அதிகரிக்கும். உத்திராடம் நட்சத்திரக் காரர்களுக்குச் சிறுசிறு ஏமாற்றங்கள் வந்து போகும்.
21.12.15 முதல் 19.1.16 வரை உத்திரம் 2ம் பாதம் கன்னி ராசியில் செல்வதால், காலநேரம் பார்க்காமல் உழைக்க வேண்டி வரும்.
குரு பகவானின் வக்ர சஞ்சாரம்:
20.1.16 முதல் 6.2.16 வரை குருபகவான் உத்திரம் நட்சத்திரம் 2ம் பாதம் கன்னி ராசியில் வக்ர கதியில் செல்வதால், அரைகுறையாக நின்ற வேலைகள் முடிவடையும். புது பொறுப்புகள் தேடி வரும்.
7.2.16 முதல் 7.3.16 வரை உள்ள காலக்கட்டத்தில் உத்திரம் 1ம் பாதம் சிம்ம ராசியில் குரு வக்ரமடைவதால், எதிர்பார்ப்புக்கள் தடையின்றி நிறைவேறும். வழக்கில் வெற்றி பெறுவீர்கள்.
8.3.16 முதல் 19.5.16 வரை பூரம் நட்சத்திரத்தில் குரு வக்ர கதியில் செல்வதால், கணவன்மனைவிக்குள் பிரிவு, வீண் வாக்குவாதம், பணப்பற்றாக்குறை வந்து செல்லும்.  
வியாபாரிகளே!  தொழிலில் ஆர்வம் பிறக்கும். பெரிதாக முதலீடு செய்து போட்டியாளர்களை திகைக்கச் செய்வீர்கள். புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். பழைய பாக்கிகள் வசூலாகும். கடையை நவீனமாக்குவீர் கள். பழைய சரக்குகளை தள்ளுபடி விலைக்கு விற்றுத் தீர்ப்பீர்கள். பெட்ரோகெமிக்கல், டிராவல்ஸ், உணவு, கட்டிட உதிரி பாகங்களால் ஆதாயமடைவீர்கள்.
உத்தியோகஸ்தர்களே! இனி உங்கள் திறமைக்கு அங்கீகாரம் கிடைக்கும். எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். உயரதிகாரிகள் உங்களுக்கு முக்கியத்துவம் தருவார்கள். பணி நிரந்தரமாகும். சம்பள உயர்வு உண்டு.
மாணவமாணவிகளே! ஆசிரியர்கள் வியக்கும்படி அதிக மதிப்பெண் பெற்று உயர்கல்வியில் வெற்றி பெறுவீர்கள். எதிர்பார்த்த கல்வி நிறுவனத்தில் இடம் கிடைக்கும்.  
கலைத்துறையினரே! இதுவரை இருந்த தடைகள் விலகி முன்னேற்றம் உண்டாகும். உங்களின் உழைப்புக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும்.
ஆகமொத்தம் இந்த குருமாற்றம் உங்கள் ஆற்றலை ஒருமுகப்படுத்துவதுடன் பணவரவையும், அதிரடி முன்னேற்றங்களையும் தருவதாக அமையும். 
பரிகாரம்: அமாவாசை  அல்லது சனிக்கிழமைகளில், ஈரோடு மாவட்டம், தாராபுரத்தில் அருளும் ஸ்ரீ தேவி- ஸ்ரீ பூமா தேவி சமேத உத்திர வீரராகவப் பெருமாளுக்கு நெய் தீபம் ஏற்றிவைத்து வணங்கி வாருங்கள். சாலைப் பணியாளர்களுக்கு உதவுங்கள். தொட்டது துலங்கும்.
 
ஆன்மிகம் © 2011 - WebSite & Designig by Yazhini