குரு பகவான் தனது 5ம் பார்வையால் ஆறாவது வீட்டைப் பார்ப்பதால், கடன் பிரச்னைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். உங்களது எட்டாவது வீட்டை குரு தனது 7ம் பார்வையால் பார்ப்பதால், கல்யாணப் பேச்சு வார்த்தை நல்ல விதத்தில் முடிவடையும். குருபகவான் தனது 9ம் பார்வையால் உங்களது பத்தாவது வீட்டைப் பார்ப்பதால், வேலைக்கு விண்ணப்பித்து காத்திருந்தவர்களுக்கு நல்ல நிறுவனத்திலிருந்து அழைப்பு வரும்.திருமணம் ஆகாத கன்னிப் பெண்களுக்கு நல்ல வரன் அமையும்.
குரு பகவானின் நட்சத்திர சஞ்சாரம்:
5.7.15 முதல் 6.9.15 வரை குருபகவான் கேதுவின் மகம் நட்சத்திரத்தில் செல்வதால், திட்டமிட்ட காரியங்கள் கைகூடும். புது முதலீடுகள் செய்து சொந்தமாகத் தொழில் தொடங்குவீர்கள். மகளுக்கு நல்ல வரன் அமையும்.
7.9.15 முதல் 16.11.15 வரை மற்றும் 20.5.16 முதல் 9.7.16 வரை உங்களின் சுகாதிபதியும்லாபாதிபதியுமான சுக்ரனின் பூரம் நட்சத்திரத்தில் குருபகவான் செல்வதால், தாயாரின் ஆரோக்கியம் சிறக்கும். தாய்வழி சொத்துக்கள் கைக்கு வரும்.
17.11.15 முதல் 20.12.15 வரை மற்றும் 10.7.16 முதல் 1.8.16 வரை குருபகவான் உங்கள் தனாதிபதி சூரியனின் நட்சத்திரமான உத்திரம் 1ம் பாதம் சிம்ம ராசியில் செல்வதால், எதிர்பார்த்த வகையில் பணவரவு உண்டு.
21.12.15 முதல் 19.1.16 வரை உத்திரம் 2ம் பாதம் கன்னி ராசியில் செல்வதால், இனம்தெரியாத சின்னச் சின்ன கவலைகள் வந்து போகும்.
குரு பகவானின் வக்ர சஞ்சாரம்:
20.1.16 முதல் 6.2.16 வரை குருபகவான் உத்திரம் நட்சத்திரம் 2ம் பாதம் கன்னி ராசியில் வக்ர கதியில் செல்வதால், இக்காலக்கட்டத்தில் அரசால் அனுகூலம் உண்டு. சொத்து சேர்க்கை உண்டாகும்.
7.2.16 முதல் 7.3.16 வரை உள்ள காலக்கட்டத்தில் உத்திரம் 1ம் பாதம் சிம்ம ராசியில் குரு வக்ரமடைவதால், அரசாங்கத் தாலும், அதிகாரப் பதவியில் இருப்பவர்களாலும் ஆதாயம் உண்டு.
8.3.16 முதல் 19.5.16 வரை பூரம் நட்சத்திரத்தில் குரு வக்ர கதியில் செல்வதால், வீண் அலைச்சல், தர்ம சங்கடமான சூழ்நிலைகள், தாயாருக்கு உடல்நலக்குறைவு வந்து போகும்.
வியாபாரிகளே! உங்களுக்கு லாபம் கூடும். தேங்கிக் கிடந்த சரக்குகளை புதிய சலுகைகளை அறிவித்து விற்றுத் தீர்ப்பீர்கள். கடையை பிரபலமான இடத்துக்கு மாற்றுவது, விரிவுபடுத்துவது போன்ற முயற்சிகள் நல்ல விதத்தில் முடியும். வேலையாட்கள் இனி பொறுப்பாக நடந்து கொள்வார்கள். தள்ளிப் போன ஒப்பந்தங்களும் கையெழுத்தாகும். வியாபாரத்தில் பிரச்னை ஏற்படுத்திய பங்குதாரர்கள் விலகி, புதிய பங்குதாரர்கள் சேருவார்கள். முக்கிய பிரமுகர்கள் உங்களுடைய வாடிக்கையாளர்கள் ஆவர். கெமிக்கல், கல்வி நிறுவனங்கள், துரித உணவகம், கமிஷன் வகைகளால் லாபம் அடைவீர்கள்.
உத்தியோகஸ்தர்களே! மற்றவர்களின் வேலைகளையும் சேர்த்துப் பார்த்து இரவு பகலாக உழைத்தும் பலன் இல்லாத நிலை இனி மாறும். இழந்த சலுகைகளை மீண்டும் பெறுவீர்கள். உங்களைக் குறை கூறிக் கொண்டிருந்த உயரதிகாரி வேறு இடத்துக்கு மாற்றப்பட்டு உங்களை மதிக்கும் புது அதிகாரி அமைவார். ஓரங்கட்டி ஒதுக்கப்பட்டிருந்த உங்களுக்கு முக்கியத்துவம் தருவார்கள். எதிர்பார்த்த சம்பள உயர்வு, புது வாய்ப்புகளெல்லாம் இனி கிடைக்கும். பதவி உயர்விற்காக தேர்வெழுதி காத்திருந்தவர்களுக்கு இனி பதவி உயர்வு தடையின்றி கிட்டும். பணியும் நிரந்தரமாகும்.
மாணவமாணவிகளே! நினைவாற்றல் கூடும். சக மாணவர்களின் சந்தேகங்களைத் தீர்த்து வைக்குமளவிற்கு வகுப்பறையில் மதிப்பு கூடும். ஆசிரியர் பாராட்டும்படி நடந்துக் கொள்வீர்கள். தேர்வுகளில் நல்ல மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெறுவீர்கள். விளையாட்டில் பதக்கம் வெல்வீர்கள்.
கலைத்துறையினரே! உங்களின் படைப்புகள் பட்டிதொட்டியெங்கும் பாராட்டிப் பேசப்படும்.
இந்த குரு மாற்றம் திசை தெரியாமல் தவித்துக் கொண்டிருந்த உங்களை வெளிச்சத்துக்குக் கொண்டு வருவதுடன், புது பாதையையும் வகுத்துத் தந்து எதையும் சாதிக்க வைப்பதாக அமையும்.
பரிகாரம்: பௌர்ணமி தினங்களில், மாயவரம்-பேரளம் அருகிலுள்ள திருமீயச்சூருக்குச் சென்று, லலிதாம்பிகைக்கு மல்லிகைப்பூ சமர்ப்பித்து வணங்குங்கள். மன வளம் குன்றியவர்களுக்கு உதவுங்கள். மேலும் சாதிப்பீர்கள்.