Banner 468 x 60px

 

Wednesday, December 3, 2014

கண்ணனிடம் வரம்பெற்ற கோகிலவனம்

0 Facebook
ண்ணன் அவதரித்த சமயமது. அவரைக் காண எல்லா தேவர்களும் ஆயர்பாடி வந்தனர். அப்போது சனி பகவானும் கண்ணனைக் காணும் விருப்பத்தில் அங்குவந்தார். ஆனால் யசோதையோ, சனியின் பார்வை கண்ணன்மீது படக்கூடாதென்றெண்ணி அவரை அனுமதிக்கவில்லை.

இதனால் மனம் வருந்திய சனி பகவான் அங்கிருந்து அகன்று, அடர்ந்த ஒரு வனத்துக்குள் சென்று கண்ணனை எண்ணித் தவம் மேற்கொண்டார்.

"எல்லாம் வல்ல பரம்பொருளே! அதர்மத்தை அழித்து தர்மத்தை நிலைநாட்ட நீங்கள் அவதரித்துள்ளீர். தீமையை அழிக்க தண்டனை தரவேண்டியது அவசியம். அப்போதுதான் கெட்டவர்கள் திருந்துவார்கள். தங்களது இந்த அவதார காலத்தில் தர்மத்தைக் காக்கும் பணியைத் தாங்கள் மேற்கொண்டு, கெட்டவர்களை அழிக்கும் பொறுப்பை எனக்குத் தரவேண்டும். தீயவர்களுக்கு மட்டுமே தண்டனை கொடுப்பேன். நல்லவர்களுக்கு- துறவிகளுக்கு எப்போதும் நன்மையே செய்வேன். இந்த வரத்தை எனக்குத் தந்தருள வேண்டும்' என்று வேண்டினார்.

அப்போது கண்ணன் ஒரு குயில் வடிவில் அங்கு தோன்றினார்.


"சனியே, எப்போதும் நடுநிலையோடு செயல்படுபவன் நீ என்பதை அறிவேன். எமது பணியை நீ சரியாகச் செய்துவருகிறாய். 

நல்லவர்களால்தான் தர்மம் நிலைபெறுகிறது. தர்மம் நிலைபெறவே தண்டனை வழங்கப்படுகிறது. அதை ஒரு தந்தையின் நிலையிலிருந்து நீ செய்துவருகிறாய். ஒரு மகன் தீயவழியில் செல்லும்போது, அவனைத் திருத்தி நல்வழிப்படுத்த அவன் தந்தை தண்டனை கொடுக்கிறார். அது மகன்மீதுள்ள வெறுப்பினால் அல்ல. நல்வழியில் செலுத்தவேண்டுமென்பதே நோக்கம். அவ்வகையில் நீ செயல்படுவது போற்றுதலுக்குரியதே. பகைவர்கள் உன்னைப்பார்த்து அஞ்சுவர். நல்லோர்கள் உன்னால் காக்கப்படுவர். எனவே நீ இந்த வனத்திலேயே தங்கி இவ்வுலகை நெறிப்படுத்துவாய். இங்கு எப்போதும் குயிலோசை கேட்கும். இங்குவந்து உன்னை வணங்குவோருக்கு என் ஆசிகள் கிட்டும்' என்று சனி பகவானை ஆசீர்வதிக்கிறார் கண்ணன். அப்போது குழலோசை கேட்கிறது. குயில் வடிவிலிருந்த கண்ணன் மறைந்துவிடுகிறார். சனி பகவான் அங்கேயே அமர்ந்துவிடுகிறார்.

இந்த நிகழ்ச்சி நடைபெற்ற இடம் கோகிலவனம் என்னும் பெயரில் உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ளது. சுமார் இருபது ஏக்கர் பரப்பளவில், மரங்கள், செடிகொடிகள் என்று ரம்மியமாகக் காட்சிதருகிறது இந்த வனம். 

இங்கே மிகப்பழமையான சனி பகவான் ஆலயம் அமைந்துள்ளது. கருவறையில் சனி பகவானின் சிறிய விக்ரகம் காணப்படுகிறது. கருப்பு வண்ண ஆடையுடுத்தி, வாள், அம்பு ஏந்தி காகத்தின்மீது அமர்ந்த கோலம்.

அருகே இரண்டு குளங்கள் உள்ளன. பக்தர்கள் இதில் நீராடி சனி பகவானை வணங்குகின்றனர். இப்பகுதியில் மேலும் பல ஆலயங்களும் உள்ளன.

தங்கள் வேண்டுதல் நிறைவேற, சனிக்கிழமை யில் பெருமளவில் பக்தர்கள் இங்குவந்து வழிபடு
கிறார்கள்; அன்னதானமும் செய்கிறார்கள்.

சனி அமாவாசையன்று நடக்கும் சிறப்பு அபிஷேகத்தைக் காண நாடெங்கிலுமிருந்து பல்லாயிரம் மக்கள் இங்கு திரள்கின்றனர். 

அஷ்டமச் சனி, கண்டச் சனி, ஏழரைச் சனி உள்ளிட்ட பாதிப்புகள் இங்குவந்து வழிபட்டால் நீங்குமென்பது பக்தர்கள் நம்பிக்கை.

சென்னை- டெல்லி ரயில் வழியிலுள்ள மதுரா ரயில்நிலையத்தில் இறங்கி, அங்கிருந்து 55 கிலோமீட்டர் தொலைவிலுள்ள கோகிலவனத்தை அடையலாம். வழியில் கண்ணனின் வளர்ப்புத் தந்தை நந்தகோபர் வசித்த ஊரையும் காணலாம். மதுரா செல்பவர்கள் இந்த சனி பகவான் ஆலயத்தையும் தரிசித்து வரலாம்.

0 Facebook:

Post a Comment

 
ஆன்மிகம் © 2011 - WebSite & Designig by Yazhini