மாதங்களில் நான் மார்கழி மாதமாக இருக்கின்றேன் என்று கண்ணபிரான் பகவத்கீதையில் அருளினார். அவரது திருவாய்மொழி மார்கழியின் சிறப்புகளை உயர்த்திப் பேசும் புண்ணிய மாதமாக அமைந்து விட்டது. மார்கழி மாதத்தை சிலர் பீடை மாதம் என்பார்கள்.
அது தவறு ‘‘பீடு’’ என்ற சொல்லுக்கு ‘பெருமை’ என்று பொருள். பீடுடைய மாதம், அதாவது பன்னிரு மாதங்களில் மார்கழி மிக்க பெருமையுடைய மாதம். சூரியன் பயணத்திசையை வைத்து ஒரு ஆண்டை 2 அயனங்களாக பிரிப்பார்கள். சூரியன் தை மாதம் முதல் ஆனி மாதம் வரை வடக்கு திசையில் பயணிப்பதை ‘உத்திராயணம்’ என்று கூறுவார்கள்.
இது கோடைக்காலத்தின் தொடக்கத்தை குறிக்கும். இக்காலம் தேவர்களுக்கு பகல் பொழுதாக அமைகிறது. ஆடி மாதம் முதல் மார்கழி மாதம் வரை சூரியன் தெற்கு திசையில் பயணிக்கிறான். இதை தட்சிணாயண காலம் என்பர். இது மழைக்காலமாகும். தட்சிணாயணத்தின் ஆறாவது மாதம், அதாவது மார்கழி மாதம் தேவர்களின் இரவு காலம் முடிந்து வைகறை பொழுதாக அமைகிறது.
இதை ‘உஷா காலம்’ என்றும், ‘வைகறை பொழுது’ என்றும் கூறுவதுண்டு. விடியற்காலை 4 மணி முதல் 6 மணி வரையுள்ள காலம் பிரம்மமுகூர்த்தம் எனப்படுகிறது. பனி விழும் அவ்வேளையிலான அதிகாலை வழிபாடு, உடல் சுறுசுறுப்புக்கும், உள்ளத்தெளிவுக்கும் எப்போதும் சிறந்தது. இந்த மாதம் முழுவதும் பகவானை தியானிப்பதும், அவனை நினைப்பதும் சகல சுகத்தையும் அளிக்கிறது.
ஆன்மிக மார்க்கத்திற்கு செல்ல முதன்மையான மாதமாக கருதப்படும் இந்த மாதத்தை ‘தனுர் மாதம்’ என்றும் அழைப்பார்கள். மார்கசீரிஷம் என்ற சொல்லுக்கு தலையான மார்க்கம் என்று பொருள். அதுவே நாளடைவில் மருவி மார்கழியாக விளங்குகிறது. சைவ, வைணவ ஒற்றுமையை வலியுறுத்தும் இம்மாதத்தில் ஆண்களும், பெண்களும் திருப்பாவை, திருவெம்பாவை பாடல்களை பாடி பரவசம் அடைவர். திருப்பாவை, பெண்ணான ஆண்டாளால் பாடப்பெற்றது.
ஸ்ரீரங்கம் ரெங்கநாதரை மணாளனாக அடைய வேண்டியும், அவன் பெருமைகளை ஒரு பெண் மற்ற பெண்களுக்கு கூறி, அவரை துக்கத்தில் இருந்து எழுப்புவதை போல அமைந்தது இப்பாடல். ‘மார்கழி திங்கள், மதி நிறைந்த நன்னாள். நாராயணனே நமக்கே பறை தருவான். வாங்கக்குடம் நிறைக்கும் வள்ளல் பெரும் பசுக்கள், நீங்காத செல்வம் நிறைந்தலோர் எம்பாவாய்.
செங்கண் திருமுகத்து செல்வ திருமாலால் எங்கும் இன்புற்று இருப்பதோர் எம்பாவாய்’ என்று ஆண்டாள் நாச்சியார் அரங்கனை தொழுது வணங்கி, பாடி பரவசம் அடைந்துள்ளார். திருப்பாவையை போலவே திருவெம்பாவையும், ஒரு பெண் மற்றவரை மார்கழி அதிகாலை பொழுதில் எழுப்புவதாக அமைந்துள்ளது.
சிவபெருமான் திருவண்ணாமலையில் மாணிக்கவாசகரிடம், ‘கோவை பாடிய வாயால் பாவை பாடு’ என்று கேட்க, மாணிக்கவாசகர் பெண் பாவத்தில் நின்று சிவபெருமானை நாயகனாக நினைத்து பாடினார். ‘சித்தம் அழகியார் பாடாரோ நம் சிவனை’ என்று தேனினுமினியது அப்பாடல்கள். திருப்பாவை, திருவெம்பாவை நூல்கள் இரண்டும் பாவை நோன்பு, மார்கழி நோன்பினை பாடுகின்றன.
சிவாலயங்களில் மாணிக்கவாசகர் அருளிய திருப்பள்ளி எழுச்சி பாடல்களும் பாடப்படுகின்றன. திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆண்டு முழுவதும் அதிகாலை சுப்ரபாதம் பாடல்கள் பாடப்படும். மார்கழி மாதம் முழுவதும் திருப்பாவை பாடல்கள் பாடப்படும். இது இம்மாதத்திற்கு புகழ் சேர்ப்பதாகும். மேலும் வைஷ்ணவ ஆலயங்களில் இராப்பத்து, பகல்பத்து என்ற முறையில் நாலாயிரத்திவ்ய பிரபந்தம் பாராயணம் செய்யப்படும்.
2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே தை நீராடல் என்ற நோன்பு வழிபாட்டை தை மாதத்தில் மேற்கொண்டனர். பின்னர் அது மார்கழி மாதத்திற்கு மாறிவிட்டது. வைகுண்ட ஏகாதசி, திருவாதிரை, அனுமன் ஜெயந்தி போன்ற பண்டிகைகளும் இம்மாதத்தில் வருகின்றன. எங்கும் பக்தி, எதிலும் தெய்வீகம் இவை அனைத்தும் மார்கழியின் சிறப்பாகும்.