Banner 468 x 60px

 

Friday, December 26, 2014

அய்யப்பனுக்கு நாளை மண்டல பூஜை

கேரளாவில் உள்ள பிரசித்திப் பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவிலில் மண்டல பூஜை விழா கடந்த மாதம் 17–ந்தேதி முதல் நடந்து வருகிறது.

முக்கிய நிகழ்ச்சியான அய்யப்பனுக்கு மண்டல பூஜை வழிபாடு நாளை நடைபெற உள்ளது. அப்போது அய்யப்பனுக்கு பாரம்பரிய தங்க அங்கி அணிவிக்கப்பட்டு சிறப்பு தீபாராதனை மற்றும் விசேஷ வழிபாடுகள் நடக்கும்.

இதனை காணவும், மண்டல பூஜை நாளில் அய்யப்பனை தரிசிக்கவும் நாடு முழுவதிலும் இருந்து ஆயிரக்கணக்கான அய்யப்ப பக்தர்கள் இருமுடி கட்டி சபரிமலை வந்துள்ளனர்.

சன்னிதானத்தில் திரண்டு நின்று 18–ம் படி ஏற காத்திருக்கும் அவர்கள் எழுப்பும் சரணகோஷம் சபரிமலையெங்கும் எதிரொலிக்கிறது.

அய்யப்பனுக்கு அணிவிக்கப்படும் தங்க அங்கி கடந்த 23–ந்தேதியே ஆரான்முளா பார்த்தசாரதி கோவிலில் இருந்து ஊர்வலமாக சபரிமலை புறப்பட்டது.

இந்த ஊர்வலம் நாளை பகல் 1.30 மணிக்கு பம்பை கணபதி கோவிலை வந்தடையும். அங்கிருந்து மாலை 3.30 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட யானைகள் அணிவகுத்து செல்ல மேளதாளம் முழங்க தங்க அங்கி சபரிமலைக்கு தலைசுமையாக எடுத்துச் செல்லப்படும்.

சபரிமலை சன்னிதானம் சென்றடைந்ததும் அவை கோவில் தந்திரி கண்டரரு ராஜீவரரு, மேல்சாந்தி கிருஷ்ணதாஸ் நம்பூதிரி ஆகியோரிடம் ஒப்படைக்கப்படும். அவர்கள் அதனை கருவறைக்கு கொண்டு சென்று மாலை 6.30 மணிக்கு அய்யப்பனுக்கு தீபாராதனை நடத்தி தங்க அங்கியை அணிவிப்பார்கள்.

தங்க அங்கியில் ஜொலிக்கும் அய்யப்பனுக்கு மண்டலாபிஷேகம் நடைபெறும். அப்போதும் சரண கோஷம் விண்ணை பிளக்கும். அத்துடன் 41 நாட்கள் நடந்த மண்டல பூஜை விழா நிறைவுக்கு வரும். இரவு அய்யப்பனுக்கு அத்தாள பூஜை நடத்தப்பட்டு அரிவாராசனம் பாடி இரவு 10 மணிக்கு கோவில் நடை சாத்தப்படும்.

அதன் பிறகு மகர விளக்கு பூஜைக்கான விழா வருகிற 30–ந்தேதி தொடங்குகிறது. அன்று மாலை 5.30 மணிக்கு கோவில் நடை மீண்டும் திறக்கப்படும்.
 
ஆன்மிகம் © 2011 - WebSite & Designig by Yazhini