சபரிமலையில் மாளிகைப்புறத்தம்மனுக்கு 2.5 கிலோ தங்க அங்கி காணிக்கையாக வழங்கப்பட்டது. இனி வரும் நாட்களில் பக்தர்கள் இதனை தரிசிக்கலாம். சபரிமலை வரும் பக்தர்கள் ஐயப்பனை வணங்கி விட்டு மாளிகைப்புறத்தம்மனுக்கு மஞ்சள் சமர்ப்பணம் செய்து வழிபடுவர்.
ஐயப்பனுக்கு காணிக்கையாக பொருட்களை வாரி வழங்கும் பக்தர்கள் மாளிகைப்புறத்தம்மன் கோயிலில் அவ்வாறு செய்வதில்லை. அண்மையில் மாளிகைப்புறத்தம்மன் கோயிலில் தேவபிரஸ்னம் நடத்தப்பட்ட போது இது ஒரு குறையாக தெரிவிக்கப்பட்டது. நடப்பு சீசன் தொடக்கத்தில் கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டம் ஹரிபாட்டை சேர்ந்த ஒரு தனியார் நிறுவனம் சார்பில் ஐயப்பன் கோயிலுக்கு தங்கத்தில் செய்யப்பட்ட பூஜா பாத்திரங்கள் காணிக்கையாக வழங்கப்பட்டது.
இதை பெற்றுக்கொண்ட தந்திரி கண்டரரு ராஜீவரரு, மாளிகைப் புறத்தம்மனுக்கு தங்கத்தில் ஒரு அங்கி காணிக்கையாக சமர்ப்பிக்க வேண்டும் என்று அந்த நிறுவனத்தின் உரிமையாளரிடம் வேண்டுகோள் விடுத்தார். அதை ஏற்று அந்த நிறுவனத்தில் சார்பில் ரமணி 2.5 கிலோ தங்கத்தில் அம்மனின் உருவ அங்கியை காணிக்கையாக வழங்கினார். மாளிகைப்புறம் மேல்சாந்தி கேசவன் நம்பூதிரி அதனை பெற்றுக்கொண்டார். இனி வரும் நாட்களில் பக்தர்கள் இதை தரிசனம் செய்ய முடியும்.