Banner 468 x 60px

 

Saturday, December 28, 2013

சாஸ்தாவும் ஐயப்பனும்

0 Facebook
எம்.எஸ். சுப்பிரமணியம்

ன்றே தெய்வம் என்பதே அடிப்படைக் கொள்கை. இருப்பினும், அலைபாயும் மனமுடைய மனித மனதிற்கு தெய்வத்திடம் பிடிமானம் ஏற்பட பல்வேறு தெய்வத் திருவுருவங்களைக் கற்பித்துள்ளனர். அத்வைத தத்துவத்தைப் பரப்பிய ஆதிசங்கரரே ஆறுவகை உருவங்களையும் அவற்றை வழிபடும் மதங்களையும் பாகுபாடு செய்து கொடுத்துள்ளார். அவையே சிவனை வழிபடும் சைவம், சக்தியை வழிபடும் சாக்தம், விஷ்ணுவை வழிபடும் வைணவம், கணபதியை வழிபடும் காணாபத்யம், குமரக் கடவுளை வழிபடும் கௌமாரம், சூரியனை வழிபடும் சௌரம் ஆகியவை.

ஆனால் மக்களோ இந்த ஆறோடும் (ஆறு உருவங்களோடும்) நிற்காமல், மனம் விரும்பிய வாறெல்லாம் உருவ வழிபாட்டை ஏற்படுத்திக் கொண்டனர். இதனால் சமயச் சண்டைகள்தான் பெருகின. அதுகண்டு வருந்திய வள்ளலார் இராமலிங்க அடிகள், "ஜோதி (ஒளி) வடிவானவனே ஆண்டவன்' என்று சமரச சுத்த சன்மார்க்கக் கொள்கையை உருவாக்கினார்.
சிறுதெய்வ வழிபாடுகளை அவர் கண்டிக்கவும் செய்தார். ஆனாலும் பெரும் பான்மையான மக்களிடையே வேற்றுமை உணர்வுதான் வழிபாட்டில் கலந்திருக்கிறது. அந்த வேற்றுமை உணர்வின் அடிப்படையில் பல வினாக்கள் எழுந்துள்ளன. அவற்றில் ஒன்று- சாஸ்தாவும் ஐயப்பனும் ஒருவரா அல்லது வெவ்வேறு தெய்வங்களா என்பது.

சாஸ்தாவும் ஐயப்பனும் ஒருவர்தான். அல்லது சாஸ்தாவும் ஐயப்பனும் வெவ்வேறு தெய்வங்கள் தான். குழப்பமாக உள்ளதா? மேலே படித்தால் தெளிவு பெறலாம்.

வரலாற்று ஆசிரியர்களின் கூற்றுப்படி இராமாயணக் கதை நடந்தது சுமார் ஐயாயிரம் ஆண்டுகளுக்குமுன். அப்பொழுது இலங்கைக்குத் தெற்கே இருந்த கடலில் அமைந்திருந்தது வீர மகேந்திரபுரி. இதனைத் தலை நகராய்க் கொண்டு ஆண்டவன் தான் சூரபத்மன். முருகன் அவதரித்து சூரனைக் கொன்றதும் வென்றதும் கந்தபுராணக் கதை. இந்தக் கதை இராமாய ணக் கதைக்குச் சுமார் இரண்டாயி ரம் ஆண்டுகள் முன்பு நடந்துள்ளது. முருகன் அவதாரத் தையும் சூரசம்ஹாரத் தையும் கூறுவது கந்தபுராணம். இதைப் பிற்காலத்தில் தமிழில் எழுதியவர் காஞ்சியில் வாழ்ந்த கச்சியப்ப சிவாச்சாரியார்.

கந்தபுராணத்தில் மகாசாஸ்தா படலம் என்னும் ஒரு பகுதி உள்ளது. சாஸ்தாவின் தளபதி வீரமாகாள தேவர். இவரை இந்திராணிக்குக் காவலாக சாஸ்தா நியமித்ததாக கந்தபுராணம் சொல்கிறது. எனவே, சாஸ்தாவின் அவதாரம் சுமார் ஏழாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட தாகும்.

தேவலோக ரம்பையின் மகளான மகிஷி, "சிவனுக்கும் விஷ்ணுவுக்கும் பிறக்கும் மகனால் மட்டுமே எனக்கு மரணம் நேர வேண்டும். அது வும் அந்தப் பிள்ளை பன்னிரண்டாண்டு பிரம்ம சரியம் காத்தவனாகவும் இருக்க வேண்டும்' என்று பிரம்மனிடம் வரம் பெற்றிருந்தாள்.

எல்லா அசுரர்களையும்போல் மகிஷியும் தேவர்களுக்குத் தொல்லை தந்தாள். வழக்கப்படி தேவர்கள் விஷ்ணுவைச் சரணடைந்தனர். விஷ்ணு மோகினியாகி சிவன்முன் வந்தார்! மோகினியின் அழகில் சிவன் மயங்கினார். அப்பொழுது அவரையும் அறியாமல் அவரிடம் பேரொளி தோன்றியது. விஷ்ணுவிடமிருந்தும் பேரொளி தோன்றியது. அந்தப் பேரொளிகளின் சங்கமத்தில் தோன்றியவரே தர்மசாஸ்தா! அந்தக் குழந்தையை சிவன் பதினான்கு ஆண்டுகள் கயிலையிலேயே வைத்திருந்தார். அவனுக்கு கலையனைத்தும் கற்பித்து மகிஷியைக் கொல்ல பூவுலகத்திற்கு அனுப்பி வைத்தார் சிவன். சாஸ்தா மகிஷியைக் கொன்று அமுதா நதிக்கரையில் வீசினார்.

இதனால் தேவர்கள் மகிழ்ந்தனர். தர்ம சாஸ்தாவிற்கு பொன்னம்பல மேட்டில் பூசனை நடத்தினர். இந்த நிகழ்ச்சி யில் ராஜசேகர ரிஷியும் கலந்து கொண்டார். அவர் சாஸ்தா தனது மகனாகப் பிறக்க வேண்டும் என விண்ணப்பம் செய்தார். அவரது ஆசை கலியுகத்தில் நிறைவேறும் என்று கூறி சாஸ்தா மறைந்தார். இவ்வாறாக கிருத யுகத்தில் நடந்த அவதாரமே தர்ம சாஸ்தாவாகும்.

திரேதாயுகத்தில் ராம- லட்சுமணர் சபரிபீடத்தில் தவம் புரிந்த சபரி அன்னை யைத் தரிசித்தனர். அங்கு ராம- லட்சுமணர் பூஜை புரிந்தனர். அவர்கள் அங்கிருந்து சென்ற பிறகு அவர்கள் அங்கு அமைத்த பர்ணசாலை அப்படியே இருந்தது. அங்கு பரசுராமர் சாஸ்தா வின் விக்கிரகத்தைப் பிரதிஷ்டை செய்தார்.

ரிஷி ராஜசேகர் கலியுகத்தில் தஞ்சையில் ஒரு பிராமணக் குடும்பத்தில் விஜயன் என்ற பெயரில் பிறந்தார். சாஸ்தாவை மிகுந்த பக்தியுடன் வழிபட்டு வந்தார். ஆனாலும் அவருக்கு சாஸ்தா மகனாகப் பிறக்கும் ஆசை நிறைவேறவில்லை. மறுபிறவியில் பந்தள ராஜாவாகப் பிறந்தார்.

இவரது ஆட்சியில் உதயணன் என்ற கொள்ளைக்காரன் இருந்தான். அவன் கரிமலை யில் தங்கி பல கொள்ளைகளை நடத்தினான். அவனிடமிருந்து நாட்டைக் காக்க ராஜா சாஸ்தாவைச் சரணடைந்தார்.

பந்தள அரண்மனையில் ஜெயந்தன் என்ற பூசாரி பணிபுரிந்தான். அவன் சாட்சாத் சிவ பெருமானே. ராஜாவின் தங்கை மோகினியாக விஷ்ணுவும் வந்து சேர்ந்தார்.

மோகினியை உதயணன் கடத்திச் சென்று விட்டான். அவளை மீட்க ஜெயந்தன் சென்றான். அப்படிச் சென்றவன் நீண்ட நாட்களாகத் திரும்பவில்லை. எனவே மோகினி இறந்திருப்பாள் என்று முடிவு செய்தார் பந்தள ராஜன். அவளுக்கு கர்மகாரியங்களும் செய்துவிட்டார்.

ஜெயந்தன் மோகினியை மீட்டுவரும் வழியில் ஒரு சாமியாரைச் சந்தித்தான். ""ராஜா மோகினிக்கு திவசமே செய்துவிட்டார். இனி உங்களை அங்கே சேர்க்க மாட்டார்கள். எனவே நீங்கள் திருமணம் செய்துகொண்டு காட்டிலேயே தங்கி விடுங்கள்'' என்று கூறினார். அதன்படியே ஜெயந்தனும் மோகினியும் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்குப் பிறந்த குழந்தைதான் ஐயப்பன். இவை கலியுகச் சம்பவங்கள்.

ஒரு நாள் பந்தள ராஜா வேட்டைக்கு வருவதை அறிந்தனர் ஜெயந்தனும் மோகினியும். குழந்தையை பம்பை நதிக்கரையில் விட்டு விடும்படி கூறினான் ஜெயந்தன். தன் கழுத்திலிருந்த மணியைக் குழந்தையின் கழுத்தில் கட்டி விட்டான். ""குழந்தை அசையும்போது மணி சத்தம் கேட்கும். அதைக் கேட்டு பந்தள ராஜன் குழந்தையிடம் வருவான். அங்கு யாருமில்லை யென்று அறிந்தால், பந்தள ராஜவே குழந்தையைக் கொண்டு செல்வார்'' என்றான் ஜெயந்தன்.

அதன்படியே பந்தள ராஜா எடுத்துச்சென்று வளர்த்த குழந்தைதான் மணிகண்டன் என்று பெயரிடப்பட்ட ஐயப்பன்.

பந்தள தேசத்தில் வாபர் என்ற இஸ்லாமியக் கொள்ளைக்காரன் இருந்தான். அவன் கொள்ளையடிக்கும் பொருட்களை மக்களுக்கே செலவிடுவான். உதயணன் தான் செய்த கொலை களை வாபர் செய்ததாகப் பழிபோட்டு வந்தான். எனவே வாபரை அடக்க மணிகண்டன் படை யுடன் வந்தார். ஆனால் அங்கு வந்தபின் உண்மை அறிந்த மணிகண்டன் வாபரை நண்பராக்கிக் கொண்டார்.

பந்தளதேச மந்திரி ராணிக்கு கெட்ட யோசனை கூறி, அவள் பெற்ற ராஜராஜனுக்கு முடிசூட்ட சூழ்ச்சி செய்தான். அவன் சொல் கேட்ட ராணியும் தீராத தலைவலி என்று நடித் தாள். அது தீர புலிப்பால் கொண்டு வர மணி கண்டனை அனுப்பும்படி ராஜாவிடம் கூறினாள்.

மணிகண்டன் காட்டிற்குப் புறப்பட்டார். காட்டுவாசிகளான கொச்சு கடுத்தசாமி, கருப்பசாமி ஆகியோரும் அவருடன் சென்றனர். காட்டில் மணிகண்டன் உதயணனைக் கொன்று, புலிப்பாலுடனும் புலிக்கூட்டத்துடனும் திரும்பினார். இதனால் மணிகண்டனின் தெய்வீக சக்தி வெளிப்பட்டது. மக்கள் அச்சப்பட்டதால் புலிகளாய் வந்த தேவர்களைத் திருப்பி அனுப்பி னார் ஐயப்பன். ராணியும் ஐயப்பனிடம் மன்னிப்பு கேட்டாள். அனைவரும் ஐயப்பனுக்குச் சரணம் கூறினர்.

சபரிமலையிலுள்ள தர்மசாஸ்தா ஆலயத்தைப் புதுப்பித்து திருப்பணி செய்யுமாறு பந்தள ராஜனிடம் கூறினார் ஐயப்பன். கோவில் திருப் பணிக்குச் சென்றவர்கள் வனவிலங்குகளின் தாக்குதலிலிருந்து தற்காத்துக் கொள்ள ஆயுதங் களுடன் சென்றனர். கோவிலை நெருங்கும் முன் ஓரிடத்தில் ஆயுதங்களைக் குவித்து வைத்தனர். அவ்விடமே இன்றைய "சரங்குத்தி' என்ற இடமாகும்.

கோவில் புதுப்பிக்கப்பட்டதும் ஐயப்பன் அங்கிருந்த தர்மசாஸ்தாவுக்குள் ஐக்கியமாகி விட்டார். ஐயப்பனுடன் வந்த அனைவரும் வருந்தி நின்றனர். ஐயப்பன் அவர்களுக்காகத் தரிசனம் தந்தார்.

அப்பொழுது, ""நான் தர்மசாஸ்தாவின் மறு அவதாரமே'' என்று கூறினார் ஐயப்பன். வாபர் எரிமேலியில் தங்கி தன்னைத் தரிசிக்க வரும் பக்தர்களுக்குப் பாதுகாப்பு அளிக்கும்படி கூறினார். கடுத்தசாமியும் கருப்பசாமியும் சந்நிதிக் காவலர்களாய் இருக்க வேண்டுமென்றும் கூறினார்.

தனது முடிசூட்டு விழாவிற்காகச் செய்யப்பட்ட ஆபரணங்கள் பந்தள அரண்மனையில் பாதுகாக்கப்பட வேண்டும். தை மாத மகர சங்கராந்தியன்று ஆபரணங்கள் கொண்டு வரப்பட்டு தனக்கு அணிவிக்க வேண்டும் என்றும் கூறினார்.

மணிகண்டனுக்கு குருவாயிருந்தவர் தன் மகளை ஐயப்பன் மணந்துகொள்ள வேண்டி னார். அதனை மறுத்த ஐயப்பன், தன் சந்நிதிக்கு அருகிலே "மாளிகைப் புரத்தம்மன்' என்ற பெயரில் கோவில் கொள்ளுமாறு அனுமதித்தார். அவளே இன்று மக்கள் வணங்கும் "மஞ்ச மாதா'.

சாஸ்தாதான் ஐயப்பன்; ஐயப்பன்தான் சாஸ்தா என்பது இப்பொழுது தெளிவாகி இருக்குமே. ஒரே தெய்வத்தின் இருவேறு அவதாரங்களே சாஸ்தாவும் ஐயப்பனும். சாஸ்தா முந்தைய அவதாரம்; ஐயப்பன் பிந்தைய அவதாரம்.

சாமியே சரணம் ஐயப்பா!

0 Facebook:

Post a Comment

 
ஆன்மிகம் © 2011 - WebSite & Designig by Yazhini