சபரிமலையில் சுவாமி அய்யப்பன் கோவிலில் மகர விளக்கு பூஜைக்காக தற்போது கோவில் நடை திறக்கப்பட்டு உள்ளது. முதல் நாளில் இருந்தே அய்யப்பனை தரிசனம் செய்வதற்காக பக்தர்கள் குவிய தொடங்கினார்கள்.
மண்டல பூஜையை விட தற்போது அதிக அளவில் சபரிமலையில் பக்தர்கள் திரள்வதால் அவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் தேவசம் போர்டும் போலீசாரும் இணைந்து செய்து வருகிறார்கள்.
நேற்று சபரிமலையில் அதிக அளவில் பக்தர்கள் திரண்டு இருந்தனர். அவர்கள் நீண்ட வரிசையில் சென்று சுவாமி அய்யப்பனை தரிசனம் செய்ததால் இரவு 10.50 மணிக்கு அடைக்கப்பட வேண்டிய நடை இரவு 11.45 மணிக்குதான் சாத்தப்பட்டது. நடை அடைக்கப்பட்ட பிறகும் 18–ம் படி ஏற நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்திருந்தனர்.
இன்று புத்தாண்டையொட்டி அதிகாலை 3 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. சுவாமி அய்யப்பனை தரிசனம் செய்ய பக்தர்கள் வரிசையில் அனுப்பப்பட்டனர். பக்தர்கள் கூட்டம் கட்டுக்கடங்காமல் இருந்ததால் சுவாமி அய்யப்பனுக்கு நெய் அபிஷேகம் செய்வதில் தாமதம் ஏற்பட்டது.
இதனால் ஏராளமான பக்தர்கள் நடைபந்தல், தாழைதிருமுற்றம், மாளிகைபுரம் பகுதிகளில் கூடாரம் அமைத்து தங்கி உள்ளனர். மேலும் போலீஸ் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டு உள்ளது.