திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட ஏகாதசி, ஆங்கில புத்தாண்டு தினத்தையொட்டி இன்று லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
உலகப் புகழ்பெற்ற ஏழுமலையான் கோவிலில் தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் இன்று வைகுண்ட ஏகாதசி மற்றும் ஆங்கில புத்தாண்டு ஆகியவை சேர்ந்து வந்துள்ளதால் ஏழுமலையான் கோவிலுக்கு பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளது.
நள்ளிரவு 12 மணியளவில் ஏழுமலையான் கோவிலில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது.
அப்போது வாசல் வழியாக சிறப்பு அலங்காரத்தில் வந்த பெருமாளை பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா என வரவேற்று வணங்கினர். இதை தொடர்ந்து ஏகாந்த சேவை நடந்தது.
பின்னர் 3 மணிக்கு வி.ஐ.பி தரிசனம் நடந்தது. காலை 6 மணிக்குமேல் இலவச தரிசனத்தில் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.
இலவச தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் வைகுண்டம் காம்ப்ளக்சில் உள்ள 45 அறைகளிலும் நிரம்பியிருந்தனர்.
மேலும் சுமார் 8 கிலோ மீட்டர் வரை வரிசையில் காத்திருந்தனர். சுமார் 3 லட்சம் பக்தர்கள் வந்திருந்தனர்.
இலவச தரிசனத்தில் சாமி தரிசனம் செய்ய 32 மணி நேரம் ஆகிறது. பக்தர்கள் வருகையையொட்டி கோவிலில் 6 லட்சம் லட்டுகள் தயார் செய்யப்பட்டுள்ளது.
வைகுண்ட ஏகாதசி மற்றும் ஆங்கில புத்தாண்டையொட்டி தங்க தேரோட்டம் நடந்தது. இதில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்ப சுவாமி மாட வீதியில் பவனி வந்தார்.