திருமண வாய்ப்பிற்காக ஏங்குபவர்கள் தித்திக்கும் விதத்தில் வாழ்க்கை அமைய 'கல்யாண விரதம்' என்று போற்றப்படும் 'பங்குனி உத்திர விரதம்' கடைப்பிடித்து, அன்றைய தினம் வள்ளி மணாளப் பெருமான் வீற்றிருக்கும் ஆலயத்தை நோக்கிச் சென்று வழிபட்டால் பார்போற்றும் வாழ்வும் அமையும். பொதுவாக குழந்தை பிறந்தவுடன் பாலுக்காக ஏங்குகிறது.
படிக்கும் பொழுது நூலுக்காக ஏங்குகிறது. பிறகு படித்து முடிந்ததும் வேலைக்காக ஏங்குகிறது. அதன் பிறகு வாழ்க்கைத் துணை வந்திணைய மாலைக்காக ஏங்குகிறது. அப்படி மாலைசூடும் வரனைத் தேடிக் கொடுக்க வரம் தரும் தெய்வங்களை நாடிச் சென்று தரிசனம் செய்ய, பரிகாரங்கள் நிறைய இருக்கின்றன.
எங்களை மணக்க ஒரு ராமன் வராவிட்டாலும், தூக்கிச் செல்ல ஒரு ராவணனாவது வரமாட்டானா? என்று முதிர் கன்னி ஒருவர் சொல்வது போல கவிஞர் ஒருவர் புதுக்கவிதை எழுதியிருந்தார். பெண்கள் ஏக்கப் பெருமூச்சு விடுமளவிற்கும், ஆண்கள் தனக்கு இணையான மனைவி அமையவில்லையே என்று வருந்தும் அளவிற்கும் காலம் மாறிவிட்டது.
வரதட்சனையினாலும், மற்ற காரணங்களாலும் வரன்கள் வராத காரணத்தால் கோவிலை தேடிச்செல்லும் கூட்டம் பெருகிவிட்டது. 03.04.2015 (வெள்ளிக்கிழமை) அன்று பங்குனி உத்திரத் திருவிழா வருகின்றது. அன்றைய தினம் முழுநாளும் விரதமிருந்து மாங்கனியை நைவேத்தியமாக வைத்து, மால் மருகனை வழிபட்டால் வாழ்க்கைத் துணை அமைய வழி பிறக்கும்.
அதுமட்டுமல்ல, வந்த வாழ்க்கைத் துணையுடன் கருத்து வேறுபாடுகள் இருந்தால் அதை மாற்றி ஒன்றாக இணைய வைக்கும். பங்குனி உத்திரத்தன்று அந்தப் பன்னிருகரத்தானை வழிபட்டால் முன்னேற்றங்கள் வந்து சேரும். வேலவனை வழிபட்டால் வெற்றிகள் வந்து கூடும். சண்முகனை வழிபட்டால் சந்தோஷங்கள் வந்து சேரும். சிங்கார வேலவனை வழிபட்டால் மங்காத புகழ் கூடும்.
அன்றைய தினம் இல்லத்து பூஜையறையில் வள்ளி தெய்வானையுடன் இணைந்த முருகன் படத்தை வைத்து அருகில் பஞ்சமுக விளக்கேற்றி, ஐந்து வகை எண்ணெய் ஊற்றி, ஐந்து வகை புஷ்பம் வைத்து, ஐந்து வகை நைவேத்தியமும் வைத்து, கவச பாராயணங்களை படிப்பது நல்லது. குத்து விளக்கின் கீழே இடும் கோலம் பின்னல் கோலமாக இல்லாமல், நடு வீட்டுக்கோலம் என்றழைக்கப்படும் முக்கோண, அறுகோண சதுரங்கள் அமைந்த கோலங்கள் போட வேண்டும்.
கோலத்தில் புள்ளி அதிகம் இருந்தால் தான் புள்ளி எனப்படும் 'வாரிசு' பெருகும் என்பார்கள். மாங்கனி கிடைத்தால் மாங்கனி, இல்லையேல் தேன் கதலி வைத்து அதை நாமே சாப்பிட வேண்டும். பிறகு முருகப்பெருமான் இருக்கும் ஆலயங்களுக்குச் சென்று வழிபட்டு வரவேண்டும். 'வேலை வணங்குவதே வேலை' எனச் சொல்லும் பக்தர்களின் விவகாரங்கள் விலகவும், விவாகம் முடியவும் முருகன் சன்னிதியில் சென்று
தள்ளாத கிழவனாய் குறவள்ளி கரம்பற்றத்
தனியாக வந்த பெருமான்!
தனதனெனும் சந்தத்தை அருணகிரிநாதருக்குத்
தயங்காமல் கொடுத்த பெருமான்!
சொல்லுக்குச் சுவைதந்த அவ்வைக்கும் ஒருநாளில்
சுட்ட பழம் ஈந்த பெருமான்!
சுடுபொறிகள் ஆறாகிச் சிவனுடைய நெற்றியினில்
சுகமாகப் பிறந்த பெருமான்!
புள்ளிமயி லேறிவரும் வள்ளிமண வாளனை நீ
போற்றிக் கொண்டாடு மனமே!
பொருளோடும், அருளோடும் புவிமீது விளையாடும்
புகழோடு செல்வம் மிகுமே!
என்ற பாடலைப் பாடி வழிபட்டால் முருகப் பெருமான் முன்வந்து வரம் தருவான். பல தெய்வத் திருமணங்கள் பங்குனி உத்திரத் திருநாளில் நடைபெற்றதாக புராணங்கள் சொல்கின்றன. மன்மதன் உயிர் பெற்ற நாளும் பங்குனி உத்திரம். மக்களைக் காக்கும் சிவன் உமையவள் மணம்புரிந்த நாளும் உத்திரம் என்று சொல்லப்படுகின்றது.
எனவே இந்த இனிய நாளான ஏப்ரல் 3-ம் தேதியன்று விரதமிருந்து கந்தனுக்குப் பிடித்த கந்தரப்பம் நைவேத்தியம் செய்து கவசம் பாடி வழிபட்டால் கல்யாண மாலை வரும் வாய்ப்பு கிட்டும்.