100 ஆண்டுகளுக்கு ஒருமுறை கடலில் சங்கு தோன்றுவதால், அதற்கு ஆயுளை அதிகரிக்கும் தெய்வசக்தி உண்டு. உயிர்களை பறிக்கும் அதிகாரம் கொண்டவர் எமதர்மன்.
இவர் திருமீயச்சூர் லலிதாம்பிகா சமேத மேகநாத சுவாமி ஆலயத்தில் நீண்ட ஆயுளைத் தரவல்ல சங்கு கொண்டு 1008 சங்காபிஷேகம் செய்தார் என்றும், மிகவும் சக்தி வாய்ந்த மூலிகையும், எமலோகத்தின் தல விருட்சங்களில் ஒன்றான பிரண்டை கலந்த அன்னத்தை நிவேதனம் செய்தும் சிவபெருமானை வழிபட்டார் எனவும் தலபுராணம் கூறுகிறது.
எனவே தீராத வியாதியால் பாதிக்கப்பட்டவர்கள் தாமரை இலைகளில் பிரண்டை சாதத்தையும், சங்கு புஷ்பத்தை வைத்து சதய நட்சத்திரத்தில் சிவபெருமானை பூஜிக்க வேண்டும். பின்னர் அந்த தாமரை இலையிலேயே அன்னத்தை வைத்து ஏழைகளுக்கு தானம் அளித்து, தாமும் உண்ண வேண்டும்.
இவ்வாறு செய்தால் கடுமையான நோய் மற்றும் துன்பங்களில் இருந்து விடுபட்டு நீண்ட ஆயுளோடு வாழலாம் என்பது ஐதீகம். கருடனின் மூத்த சகோதரன் அருணன். இவர் கால்கள் இல்லாமல் ஊனமாக பிறந்தவர். சூரியனின் தேரோட்டியாக இருப்பவர். சூரியோதயத்தை அவரது பெயரால் அருணோதயம் என்றும் சிலர் அழைப்பார்கள்.
சிறந்த சிவபக்தனான அருணன், கயிலாயம் சென்று சிவபெருமானை தரிசிக்க சூரியனிடம் அனுமதி கேட்டான். அதற்கு சூரியன், 'நீ! உடல் ஊனமுற்றவன். உன்னால் ஈஸ்வரனை தரிசனம் செய்ய முடியாது' என்று கூறி கிண்டலும், கேலியும் செய்தான். சூரியன் கொடுத்த துன்பத்தை தாங்கிக்கொண்ட அருணன், விடாமுயற்சியுடன் கடும் தவம் இருந்து சிவனின் தரிசனத்தைப் பெற்றான்.
சிவதரிசனம் செய்ய முயன்ற அருணனை கேலி செய்த சூரியனின் மீது சிவனின் கோபம் திரும்பியது. அவர் சூரியனிடம், 'என்னை தரிசனம் செய்ய நினைத்த அருணனைத் துன்புறுத்திய நீ ஒளி இழந்து போவாய்' என்று சாபமிட்டார். இதனால் உலகமே இருண்டு போனது. சூரியனின் உருவம் கருமை நிறத்தை அடைந்தது.
சூரியன் மிகவும் வருந்தி மன்னிப்புக்கேட்டு கொண்டதன் பேரில், 'திருமீயச்சூரில் தீர்த்தம் அமைத்து பதினொரு மாத காலம் சிவ வழிபாடு செய்ய வேண்டும்' என்று சாப விமோசனத்திற்கான வழியை சிவபெருமான் கூறினார். சூரிய பகவான் திருமீயச்சூரில் தவமும், வழிபாடும் நடத்தி மீண்டும் இழந்த தன் ஒளியைப் பெற்றார்.
ஒவ்வொரு வருடமும் சித்திரை மாதம் 21 முதல் 27-ந் தேதி வரை, இந்த ஆலய கருவறையில் உள்ள லிங்கத்தின் மீது சூரிய ஒளி விழுவது சிறப்பு மிகுந்ததாக உள்ளது. இந்த நேரத்தில் பக்தர்கள் தரிசனம் செய்தால் தேக ஆரோக்கியம் பெறலாம் என்று கூறப்படுகிறது.
திருவாரூர் மாவட்டம், நன்னிலம் தாலுகா, பேரளம் ரெயில்நிலையத்திற்கு மேற்கே 1 கிலோ மீட்டர் தூரத்தில் திருமீயச்சூர் ஆலயம் உள்ளது. மயிலாடுதுறையில் இருந்து திருவாரூர் செல்லும் பாதையிலும், கும்பகோணத்தில் இருந்து காரைக்கால் வழியாக சென்றாலும் இத்தலத்தை அடையலாம்.