Banner 468 x 60px

 

Wednesday, February 25, 2015

ஷிர்டி பாபா புனிதத் திருச்சரிதம் பகுதி - 8


சென்ற அந்தப் பிரமுகர் ஆழ்ந்த பெருமூச்சு விட்டுத் தன் நடுக்கத்தைச் சற்றுக் குறைத்துக் கொள்ள முயன்றார். ஒரு குவளை குளிர்ந்த நீரைக் குடித்தார். மெல்லத் தம்மை ஆசுவாசப்படுத்திக் கொண்டு மீண்டும் மசூதி நோக்கி நடந்தார். எப்படியும் நடந்த விஷயத்தை ஊரில் உள்ள அதிகாரிகளுக்கும் மக்களுக்கும் தெரிவிக்க வேண்டும் அல்லவா? அல்லது அதற்குள் விஷயம் தெரிந்து ஊரே மசூதியில் கூடியிருக்கிறதோ என்னவோ? ஆனால், அவர் மீண்டும் தயங்கித் தயங்கி மசூதிக்குச் சென்றபோது அங்கே எந்தக் கூட்டமும் இல்லை.

மசூதி வழக்கம்போல் அமைதியாகத் தான் இருந்தது. எச்சரிக்கையோடு உள்ளே சென்று பார்த்தார் அவர். என்ன ஆச்சரியம்! பாபா வழக்கம்போல் சலனமே இல்லாமல் தியானத்தில் ஆழ்ந்திருந்தார்! அப்படியானால் தாம் கண்ட காட்சி பொய்யா? கனவா? தன் கண்ணே தன்னை ஏமாற்றுமா? முன்னர் பாபாவின் அங்கங்கள் சிதறிக் கிடந்ததாகத் தாம் கண்ட காட்சி தான் பிரமையா? இல்லை... இப்போது தாம் கண்டுகொண்டிருக்கும் இது பிரமையா? அவருக்கு எதுவும் புரியவில்லை. ஆனால், பாபாவை மீண்டும் முழுமையாக தரிசிக்க முடிந்ததில், அவர் அடைந்த பரவசத்திற்கு அளவே இல்லை. பாபா! நீங்கள் இருக்கிறீர்கள்! நீங்கள் இருக்கிறீர்கள்! என்று நாக்குழறச் சொல்லியவாறே பாபாவை நமஸ்கரித்தார்.

விழிகளிலிருந்து பரவசத்தில் பொலபொலவெனக் கண்ணீர் கொட்டியது. அவரைப் பரிவோடு பார்த்தார் பாபா. ஆம்... நான் என்றும் இருக்கிறேன்! என்றும் இருப்பேன்! என்று கம்பீரமாக அறிவித்தார். என்றும் இருப்பவர் கடவுள் ஒருவர் தானே! உடலைத் தனித்தனியாகக் கழற்றி ஓய்வெடுப்பது என்பது யோக சாதனைகளில் ஒன்று. பாபா பல்வேறு யோகங்களில் தேர்ந்தவர். ஓர் இடத்தில் இருந்துகொண்டே இன்னோர் இடத்திலும் தோன்றுவது, தன் உடலை மிக மெலிதாக்கிக் கொண்டு ஆகாயத்தில் பறந்து விருப்பமான இடத்திற்குச் செல்வது, உடலை மாபெரும் உடலாக மலைபோல் ஆக்கிக் கொண்டு பார்ப்பவர்களை பிரமிக்க வைப்பது

என யோகத்தால் ஒருவர் அடையும் திறன்கள் பலப் பல. அணிமா, மகிமா, லகிமா என அஷ்டமா ஸித்திகள் அடையப் பெற்றவர்கள் யோகிகள்.  அணிமா, மகிமா போன்ற ஸித்திகளில் அனுமன் தேர்ந்தவன். சீதாதேவி முன் உலகளந்த பெருமாள் போல், சூரியனும் சந்திரனும் தன் செவிகளில் இரு குண்டலங்கள் மாதிரித் தோன்றும் வகையில் பேருருவம் எடுத்தான் அவன். அவனே மிகச் சிறிய உருவையும் எடுக்கும் வல்லமை பெற்றிருந்தான்.

சோவெனப் பெய்யும் பெருமழையின் இடையே, மழைநீர் தன்மேல் படாதவாறு மிக மெல்லிய உருவெடுத்து இடைநடக்கும் ஆற்றல் உடையவன் அனுமன், என்று புகழ்ந்து எழுதுகிறார் கம்ப ராமாயணத்திற்கு உரை எழுதிய வை.மு. கோபால கிருஷ்ணமாச்சாரியார். யோகிகளால் முடியாதது எதுவுமில்லை. திருவண்ணாமலையில் சேஷாத்திரி பரப்பிரும்மம் இத்தகைய யோக சாதனையில் ஈடுபட்டபோது, அங்கங்கள் தனித்தனியாகக் கிடந்ததைச் சில அன்பர்கள் பார்த்ததாகத் தெரிவித்திருக்கிறார்கள். ஆதிசங்கரருக்கு எரிந்த வலக்கரம் வளர்ந்ததும், சதாசிவப் பிரம்மேந்திரர் தன் வலக்கரத்தை வெட்டிய மன்னனின் வேண்டுகோளுக்கிணங்க மீண்டும் அதைத் தன் உடலில் ஒட்ட வைத்துக் கொண்டதும் எல்லாம் இத்தகைய யோக ஸித்திகளின் விளைவே. எல்லோரையும் படைத்துக் காக்கும் பகவான் பாபாவுக்கு, தம் அங்கங்களைப் பிரித்துச் சேர்ப்பது ஒரு பொருட்டா என்ன!

பிரிந்த மனங்களை ஒன்று சேர்ப்பதும், பிரிந்த வாழ்க்கையை ஒன்றாக்குவதும் பாபாவின் அருளால் முடியும் என்கிறபோது, தன் பிரிந்த அங்கங்களை ஒன்றுசேர்த்துக் கொள்வது பாபாவால் இயலாதா? பாபா மசூதியிலிருந்து நெடுந்தொலைவில் உள்ள ஓர் ஆலமரத்தின் அருகே இருந்த கிணற்று நீரில் தான் குளிப்பது வழக்கம். ஆனால், அவர் குளிக்கும் விதம் விந்தையானது.

உடலின் புற உறுப்புகளைத் தண்ணீரால் கழுவிச் சுத்தம் செய்வதுபோலவே, அக உறுப்புகளையும் தண்ணீரால் சுத்தம் செய்வார் பாபா. தம் குடலை, வாய் வழியாக வெளியே எடுத்து நீரால் நன்கு கழுவி, அருகே இருந்த நாவல் மரத்தின் கிளையில் தொங்கவிட்டு உலர்த்துவார்! பின் அந்தக் குடலை மறுபடி தன் உடலுக்குள் பொருத்திக் கொண்டுவிடுவார். இதைப் பார்த்த அடியவர்கள் ஷிர்டியில் இருந்தார்கள். அவர்கள் மூலம் பாபாவின் இத்தகைய செயல்கள் வெளியுலகிற்குத் தெரியவந்தன. பாபாவின் மகிமை பரவலாயிற்று. ஆனால், பாபா தனக்கு கிடைத்த புகழை ஒருபோதும் லட்சியம் செய்ததே இல்லை.

எப்போதும் எளிய வாழ்க்கையே வாழ்ந்து வந்தார். உடல் வேதனையால் தவிக்கும் அடியவர்கள் அவரைச் சரணடைவது உண்டு. பாபாவுக்குத் தம் அடியவர்கள் படும் உடல் வேதனையைப் பொறுத்துக் கொள்ள இயலாது. அந்த வேதனை அவர்களின் முன்வினைகளால் அவர்களுக்கு நேர்ந்திருக்கிறது என்பதை அவர் அறிவார். அந்த முன்வினைப் பயன்களைத் தாம் ஏற்றுக் கொண்டு அவர்களின் உடல்வேதனை யைத் தீர்த்து வைத்துவிடுவார். அந்த வேதனையை அடியவர்களின் பொருட்டாகத் தாங்கும் கருணையும், அதைத் தாங்கிக் கொள்ளும் தவ வலிமையும் பாபாவுக்கிருந்தது. ஆண்டு 1910.... தீபாவளி விடுமுறைக் காலம்.

பாபா மசூதியில் எப்போதும் நெருப்பு மூட்டிக் குளிர் காய்ந்து கொண்டிருப்பார். அந்த நெருப்பை துனி என்று சொல்வர். அன்றும் நெருப்பில் குளிர் காய்ந்து கொண்டிருந்தார் அவர். சடசடவென ஜ்வாலையுடன்  பிரகாசமாக எரிந்துகொண்டிருந்தது துனி நெருப்பு. விறகுகளை ஒவ்வொன்றாக நெருப்பில் வைத்துத் தீயை வளர்த்துக் கொண்டிருந்தார். மசூதியின் வேலையாட்களான மாதவாலும், மாதவ்ராவ் தேஷ்பாண்டேயாலும் தொலைவில் தங்கள் பணிகளைச் செய்தவாறே பாபாவையும் பார்த்துக் கொண்டிருந்தனர்.

திடீரென விறகை எடுத்துத் துனியில் வைப்பதற்கு பதிலாகத் தம் கரத்தையே துனியின் உள்ளே வைத்தார் பாபா. மாதவாலும், மாதவ்ராவ் தேஷ் பாண்டேயும் பாபாவின் செயலைப் பார்த்துப் பதறினார்கள். அவர் அருகே ஓடோடிச் சென்றார்கள். அதற்குள் பாபாவின் திருக்கரம் முழுவதுமாகக் கருகிவிட்டது.... நெருப்பில் இருந்த அவரது கரத்தை இழுத்து பாபாவைத் தரையில் படுக்க வைத்தார்கள். பாபா அப்போது உணர்வோடு இருக்கவில்லை. மெல்ல அவர் முகத்தில் தண்ணீர் தெளித்தபோது அவர் உணர்வு நிலையை அடைந்தார். பாபா! ஏன் இப்படி உங்கள் கையையே துனிநெருப்பில் நுழைத்தீர்கள்? என்று அங்கு கூடிய பக்தர்கள் விம்மினார்கள். புன்முறுவலோடு பதில் சொல்லலானார் பாபா...
Read more...

Wednesday, February 18, 2015

மூன்று ஜென்ம பாவம் போக்கும் வில்வம்

குடும்பத்தில் வளர்ச்சியை தருவதால் சிலவற்றை தெய்வ விருட்சங்களாக வளர்க்கிறோம். அவ்வரிசையில் சிவபெருமானின் அம்சமாக விளங்குகிற வில்வமரத்தின் சிறப்பை சிவராத்திரி காலத்தில் அறிந்து வணங்குதல் வேண்டும்.

வில்வங்களில் 21 வகைகள் உள்ளதாகவும், அவற்றில் மகா வில்வமும், அகண்ட வில்வமுமே மிக உயர்ந்ததாக சொல்லப்படுகிறது. தேவலோகத்தை சேர்ந்த பஞ்சதருக்களான ஐந்து மரங்களுள் (பாதிரி, மா, வன்னி, மந்தாரை, வில்வம்) வில்வம், லட்சுமி தேவியின் திருக்கரங்களிலிருந்து தோன்றியதாக வராக புராணம் கூறுகிறது.

வில்வ மரத்தை வழிபடுவதால் லட்சுமி தேவியின் பரிபூரணமான அருள் கிட்டும். சிவபூஜை சமயத்தில் வில்வத்தால் அர்ச்சனை செய்தால் தீய சக்திகள் அகன்று தோஷங்கள் மறைந்து பகவான் ஈசனது அருட்பார்வை கிடைக்கும் ஒரு வில்வ இலையை சிவனுக்கு அர்ப்பணம் செய்வதால் மூன்று ஜென்ம பாவம் விலகும் என்கிறது.

இருபத்தோரு வில்வ வகைகளுள் மிகவும் சக்தி வாய்தது அகண்ட வில்வமாகும். இதன் காய் சற்றே ஆப்பிள் பழம் போன்று தோற்றம் அளிக்கும். இலைகளை சிவ அர்ச்சனைக்கு பயன்படுத்திக் காய்களை மகாலட்சுமி யக்ஞத்திற்கு பயன்படுத்துவார்கள். இந்த பழத்தால் யக்ஞம் செய்வதால் ஐஸ்வர்யத்தின் வடிவாக விளங்கும் யாகாக்னி தேவன் திருமகளது கருணையை விரைவில் பெற்றுத் தருவார்.

மிகப்பெரிய யாகங்கள் நடக்கும் போது 108 ஹோமப் பொருட்களில் வில்வப் பழமும் ஒன்றாகிறது. வீட்டில் அகண்ட வில்வ மரம் வளர்த்து வந்தால் அது வளரும் செடியாக இருக்கும் போதே பூஜை செய்வதால் அதுவரை குடும்பத்தில் துர் சக்திகள் விலகத் தொடங்கும். படிப்படியாக பொருட்சேர்க்கை ஏற்படும். இதை வளர்த்து வரும் அனைவருமே நலமாக இருப்பதாக கூறி உள்ளனர்.

வில்வத்தை வீட்டில் வளர்க்கக்கூடாது என்று சிலர் சொல்வதுண்டு. ஆனால் வில்வ மரம் எங்கு வளர்க்கப்படுகிறதோ அங்கே அகலாத செல்வம் தரும். மகாலட்சுமி நிரந்தரமான வசிப்பாள் என்பதை மறந்து விடக்கூடாது.
Read more...

Tuesday, February 17, 2015

சிவராத்திரி விரதத்தின் பலன்கள்

கோவில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்' என்று அவ்வையார் பாடி வைத்தார். ஆலயம் இல்லாத ஊரில் அடியெடுத்து வைக்கக் கூட ஆன்றோர்கள் யோசித்திருக்கிறார்கள். அந்த ஆலயம் இரவு முழுவதும் திறந்திருக்கின்ற நாள்தான் சிவராத்திரி.

365 நாட்களிலும் முறையாக சிவபெருமானை வழிபட இயலாதவர்கள் ஒரு நாளாகவும், திருநாளாகவும் கொண்டாடும் சிவராத்திரி இரவில் விடிய விடிய விழித்திருந்து சிவனை வழிபட்டால் நல்ல பலன்கள் யாவும் வீடு வந்து சேரும்.

இந்த விழிப்பு விரதத்தை மங்களம் தரும் மகா சிவராத்திரி என்றும், செல்வ வளம் பெருக்கும் சிவராத்திரி என்றும், எதிர்ப்புகளை அகற்றும் இனிய சிவராத்திரி என்றும், காரிய வெற்றி தரும் கனிவான சிவராத்திரி என்றும் மக்களால் வர்ணிக்கப்படுகின்றது. சிவன் பெயரை உச்சரித்து, உச்சரித்து சிறப்புகளைபெற்ற அறுபத்து மூவரைப் போல நீங்களும் மாற வேண்டுமானால் நாம் தேர்ந்தெடுக்க வேண்டிய விரதம் சிவராத்திரி விரதம்.

வாழ்வில் இருளை அகற்றி ஒளியைக் கொடுக்க நாம் விரதமிருந்து சிவனை வழிபட்டால் அசுவமேத யாகம் செய்ததன் பலன் கிடைக்கும். மகா விஷ்ணு இந்த விரதம் இருந்து தான் சக்கராயுதத்தையும், மகா லட்சுமியையும் பெற்றார் என்று புராணங்கள் சொல்கின்றன. எனவே, வாழ்வில் செல்வம், வெற்றி பெற விரும்புவோர் இந்த விரதத்தை கடைப்பிடிக்க வேண்டும்
Read more...

Monday, February 16, 2015

சபரிமலையில் படிபூஜை

பரிமலையில் தற்போது மாசி மாதபூஜைக்காக நடை திறக்கப்பட்டுள்ளது. மாதபூஜையை ஒட்டி தந்திரி கண்டரரு ராஜீவரரு, படிபூஜை  நடத்தினார். ஏராளமான பக்தர்கள்க தரிசனம் செய்தனர். சபரிமலை நடை நாளை இரவு 10 மணிக்கு அடைக்கப்படும்.
Read more...

Saturday, February 14, 2015

உடல் நலம் சீராக உத்ராட்சம் அணியலாம்

'உருத்திரம்' என்றால் 'உருத்திர மூர்த்தி', 'அட்சம்' என்றால் 'கண்'. உருத்திர மூர்த்தியின் கண்ணில் இருந்து தோன்றியதால் உருத்திராட்சம் என்ற பெயர் ஏற்பட்டது. சைவ சமயத்தைச் சார்ந்தவர்களின் சின்னங்கள் இரண்டு. ஒன்று விபூதி, மற்றொன்று உருத்திராட்சம் ஆகும்.

இவற்றை உபயோகிப்பவர்கள் இறைவனின் அருளுக்கு பாத்திரமாவதாக ஐதீகம். சிவபெருமானின் திருநயனங்களில் தோன்றியதுதான் உருத்திராட்சம் என்பர். அதை அணிந்து கொள்ளும் பொழுது உடல் நலம் சீராகின்றது. இவற்றை உபயோகிப்பவர்கள் தெய்வீகப் பற்று மேலோங்கி விளங்குவர். காந்த ஆற்றலையும், மின்னாற்றலையும் உடையது உத்திராட்சமாகும்.

அதன் நேர் கோடுகளை முகம் என்று கணக்கிடுகின்றோம். திருமுறைகள் கூறும் பொழுதும் சந்தியாவந்தன காலத்திலும் உருத்திராட்சத்தை அணிந்து கொள்ள வேண்டும். இதில் பொன், வெள்ளி போன்றவற்றை இணைத்து அணிந்து கொள்ளலாம். எடுத்து வைக்கும் பொழுது பட்டுப் பையில் வைப்பது நல்லது.

108 மணிமாலை அணிந்து சிவனை வழிபட்டால் அசுவ மேத யாகம் செய்த பலன் கிடைக்கும் என்று புராணங்கள் சொல்கின்றன. மாதவிலக்கு உடைய பெண்கள் உருத்திராட்ச மாலையைத் தொடும் சூழ்நிலை ஏற்பட்டு விட்டால் வேறு மாலையை மாற்றிக் கொள்வது தான் நன்மையைத் தரும்.
Read more...

ஏழு வகையான லிங்கங்கள்

நாம் ஏழேழு பிறவிகளுக்கும் நற்பலன்கள் கிடைக்க ஏழு வகையான சிவலிங்கங்கள் இருக்கின்றன. அவற்றை முறைப்படி நாம் வழிபட்டு வந்தால் எண்ணற்ற நன்மைகள் இல்லம் தேடி வந்து சேரும். 

சுயம்புருவ லிங்கம் - தானாக உண்டானது. 
தேவியகம் லிங்கம் - அம்பிகை வழிபட்டது.
தை விகம் லிங்கம் - தேவர்கள் வழிபட்டது. 
மானுஷம் லிங்கம் - மனிதர்கள் வழிபட்டது. 
ராட்சஸ லிங்கம் - அசுரர்கள் வழிபட்டது. 
ஆரிஷம் லிங்கம் - ரிஷிகள் வழிபட்டது. 
பாணலிங்கம் - பாணாசுரன் வழிபட்டது.
Read more...

கோவில் பிரகாரம் சுற்றுவது உணர்த்தும் தத்துவம்

தெய்வத்தை வணங்கிய பிறகு, பிரகாரத்தைச் சுற்றுவது தான் நடைமுறையில் பழக்கமாக இருக்கிறது. ஆனால், பிரகாரத்தை சுற்றிய பிறகு தான் கருவறைக்குச் செல்ல வேண்டும் என்பதே நிஜமான நியதி.

ஏனெனில், பிரகாரங்களைச் சுற்றிவரும்போதும் மற்ற எண்ணங்களை எல்லாம் விட்டு, கருவறையில் சென்று தெய்வத்தை வணங்க வேண்டுமே என்ற எண்ணம் மட்டுமே நெஞ்சில் நிறைந்திருக்கும்.

இதன் தத்துவம் என்ன? இந்த உலகில் எங்கே சுற்றினாலும் சரி... இறுதியில், நீ அடையப்போவது தெய்வத்தின் சன்னதியை என்பதையே குறிக்கிறது.
Read more...

கடன் தொல்லை போக்கும் லட்சுமி நரசிம்மர்

கோவை மாவட்டம் பொள்ளாச்சி சாலையில் ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் கோவில் உள்ளது. மிகப்பழமையான இந்த கோவில் கால மாற்றத்தால் அழிந்து விட்டது. 5 வருடத்துக்கு முன்பு ராஜ அரசு என போற்றப்படுகின்ற அரச மரத்தடியில் புற்றுக்கண்ணில் சுயம்புவாக தோன்றினார் லட்சுமி நரசிம்மர்.

கோவிலுக்கு நேர் எதிரே மகாலட்சுமியின் வடிவமான வில்வ மரம் உள்ளது. இந்த வில்வ மரத்தின் நடுவில் உள்ள இடைவெளியில் நரசிம்மர் சுயம்பு வடிவமாக காட்சி தருகிறார். இங்கு பக்தர்கள் முன்னிலையில் தெய்வ பிரசன்னம் பார்க்கப்பட்டது. அப்போது லட்சுமி நரசிம்மர் சுயம்பாக இங்கு எழுந்தருளியது பிரசன்னத்தில் தெரிய வந்தது.

லட்சுமி நரசிம்மரின் மகிமையால் நாளுக்கு நாள் பக்தர்கள் வருகை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. திருமணம் தடைபட்டவர்கள் நெய் தீபம் ஏற்றி அரச மரத்தில் மஞ்சள் கிழங்கு, மஞ்சள் கயிற்றை கட்டி 12 நாள், 12 முறை (பிரதட்சனம்) வலம் வந்து பக்தியோடு பூஜை செய்து சகஸ்ரநாம அர்ச்சனை செய்தால் திருமணம் கைகூடும் என்பது ஐதீகமாக இருந்து வருகிறது.

குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் அரச மரத்தில் தொட்டில் கட்டி 12 நாள் 12 முறை வலம் வந்து நெய் தீபம் ஏற்றினால் விரைவில் குழந்தை பாக்கியம் கிடைப்பதாகவும் கூறுகிறார்கள். பக்தர்கள் இங்கு தொழில் அபிவிருத்தி, கல்வியில் வெற்றி பெற நோய்களில் இருந்து விடுபட கடன் தொல்லை நீங்க தொடர்ந்து ஹோமங்களும், பூஜைகளும் நடந்து வருகிறது.
Read more...

சபரிமலை நடை திறந்தது 5 நாட்கள் நெய்யபிஷேகம்

மாசி மாத பூஜைக்காக, சபரிமலை நடை நேற்று மாலை 5:30 மணிக்கு திறந்தது. ஐந்து நாட்கள் நெய்யபிஷேகம் நடைபெறும். தந்திரி கண்டரரு ராஜீவரரு முன்னிலையில் மேல்சாந்தி கிருஷ்ண தாஸ் நம்பூதிரி நடை திறந்து தீபம் ஏற்றினார். தொடர்ந்து 18-ம் படி வழியாகச் சென்று ஆழி குண்டத்தில் மேல்சாந்தி நெருப்பு வளர்த்தார். வேறு பூஜைகள் நடைபெறவில்லை. இரவு, 10:00மணிக்கு நடை அடைக்கப்பட்டது.

இன்று அதிகாலை, 5:00 மணிக்கு நடை திறந்த பின், 5:30 மணிக்கு நெய்யபிஷேகம் துவங்கும். தினமும், 11:30 மணி வரை அபிஷேகம் நடைபெறும். வரும், 17ம் தேதி வரை, தினமும் நெய்யபிஷேகம் நடைபெறும். இரவு, 7:00 மணிக்கு படி பூஜை நடைபெறும்.

இந்த நாட்களில் உதயாஸ்தமன பூஜை, களப பூஜை மற்றும் வழக்கமான உஷ பூஜை, உச்ச பூஜை, அத்தாழ பூஜை ஆகியவை நடைபெறும்.மாசி மாத பூஜைக்காக சபரிமலை நடை நேற்று மாலை திறந்த போது 18ம் படியேற  பக்தர்கள் சன்னிதானம் முன் திரண்டு நின்றனர் .
Read more...

Friday, February 6, 2015

வித்யாலக்ஷ்மி ஸ்லோகம்

துர்புஜாம் மஹாலக்ஷ்மீம் கஜயுக்மஸுபூஜிதாம் 
பத்ம பத்ராய நயநாம் வராபயகரோஜ்வலாம் 
ஊர்த்வத் வயகரே சாப்ஜம் தததீம் சுக்ல வஸ்த்ரகாம் 
பத்மாஸனே ஸுகாஸீனாம் பஜேஹம் ஸர்வமங்களாம். 

பொதுப்பொருள்:

 நான்கு கைகளை உடைய நாயகியே, பேரழகு பொலியும் திருமேனியைக் கொண்டவளே, வலக்கரங்களில் அபய ஹஸ்தமும் தாமரை மலரையும் ஏந்தியருள்பவளே, இடது கரங்களில் வரத ஹஸ்தமும் தாமரை மலரையும் கொண்டவளே, அறம், பொருள், இன்பம், வீடு ஆகிய சதுர்வித புருஷார்த்தங்களையும் தன்னை வணங்குவோர்க்கு அருளி, கல்வி, செல்வ வளம் செழிக்க அருள்பவளே, நமஸ்காரம்.

- இந்தத் துதியை வரலட்சுமி விரத தினத்தன்று ஆரம்பித்து ஒவ்வொரு செவ்வாய், வெள்ளிக்கிழமைகளிலும் பாராயணம் செய்து வந்தால் கல்வி, செல்வ வளம் செழிக்கும்.
Read more...

வியாதிகளை போக்கும் சங்காபிஷேகம்

100 ஆண்டுகளுக்கு ஒருமுறை கடலில் சங்கு தோன்றுவதால், அதற்கு ஆயுளை அதிகரிக்கும் தெய்வசக்தி உண்டு. உயிர்களை பறிக்கும் அதிகாரம் கொண்டவர் எமதர்மன்.

இவர் திருமீயச்சூர் லலிதாம்பிகா சமேத மேகநாத சுவாமி ஆலயத்தில் நீண்ட ஆயுளைத் தரவல்ல சங்கு கொண்டு 1008 சங்காபிஷேகம் செய்தார் என்றும், மிகவும் சக்தி வாய்ந்த மூலிகையும், எமலோகத்தின் தல விருட்சங்களில் ஒன்றான பிரண்டை கலந்த அன்னத்தை நிவேதனம் செய்தும் சிவபெருமானை வழிபட்டார் எனவும் தலபுராணம் கூறுகிறது.

எனவே தீராத வியாதியால் பாதிக்கப்பட்டவர்கள் தாமரை இலைகளில் பிரண்டை சாதத்தையும், சங்கு புஷ்பத்தை வைத்து சதய நட்சத்திரத்தில் சிவபெருமானை பூஜிக்க வேண்டும். பின்னர் அந்த தாமரை இலையிலேயே அன்னத்தை வைத்து ஏழைகளுக்கு தானம் அளித்து, தாமும் உண்ண வேண்டும்.

இவ்வாறு செய்தால் கடுமையான நோய் மற்றும் துன்பங்களில் இருந்து விடுபட்டு நீண்ட ஆயுளோடு வாழலாம் என்பது ஐதீகம். கருடனின் மூத்த சகோதரன் அருணன். இவர் கால்கள் இல்லாமல் ஊனமாக பிறந்தவர். சூரியனின் தேரோட்டியாக இருப்பவர். சூரியோதயத்தை அவரது பெயரால் அருணோதயம் என்றும் சிலர் அழைப்பார்கள்.

சிறந்த சிவபக்தனான அருணன், கயிலாயம் சென்று சிவபெருமானை தரிசிக்க சூரியனிடம் அனுமதி கேட்டான். அதற்கு சூரியன், 'நீ! உடல் ஊனமுற்றவன். உன்னால் ஈஸ்வரனை தரிசனம் செய்ய முடியாது' என்று கூறி கிண்டலும், கேலியும் செய்தான். சூரியன் கொடுத்த துன்பத்தை தாங்கிக்கொண்ட அருணன், விடாமுயற்சியுடன் கடும் தவம் இருந்து சிவனின் தரிசனத்தைப் பெற்றான்.

சிவதரிசனம் செய்ய முயன்ற அருணனை கேலி செய்த சூரியனின் மீது சிவனின் கோபம் திரும்பியது. அவர் சூரியனிடம், 'என்னை தரிசனம் செய்ய நினைத்த அருணனைத் துன்புறுத்திய நீ ஒளி இழந்து போவாய்' என்று சாபமிட்டார். இதனால் உலகமே இருண்டு போனது. சூரியனின் உருவம் கருமை நிறத்தை அடைந்தது.

சூரியன் மிகவும் வருந்தி மன்னிப்புக்கேட்டு கொண்டதன் பேரில், 'திருமீயச்சூரில் தீர்த்தம் அமைத்து பதினொரு மாத காலம் சிவ வழிபாடு செய்ய வேண்டும்' என்று சாப விமோசனத்திற்கான வழியை சிவபெருமான் கூறினார். சூரிய பகவான் திருமீயச்சூரில் தவமும், வழிபாடும் நடத்தி மீண்டும் இழந்த தன் ஒளியைப் பெற்றார்.

ஒவ்வொரு வருடமும் சித்திரை மாதம் 21 முதல் 27-ந் தேதி வரை, இந்த ஆலய கருவறையில் உள்ள லிங்கத்தின் மீது சூரிய ஒளி விழுவது சிறப்பு மிகுந்ததாக உள்ளது. இந்த நேரத்தில் பக்தர்கள் தரிசனம் செய்தால் தேக ஆரோக்கியம் பெறலாம் என்று கூறப்படுகிறது.

திருவாரூர் மாவட்டம், நன்னிலம் தாலுகா, பேரளம் ரெயில்நிலையத்திற்கு மேற்கே 1 கிலோ மீட்டர் தூரத்தில் திருமீயச்சூர் ஆலயம் உள்ளது. மயிலாடுதுறையில் இருந்து திருவாரூர் செல்லும் பாதையிலும், கும்பகோணத்தில் இருந்து காரைக்கால் வழியாக சென்றாலும் இத்தலத்தை அடையலாம்.
Read more...

Monday, February 2, 2015

ஏகாதசி விரதம் இருப்பவர்கள் சொல்ல வேண்டிய ஸ்லோகம்

ஓம் கேசவாயநம,
ஓம் நாராயணாயநம,
ஓம் மாதவாயநம,
ஓம் கோவிந்தாயநம,
ஓம் விஷ்ணுவேநம,
ஓம் மதுசூதனாயநம,
ஓம் த்ரிவிக்ரமாயநம,
ஓம் வாமனாயநம,
ஓம் புருஷோத்தமாயநம,
ஓம் ஸ்ரீதாராய நம,
ஓம் அதோஷஜாயநம,
ஓம் ஹ்ருஷீகோசய நம,
ஓம் நரசிம்ஹாயநம,
ஓம் பத்மனாபாயநம,
ஓம் அச்யுதாயநம,
ஓம் தாமோதராயநம,
ஓம் ஜனார்த்தனாயநம,
ஓம் ஸ்ங்கர்ஷணாயநம,
ஓம் உபேந்த்ராயநம,
ஓம் வாஸூதேவாயநம,
ஓம் ஹரயேநம,
ஓம் ப்ரதுய்ம்னாயநம,
ஓம் க்ருஷ்ணாயநம

- என்பது போன்ற எளிய நாமங்களைக் கூறி வழிபடலாம்.

Read more...

கம்பர் ஆஞ்சநேயருக்கு பாடிய பாடல்

ராமாயணம், பாடத் தொடங்கிய கம்பர், கடவுள் வாழ்த்துப் பகுதியில் ஆஞ்சநேயருக்காகவும் ஒரு பாடல் பாடி உள்ளார். அந்தப் பாடலில் நிலம், நீர், தீ, காற்று, ஆகாயம் என்னும் ஐம்பூதங்களோடு ஆஞ்சநேயரைத் தொடர்புபடுத்தி உள்ளார். இதோ அந்த பாடல்:

'அஞ்சிலே ஒன்று பெற்றான் அஞ்சிலே ஒன்றைத் தாவி 
அஞ்சிலே ஒன்று ஆறாக ஆரியற்காக ஏகி 
அஞ்சிலே ஒன்று பெற்ற அணங்குகண்டு அயலார் ஊரில் 
அஞ்சிலே ஒன்றை வைத்தான் அவன் எம்மை அளித்துக்காப்பான்' 

இதன் பொருள்: 

ஐம்பூதங்களுள் ஒன்றாகிய காற்றுக்கு மைந்தனாகிய அனுமன், ஐம்பூதங்களுள் ஒன்றாகிய நீர்ப்பரப்பாகிய கடலைத்தாண்டி, ஐம்பூதங்களுள் ஒன்றாகிய ஆகாயத்தையே வழியாகக் கொண்டு இலங்கையை அடைந்து, ஐம்பூதங்களுள் ஒன்றாகிய நிலமகள் பெற்றெடுத்த சீதையைக் கண்டு, அயலார் ஊரில் ஐம்பூதங்களுள் ஒன்றாகிய தீயை வைத்தான்.

இதன் மூலம் ஆஞ்சநேயர் ஐம்பூதங்களையும் தமக்குள் கட்டுப்படுத்தியவர் என்பது தெளிவாகிறது. எனவே ஆஞ்சநேயரை வணங்கினால் ஐம்பூதங்களையும் வணங்கியதற்குச் சமமாகும். ஆஞ்சநேயரை வணங்கினால் ஐம்பூதங்களின் சக்தியும் நமக்குப் பரிபூரணமாகக் கிடைக்கும் என்பது ஐதீகம்.

Read more...

வீரபத்திரர் 108 போற்றி

 ரனின் கரனே ஐய்யாபோற்றி!
ஆவுடையான் தந்த அருளேபோற்றி!
இழிந்த யாகத்தை இடறினாய்போற்றி!
ஈசன் மகனே இறைவாபோற்றி!
உருத்திரன் சேவகன் ஆனாய்போற்றி!
ஊக்கமும் அருளும் தருவாய்போற்றி!
எட்டுக் கைகள் உடையாய்போற்றி!
ஏறு ஊர்தியான் செல்வனேபோற்றி!
ஐயன் ஆணை முடித்தாய்போற்றி!
ஒன்றான வடிவம் கொண்டு ஒட்டாரை    
ஓட்டம் பிடிக்கச் செய்தாய் போற்றி!

ஒளடதத் தடை செய்தாய்போற்றி!
சிவனார் சிகையில் தோன்றினாய்போற்றி!
சீலம் அளித்துக் காப்பாய்போற்றி!
தும்பை சூட அதிர வருவாய் பொருதுபோற்றி!
பஞ்ச ஆயுதம் பஞ்சாய்ப் பறக்க செய்வாய் போற்றி!
வெஞ்சமர் புரிந்த வீரவா போற்றி!
அரக்கர் படையை ஓடச் செய்தாய்போற்றி!
காளிப் படையை முன்னே அனுப்பிக்
கவின்மிகு வெற்றி பெற்றாய் போற்றி!
பைரவர் துணை கொண்டாய்போற்றி!
பாங்காய் வெற்றி அடைந்தாய் போற்றி!

திக்குப் பாலரைத் திக்குமுக்காடச் செய்து
திசையெல் லாம்வெற்றி பெற்றாய்போற்றி!
பகனின் கண்ணைப் பறித்தாய்போற்றி!
பகலவன் பற்களைப் பறித்தாய்போற்றி!
ஒளியால் உலகை ஆளும் கதிரவன்
ஒளியை இழக்கச் செய்தாய் போற்றி!
சந்திரனைக் காலால் தேய்த்தாய்போற்றி!
அக்னி நாவை அறுத்தாய்போற்றி!
அவனது தடக்கை தறித்தாய்போற்றி!
அமரர் வாழ்வை முடித்தாய்போற்றி!
குயிலின் சிறகை ஒடித்தாய்போற்றி!
வசிட்டர் காமதேனு பறித்தாய் போற்றி!

அகத்தியனைக் குகையில் அடைத்தாய்போற்றி!
அமரர் ஆணவம் அழித்தாய்போற்றி!
எமனின் வாகனம் பற்றினாய்போற்றி!
ல்லா வாகனமும் அழித்தாய்போற்றி!
ஏகன் பணியை முடித்தாய்போற்றி!
எமனின் கொடியைப் பற்றியவாபோற்றி!
வருணன் தடக்கை பிணைத்தாய்போற்றி!
மலைகளைத் தகர்த்த மன்னவாபோற்றி!
காடு கொண்ட விருட்சப் படையைப்
பீடு கொன்றைக் கீழடக்கியவாபோற்றி!
முனிவர் வெருவ முடித்தாய் போற்றி!

வேதியரை ஓடியே ஒளியச் செய்தாய் போற்றி!
தக்கன் தலையை அறுத்து ஒழித்து
தகரின் தலையை அளித்தாய்போற்றி!
மாமக மொடியத் தக்கனைத் தடிந்திடு
தமருகன் தந்த தனயனேபோற்றி!
தக்கன் செருக்கைச் சிதைத்து அழித்து
தாட்சாயணி சாபம் முடித்தாய்போற்றி!
காளியைத் துணையாய்க் கொண்டாய்போற்றி!
காக்கும் தெய்வமேபோற்றி!
வேள்வியை அழித்த வெவ்வுருவேபோற்றி!
தோல்வியே அறியாத் தூயவரேபோற்றி!
அட்டமா ஆயுதம் ஏந்தினாய்போற்றி!
இட்ட பணியை முடித்தாய் போற்றி!

தக்கன் அவனின் வேள்விக் களமே
நன்காட்டுக் களமாய் மாற்றினாய்போற்றி!
தண்டமிழ் போற்றும் செந்தமிழ் கடவுளே நாட்டில்போற்றி!
தனித்த கோயில் கொண்டாய்போற்றி!
தரணி எங்கும் நிறைந்தாய்போற்றி!
தமிழர் வாழ்வைக் காப்பாய்போற்றி!
ஆசறு ஆதி வானவனேபோற்றி!
ஆந்திராவில் அழகுற அமர்ந்தாய்போற்றி!
கர்நாடகத்தில் கவினுற இருந்தாய்போற்றி!
கேரளாவில் கோயில் கொண்டாய்போற்றி!
பர்வத மலையுறை பாலனே போற்றி!

காஷ்மீர் மாநிலத்தில் உறைத்தாய்போற்றி!
பேசும் தெய்வம் ஆனாய்போற்றி!
தேவாரப் பண்ணில் மிளிர்ந்தாய்போற்றி!
திருவாசக உந்தியில் அமர்ந்தாய்போற்றி!
வேதத்தில் சிறப்பிடம் பெற்றாய்போற்றி!
நாட்டுப்புற பாடல்களில் நல்லிடம் பெற்றவரேபோற்றி!
சிவனின் திருஉரு பெற்றாய்போற்றி! தீமைகளை அழித்துக்
காப்பாய்போற்றி! நல்இடம் பெற்ற இனியவாபோற்றி!
சூலம் ஏந்திச் சூறாவளியாய் வந்து
ஓலமிட்டு ஒடச் செய்தாய்  போற்றி!

சசிமுடி கண்டும் அஞ்சா தவரேபோற்றி!
சக்கரம் அடங்க அதட்டொலி செய்த அற்புத வாயுடைய
வீரபத்ரா போற்றி! சினத் தீயின் வெம்மையே போற்றி!
சிந்தனையில் நிறைந்த சிவஉருவேபோற்றி!
சிவனின் தோற்றம் கொண்டாய்போற்றி!
சீராய் வினைகள் முடித்தாய்போற்றி!
அல்லோரை அழித்து ஒழிப்பாய்போற்றி!
நல்லோரை வாழ வைப்பாய்போற்றி!
கற்கும் பிள்ளைகட் கருள்வாய்போற்றி!
கவலைகள் தீர்த்து அருள்வாய் போற்றி!

கருவைக் காத்து நிற்பாய்போற்றி!
காலம் தோறும் சிறப்பாய்போற்றி!
கணபதியின் கருணைமிகு சோதராபோற்றி!
முருகனுக்கு மூத்த முதல்வனேபோற்றி!
அருள்மிகு வீரபத்ர தெய்வமேபோற்றி!
அடிப்பெருங் கடவுள் ஆனாய்போற்றி!
வினைகள் அறுக்கும் வீரனேபோற்றி!
வீரத்தை வழங்கும் வித்தகாபோற்றி!
நித்தம் அருளைப் பொழிவாய்போற்றி!
உன்னத வாழ்வை அளிப்பாய் போற்றி!

காவல் தெய்வம் ஆனாய்போற்றி!
சைவம் தழைக்கச் செய்தாய்போற்றி!
சிவந்த செம்பொற் கழலடிபோற்றி!
வம்சம் செழிக்கச் செய்வாய்போற்றி!
வளமான வாழ்வு அளிப்பாய்போற்றி!
நாமகள் நாசியை அரிந்தாய் போற்றி!
நானிலம் சிறக்கச் செய்வாய்போற்றி!
திண்மை நிறைந்த தோளாய் போற்றி!
தீமை மனத்தைத் தீய்ப்பாய்போற்றி!
உலகம் உய்யச் செய்வாய் போற்றி!

உத்தமத் தெய்வமே பத்திராபோற்றி!
தேவரை விரட்டிய தேவரேபோற்றி!
தேயமெலாம் போற்றும் வீரரேபோற்றி!
மாண்டவர்க்கு மீண்டுயிர் கொடுத்தவரேபோற்றி!
மீண்டும் போரிட்ட புத்திராபோற்றி!
மங்கையர் மாங்கல்யம் காப்பாய்போற்றி!
மாண்புறு தெய்வமாய் ஆனாய்போற்றி!
போற்றி போற்றி வீரபத்திரரேபோற்றி!
Read more...

ஸ்ரீகமலாம்பிகா அஷ்டகம்

மலாம்பிகை அஷ்டகத்தை பாராயணம் செய்து வந்தால் கிட்டாதது எதுவும்
இல்லை என்பது பெரியவர்களின் நம்பிக்கை. செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் கீழ்காணும் அஷ்டகத்தைப் பாராயணம் செய்து, அம்பிகை அருளால் அனைத்து நலன்களும் பெறுவோம்.

பந்தூகத்யுதிமிந்து பிம்ப வதனாம் 
ப்ருந்தாரகைர்வந்திதாம் 
மந்தாராதி ஸமர்சிதாம் மதுமதீம் 
மந்தஸ்மிதாம் ஸுந்தரீம் 
பந்தச்சேதன காரிணீம் த்ரிநயனாம் 
போகாபவர்கப்ரதாம் 
வந்தேஹம் கமலாம்பிகாம் அனுதினம் 
வாஞ்சானுகூலாம் ஸிவாம் 

பொருள் :

செம்பருத்தி மலர் போன்ற செவ்வொளி பூண்டவளே, ஒளிமிகு சந்திரன் போன்ற முகம் கொண்டவளே, தேவர்களால் வணங்கப்பட்டவளே, மந்தாரம் முதலான மலர்களால் பூஜிக்கப்பட்டவளே, மனதிற்கு எப்போதும் சந்தோஷம் அளிப்பவளே, நிலைத்த புன்சிரிப்புடன் திகழ்பவளே,

அழகின் இலக்கணமே, கர்மபந்தத்தை போக்குகிறவளே, முக்கண்களை உடையவளே, இவ்வுலகில் எல்லா சுகங்களையும் அளித்து, நிரந்தர சந்தோஷமான மோட்சத்தையும் அளிப்பவளே, பக்தர் விரும்பியனவெல்லாம் நிறைவேற்றித் தருபவளே, மங்களமே வடிவானவளே, கமலாம்பிகையே, நமஸ்காரம்.
Read more...

பைரவரை விரதமிருந்து வழிபட வேண்டிய நாட்கள்

பைரவரை வழிபட ஒவ்வொரு மாதமும் அஷ்டமி திதி சிறந்தது. அன்று அஷ்ட லட்சுமிகளும் பைரவரை வழிபடுவதாக ஐதீகம். அன்றைய தினம் பைரவரை விரதமிருந்து வழிபட்டால் பொன், பொருள், ஐஸ்வரியம், சுகம் அனைத்தையும் அடையலாம்.

பைரவ வழிபாட்டை முதன் முதலில் தொடங்குபவர்கள் தைமாதம் முதல் செவ்வாய்க்கிழமை தொடங்க வேண்டும். தொடர்ந்து ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் விரதமிருந்து பைரவரை வணங்கி, கால பைரவ அஷ்டக துதி பாடினால் எதிரிகள் தொல்லை அகலும். கடன்சுமை தீரும். எமபயம் நீங்கும்.

ஞாயிற்றுக்கிழமை ராகுகாலத்தில் பைரவருக்கு விரதமிருந்து அர்ச்சனை, ருத்ராபிஷேகம், வடைமாலை சாத்தி வழிபட்டால் திருமணத்தடை நீங்கி விரைவில் திருமணப் பேறு கிடைக்கும். கடன் சுமை உள்ளவர்கள், ராகுகாலத்தில் காலபைரவருக்கு முந்திரிபருப்பு மாலைகட்டி, புனுகுசாற்றி, வெண்பொங்கல் நைவேத்தியம் செய்தால் நலம் பெறலாம்.

சிம்ம ராசிக்காரர்கள் இந்த கிழமையில் விரதமிருந்து வழிபடுவது சிறப்பானது. திங்கட்கிழமையில் சிவனுக்கு பிரியமான வில்வ அர்ச்சனை செய்தால் அருள் கிடைக்கும். திங்கட்கிழமை அல்லது சங்கடஹரசதுர்த்தியன்று விரதமிருந்து பைரவருக்கு பன்னீர் அபிஷேகம் செய்து, சந்தனக் காப்பிட்டு, புனுகு பூசி, நந்தியாவட்டை மலர் சாற்றி வழிபட கண்நோய் அகலும்.

கடக ராசிக்காரர்கள் இந்தக் கிழமைகளில் விரதமிருந்து வழிபடலாம். எதிர்பாராத விதமாக இழந்து விட்ட பொருளை திரும்ப பெற, பைரவர் ஆலயத்தில் செவ்வாய்க்கிழமை மாலையில் மிளகு தீபம் ஏற்றி வழிபட்டால் பலன் கிடைக்கும். மேஷம், விருச்சிக ராசிக்காரர்கள் விரதமிருந்து வழிபாட்டுக்குரிய நாள் இது.

எல்லா அஷ்டமி திதிகளிலும் பைரவர் விரதம் இருக்கலாம். செவ்வாய்க்கிழமைகளில் அஷ்டமி திதி வந்தால் சிறப்பு. குறைந்தது 21 அஷ்டமிகள் தொடர்ந்து விரதம் இருக்க வேண்டும். ஆறு தேய்பிறை அஷ்டமிகளில் பைரவரை சிவப்பு நிற அரளியால் வழிபட்டால், நல்ல மக்களைப் பெறலாம். புதன்கிழமை நெய் தீபம் ஏற்றிவழிபட வீடு, மனை வாங்கும் யோகம் கிடைக்கும்.

மிதுனம், கன்னி ராசிக்காரர்கள் விரதமிருந்து வழிபட வேண்டிய நாள். வியாழக்கிழமை பைரவருக்கு விளக்கேற்றி வந்தால் ஏவல், பில்லி, சூனியம் நீங்கி நலம் கிடைக்கும்.

தனுசு, மீன ராசிக்காரர்கள் விரதமிருந்து வழிபட இந்தக் கிழமை சிறந்தது. வெள்ளிக்கிழமை மாலையில் பைரவ மூர்த்திக்கு வில்வ இலைகளால் அர்ச்சனை செய்ய நீங்காத செல்வம் வந்து நிறையும்.

ரிஷபம், துலாம் ராசிக்காரர்கள் விரதமிருந்து வழிபட ஏற்ற நாளாகும். சனி பகவானுக்கு குரு, பைரவர். ஆகவே சனிக்கிழமையன்று விரதமிருந்து இவரை வழிபடுவதால் சனி தோஷம் விலகி நன்மை கிடைக்கும்.

மகரம், கும்ப ராசிக்காரர்கள் வழிபட வேண்டிய நாள். 64 பைரவர்களில் யாருக்கு வேண்டுமானாலும் தினமும் சாதாரண விளக்கு போடலாம். அது முடியாதவர்கள் ஒருநாள் மட்டும் விளக்கு போடலாம்.
Read more...

உறங்கி எழுந்ததும் உள்ளங்கையைப் பார்க்க வேண்டும் என்பது ஏன்?

நாம் நமது அன்றாடப் பணிகளைச் செய்வதற்கு கைகள் மிகவும் பயன்படுகின்றது. கைகளின் உதவியில்லாமல் எந்த ஒரு காரியத்தையும் செய்ய முடியாது. செயல்களுக்குரிய புலன்களில் கைகளுக்குத் தனி இடம் உண்டு. இறையுருவத்தை வணங்க, புஷ்பத்தை அள்ளிச் சமர்ப்பணம் செய்ய கைகள் உதவும். இறையுருவங்கள், அபய வரத முத்திரைகளைத் தாங்கிய திருக்கரங்களுடன் காட்சி தரும்;

இறையுருவத்தின் பெருமையை கைகள் வெளிப்படுத்தும். கைகளை கடவுளுக்குச் சமானமாகச் சொல்கிறது வேதம் (அயம் மெஹஸ்தோ பகவான்...). திருமணத்தை நிறைவு செய்வது பாணிக்ரஹணம்; அதாவது, கை பிடித்தல்... கன்னிகையின் கை பிடித்து வரனிடம் அளிக்க வேண்டும். அரசர்களையும் துறவிகளையும் கைத்தாங்கி பெருமைப்படுத்துவார்கள். மந்திர ஜபங்களில் கரன்யாசத்துக்குக் கைகள் வேண்டும். முதுமையில் ஊன்றுகோலைப் பயன்படுத்த கை வேண்டும்.

கையின் நுனியில் அலைமகளும், நடுவில் கலைமகளும் அடிப்பக்கத்தில் கோவிந்தனும் இருப்பதாகப் புராணம் சொல்லும். ஹஸ்தரேகா சாஸ்திரம் கையை வைத்து உருவானது. அறிவு, செல்வம், ஆன்மிகம் ஆகிய மூன்றையும் பெற, காலையில் எழுந்ததும் கைகளைப் பார்க்க வேண்டும். அத்துடன்

கராக்ரே வஸதெ லஷ்மீ கரமத்யே ஸரஸ்வதி
கரமூலேது கோவிந்த: ப்ரபாதெ கரதர்சனம்

என்ற ஸ்லோகத்தைக் கூற வேண்டும். கையைத் தலையணையாக வைத்து உறங்கும் நமக்கு, விழித்ததும் அதைப் பார்ப்பது எளிது. நல்ல நடைமுறைகளைப் பின்பற்றினால் நன்மைகள் பல உண்டு.
Read more...

தைப்பூசம்


தேவர்களின் குருவான பிரஹஸ்பதியின் பூச நட்சத்திரத்தில் குருவை வழிபடுவது, நம் வாழ்வைத் தெளிவாக்கும். சிவாகமங்களில்,  ஒவ்வொரு மாதத்துக்கும் உரிய நட்சத்திரத்தை 'மாஸபம்’ என்பார்கள். தை மாதத்தின் பூச நட்சத்திரம் அல்லது பௌர்ணமி திதியைக் கொண்டு, ஆலயங்களில் சிறப்பு பூஜைகள் செய்வது நாட்டு மக்களுக்கும் நாட்டை ஆள்பவர்களுக்கும் உயர்வைக் கொடுக்கும் என ஆகமங்கள் தெரிவிக்கின்றன. அன்று சிவபெருமான், முருகக் கடவுள் மற்றும் பிரதான தெய்வமாக வழிபடக்கூடிய அனைத்து தெய்வத் திருமேனிகளுக்கும் தேன் கொண்டு அபிஷேகம் செய்தல் சிறப்பு. 'புஷ்ய மாஸே து புஷ்யர்க்ஷே குர்யாத் க்ஷேளத்ராபிஷேசனம்’ (காமிகாகமம்) என்று தேன் அபிஷேகம் செய்யச் சொல்லி அறிவுறுத்துகிறது.

( பிப்ரவரி 3  (Tuesday) 2015 அன்று   தைப்பூசம் )

சூல விரதம்!

சைவர்கள் சிறப்பாகப் போற்றும் எட்டு மகா விரதங்களில் சூல விரதமும் ஒன்று. மார்கழி திருவாதிரையில் தனித்து ஆடுகிற சிவனார், தைப் பூசத்தில், உமையவளுடன் திருநடனம் புரிந்தார். எனவே உமையருபாகனைத் துதிப்பது ரொம்பவே விசேஷம். குடும்ப ஒற்றுமை மேலோங்கும்! இந்த விரத மகிமைகளை வீரபத்திரர், பாணுகம்பனுக்கு உபதேசிப்பதாக ஸ்கந்த புராணம் தெரிவிக்கிறது.

அகத்திய மகரிஷி தந்த சிவகிரி, சக்திகிரி ஆகிய மலைகளை காவடி போன்று தூக்கி வந்த இடும்பன் என்ற அசுரனை ஆட்கொண்ட கலியுகக் கடவுள் கந்தப்பெருமான்! கவலைகள் மலையைப் போன்று இருப்பதால், அவற்றை எம்மிடம் அளித்து நீ கவலையற்று இரு என்று உணர்த்தி எந்த அடியை தொழுதால் இவ்வுலகம் காப்பாற்றப்படுகிறதோ அவருக்கு பக்தர்கள் காவடியை சமர்ப்பித்து பிறவிப் பிணியிலிருந்து விடுபடச் சிறந்த நாள்!

இரண்யவர்மன் எனும் அரசன் தில்லையில் ஆனந்த நடராஜருக்கு அர்ப்பணித்த திருப்பணிகளால் மகிழ்ந்த கூத்தபிரான், அந்த மன்னனுக்கு ஆனந்தக் காட்சி அளித்த நாளும் இதுவே!  
பொதினி என்று போற்றப்படும் பழநியில் வீற்றிருந்து அருள்பாலித்து வரும் ஸ்ரீதண்டாயுதபாணியை வழிபட்டு கஷ்டங்கள் நீங்கி, இன்பம் பெற காவடிகளைச் சமர்ப்பிப்பது வாழ்வில் வளம் சேர்க்கும்!



ரத ஸப்தமி!

தை மாதம் வளர்பிறை ஸப்தமி திதியன்று கொண்டாடப்படும் பண்டிகை இது. மிக எளிமையான, அதேநேரம் நம் சந்ததியை வளமாக்கும் விசேஷமும்கூட!
குழந்தைகள் முதல் பெரியோர் வரை அனைவரும் விடியற்காலையில் எழுந்து கிழக்கு நோக்கி நின்றபடி, ஏழு எருக்க இலைகள் அதனுடன் அட்சதை, பசுஞ்சாணி, மஞ்சள் பொடி ஆகியவற்றைச் சேர்த்து, தலையில் வைத்துக் கொண்டு சூரிய பகவானை நோக்கி, நாம் செய்த பாவங்கள் அனைத்தும் போக்கச் செய்யும்படி பிரார்த்திக்க வேண்டும். இந்த நாளன்று பகலவனின் தேரானது தெற்கிலிருந்து வடக்கு நோக்கித் திரும்புவதால் மிகுந்த ஆற்றல் படைத்தது என்பது ஐதீகம்.

ஸப்த ஸப்தி ப்ரியே தேவி ஸப்த லோகைக பூஜிதே
ஸப்த ஜன்மார்ஜிதம் பாபம் ஹர ஸப்தமி ஸத்வரம்!
எனும் துதியை ஸப்தமி திதியின் அதிபதியான தேவியிடம் பிரார்த்தித்து வணங்கினால், ஏழு ஜன்மங்களில் செய்த பாவங்களும் நம்மை விட்டு விலகிவிடும் என்பது நம்பிக்கை!


பீஷ்மாஷ்டமி!

ன் தந்தையின் பொருட்டு, திருமணமே செய்யப் போவது இல்லை எனும் உயர்ந்த சத்தியத்தைச் செய்த பிதாமஹர் பீஷ்மர் ஸித்தி அடைந்த தினமே பீஷ்மாஷ்டமி எனும் நன்னாள்!

ஓம் பீஷ்மாய நம: என்று மூன்று முறை, தண்ணீரை கைகளினால் அர்க்கியமாக விடவேண்டும். இதனால் நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும் கிடைக்கும் என்பது நம் முன்னோர்கள் கண்ட உண்மை!
எப்படி தொலைபேசியில் ஒருவரின் எண்ணை டயல் செய்தால் அவர் எவ்வளவு தூரத்தில் இருந்தாலும் அவருடன் பேச முடிகிறதோ, அதுபோன்று நம் முன்னோர்கள், இந்த நாட்களில் இவரிவர் குறித்து இப்படியிப்படிச் செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்கள்.

அதன்படி அந்தந்தக் கிரியைகள் தனிச் சிறப்பு கொண்டவை என்பதை  அறிந்து, உணர்ந்து, புரிந்து பக்தியுடனும் நம்பிக்கையுடனும் செய்தால்... தை பிறந்தால் வழி பிறக்கும் என்று நீங்களும் உறுதிபடச் சொல்வீர்கள்!
Read more...
 
ஆன்மிகம் © 2011 - WebSite & Designig by Yazhini