Banner 468 x 60px

 

Friday, January 3, 2014

கருட புராணம் பகுதி - 4

0 Facebook
தோஷ பரிகாரங்கள்

பிரேத ஜன்மம் பெற்றவன் தன்னவர் கனவில் தோன்றினாலும், துன்பங்களைச் செய்தாலும் அது பற்றி பெரியோர்களிடம் தெரிவித்து அவர்கள் காட்டும் தர்மவிதிகளில் சித்தம் வைத்துத் தென்னை, மா, சண்பகம், அரசு ஆகிய மரங்களை வைத்துப் பயிர் செய்யலாம். நந்தவனம் அமைக்கலாம். பசுக்களுக்கு மேய்ச்சல் நிலம் அமைக்கலாம். அந்தணர்களுக்குப் பூதானம் செய்யலாம். நீர் நிலைகள் ஏற்படுத்தலாம். பகவத் கைங்கரியம், பாகவத கைங்கரியம் செய்யலாம். புனித நதிகளில் நீராடி தான, தருமங்கள் செய்யலாம். தோஷ காரணமாக எதிலும் நாட்டம் இல்லாமல் போனாலும் ஊக்கமுடன் முயன்று அந்தந்த தர்மங்களைச் செய்து இன்பம் அடையலாம். இவ்வாறு செய்வதால் பிரேத ஜன்மத்தின் பிரேத சரீரம் நீங்கிவிடும். அவன் குலம் விளங்க ஒரு புத்திரன் உண்டாகவும் செய்வான்.

பிரேத ஜன்ம தோஷத்தால் ஏற்படும் துன்பங்கள் தொலைய பெரியோர்களின் அறவுரையை, அறிவுரையை நம்பி ஏற்க வேண்டும். ஸ்நானம், ஜபதபம், ஹோமம், தானம் முதலியவற்றால் பாவநிவாரணம் அடைந்து நாராயண பலி செய்ய வேண்டும். புண்ணிய காலங்களில் புண்ணியத் தலங்களில் பித்ருக்களைக் குறித்து தானதர்மங்களைச் செய்தால், பூத, பிரேத, பைசாசங்களால் தொல்லையோ, துன்பமோ ஏற்படாது. மாதா, பிதா, குரு ஆகியோரைப் பூசிப்பது ஒருவர்க்குத் தலையாய கடமையாகும். தாய், தந்தை மரித்த பின், அவர்களைக் குறித்துச் செய்யப்படும் தான தர்மங்களின் பயனை அவனே அடைகிறான்.

பிரேத ஜன்மம் அடைவதற்கான காரணங்கள்
ஒருவன் பிரேத ஜன்மம் அடைவதற்கான பல காரணங்கள் சொல்லப்பட்டுள்ளன. அவற்றைக் கீழே காண்க. பூர்வ ஜன்மத்தில் மகாபாவம் செய்தவனே பிரேத ஜன்மம் அடைவான்.

1. நீர்நிலைகள் ஏற்படுத்துதல், தண்ணீர்ப்பந்தல் வைத்தல். சத்திரம், தேவாலயம் கட்டுதல் போன்ற தருமத்தை ஒருவன் செய்திட, அவன் மரித்தவுடன் அவன் குலத்தில் பிறப்பவன் அவற்றை விற்றுவிட்டால் பிரேத ஜன்மம் பெறுவான்.

2. தருமத்தைச் செய்தவனே விற்றாலும் பிரேத ஜன்மம் பெறுவான்.

3. பிறருக்குரிமையான பூமியை அபகரித்தவன் பெறுவான்.

4. அடிபட்டு, இடிபட்டு, இடி தாக்கி, தீக்குளித்து, தூக்கிட்டுக் கொண்டு, விஷம் உண்டு, மாடு மூட்டி இறந்தவர்கள் சம்ஸ்காரம் செய்வதற்கு நாதியற்றவன், திருடனால் மரித்தவன், அயலூரில் இறந்தவன், பெற்றோர்க்குச் சிரார்த்தம் செய்யாது மரணமடைந்தவன் ஆகியோர் பிரேத ஜன்மத்தை அடைவர்.

5. ஒருவனுடைய அந்திமக் கிரியைகளை அந்தச் சாதியிலுள்ளவரே செய்ய வேண்டும். வேறு ஒருவர் செய்தால் பிரேத ஜன்மமடைவர்.

6. மலையிலிருந்தோ, கட்டிலில் படுத்து உள்ளவாறோ, இறை நாமம் உச்சரிக்காமல் உயிர்விட்டவன், ரஜஸ்வாலை பெண், சண்டாளன் ஆகியோரைத் தீண்டிவிட்டு சூதகத் தீட்டோடு இறந்தவன் பிரேத ஜன்மத்தை அடைவான்.

7. தாய், மனைவி, பெண், மருமகள் முதலியோரின் சரீர தோஷத்தைப் பார்க்காமலேயே, பிறர் சொல் கேட்டு ஜாதிப்பிரஷ்டம் செய்தவன், மனச் சாட்சிக்கு விரோதமாகத் தீர்ப்பு வழங்கியவன், அந்தணர், பசுக்களைக் கொல்பவன், இமிசிப்பவன், மதுபானம் அருந்துவோர், குருபத்தினியைக் கெடுத்தவன், வெண் பட்டு, சொர்ணம் திருடியவன் பிரேத ஜன்மம் அடைவர். பிரேத ஜன்மம் அடைந்தோர் எப்போதும் கொடிய பாலைவனங்களில் சஞ்சரித்து வருந்துவர்.

 பிரேத ஜன்மத்தால் ஏற்படும் துன்பம்

பிறனில் விழைபவன், பிறர் பொருளைக் கவர்பவன், காற்று வடிவ பிரேத ரூபத்தைப் பெற்று, பசி, தாகத்தோடு வருந்தி யமனுடைய காவலையும் மீறி, எங்கும் அலைந்து திரிவான். அவன் தன் குடும்பத்தில் உள்ளவர்களையும், உறவினர்களையும் துன்பப்படுத்துவான். பிதுர்க்களின் தினத்தில் வீட்டிற்கு வரும் பிதுர்க்களை உள்ளே போக விடாமல் தடுத்து நிறுத்துவான். அவர்களுக்குத் தரும் அவிசுகளை வாங்கிப் புசிப்பான். தன்னுடைய புத்திரனுக்கும் சந்ததி இல்லாமல் செய்வான். பலவித நோய்களை உண்டாக்குவான்.

அவன் தான் சார்ந்த குலத்தையே பீடிப்பான். தீய குணம் உடையோர்க்கு அவன் அதிகம் துன்பங்கள் விளைவிப்பான். பாவங்கள் செய்தல், ஆண் வாரிசு பிறவாதிருத்தல், பிறந்து பிறந்து இறத்தல், குடும்பத்தில் ஒற்றுமையின்மை, பசுக்களைக் காப்பாற்ற இயலாமை, நண்பருடன் விரோதம், உபவாசம் தடைபடல், நற்காரியங்கள் செய்ய முடியாமல் வாழ்நாள் வீணாதல், தாய் தந்தையரை இகழ்தல், அயலாரைக் கொல்ல முயற்சித்தல், அதர்மங்களையே நினைத்தல், பொருள்கள் அழிவு, களவு, மனைவியுடன் வாழ முடியாமை, சண்டை, சச்சரவு ஆகிய அனைத்தும் பிரேத ஜன்மம் அடைந்தவனாலேயே நிகழ்வதாகும்.

தான தர்மங்கள் செய்வோர், ஹரி நாம சங்கீர்த்தனம் செய்வோர், சிரார்த்தங்களைச் செய்வோர், புனிதத் தல யாத்திரை மேற்கொள்வோர் போன்றோர்க்குத் பிரேத ஜன்மம் அடைந்தவனால் ஒரு துன்பமும் நேராது. பிரேத ஜன்மம் அடைந்தவன் பயங்கரமான முகத்தோடும், வாள் போன்ற பற்களோடும் தன் குலத்தோர் கனவில் தோன்றி ஐயையோ ! என்னைக் காப்பாற்றுவதற்கு ஒருவரும் இல்லையா? நான் பசி, தாகத்தினால் அவதிப்படுகிறேனே, என் பிரேத ஜன்மம் நீங்கவில்லையே எனக் கதறுவான். இவ்வாறு எந்தக் குலத்தில் பிரேத ஜன்ம தோஷம் நேரிட்டிருக்கிறதோ அந்தக் குலத்தில் துயரமும் துன்பங்களும் சூழ்ந்து கொண்டே இருக்கும்.

பிரேத ஜன்மம் நீங்க வழி

அடுத்து, பகவான் கருடனை நோக்கி பிரேத ஜன்மம் தொலைய என்ன செய்ய வேண்டும் என்று விளக்கலானார். பிரேத ஜன்மம் நீங்க விரும்பும் ஒவ்வொருவரும் தான் இறப்பதற்கு முன்பே தனது கையாலேயே விரு÷ஷாற் சர்க்கம் செய்யவேண்டும். உயிருடன் இருக்கும்போதோ, இறந்த பிறகோ இது செய்யப்பட்டால் அவனுக்குப் பிரேத ஜன்மம் வருவதில்லை. இதைத் தவிர வேறு எந்த கர்மாவினாலும் இதைத் தடுக்க முடியாது.

இதனை ஒருவன் இறந்த பதினொன்றாம் நாளன்று செய்ய வேண்டும். அப்படிச் செய்யப்படின் அவன் பெரியோர்கள் அடையும் உலகை அடைவான். முக்தி தரும் நகரம் ஏழினுள் ஒன்றில் இறந்தவனும் நல்லுலகை அடைவான். இந்தக் கர்மாவைப் புத்திரன், மனைவி, பெண் வயிற்றுப் பிள்ளை, (அ) பெண் செய்யலாம். புத்திரன் இருந்தால் அவன் மட்டுமே செய்ய வேண்டும். பிள்ளை இல்லாமல் இறந்தவன் நரகத்தையே அடைவான்.

எனவே எத்தகைய அரிய கர்மாவைச் செய்தாகிலும் ஆண்மகன் ஒருவனைப் பெற்றுக் கொள்ள வேண்டும். நல்வினை செய்யாதவன், புத்திரன் இருந்தும் கிருத்தியங்கள் செய்யாமல் விட்டால், இரவு பகலாக, பசி, தாகத்தோடு அலைந்து திரிந்து பின்னர் பலவகைப் பிறவிகள் எடுத்து மீண்டும் மனிதரில் கடை ஜாதியில் பிறப்பான். எனவே, ஒருவன் நல்லுலகை அடைவதற்குரிய நல்வினைகளைச் செய்யத் தெரிந்தவன் நற்கர்மங்களைச் செய்யக் கடவன் என்று பகவான் கருடனுக்குக் கூறினார்.


தொடரும் ................

0 Facebook:

Post a Comment

 
ஆன்மிகம் © 2011 - WebSite & Designig by Yazhini