Banner 468 x 60px

 

Saturday, January 11, 2014

புத்தாண்டு ராசிபலன் - 2014 கும்பராசி

0 Facebook
நிதானமாக செயல்பட்டு, வெற்றிக் கனியைப் பறிக்கும் தன்மையுள்ள கும்பராசி அன்பர்களே!  உங்கள் ராசி நாயகன் சனிபகவான், உங்களின் கவுரவத்தை பாதுகாக்க உதவுவார். அவர் துலாமில் உச்சநிலையில் இருக்கும் காலகட்டத்தில், இந்த ஆண்டு மலர்கிறது. அவர் சாதகமற்ற இடத்தில் இருந்தாலும் கூட, முக்கிய கிரகங்கள் பல சாதாகமாக இருக்கும் நிலையில்தான், இந்த ஆண்டு பிறக்கிறது.

குரு பகவான், தற்போது உங்கள் ராசிக்கு 5-ம் இடத்தில் இருக்கிறார். இங்கு அவர் பல்வேறு நன்மைகளை தந்து கொண்டிருக்கிறார். குடும்பத்தில் மகிழ்ச்சியை தருவார். திருமணம் போன்ற சுப நிகழ்ச்சி களை நடத்தி வைப்பார். பொருளாதார வளத்தை அதிகரிக்கச் செய்வார். பெண்களால் மேன்மை கிடைக்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். இதனால் வாழ்க்கையில் வளம் காணலாம்.

இதுதவிர குருவின் 5-ம் இடத்துப்பார்வையும், 7-ம் இடத்துப் பார்வையும் சாதமாகவும் அமைந்துள்ளது. இதனால் கூடுதல் நன்மை கிடைக்கும். குரு பகவான் ஜூன் 12ல், 5-ம் இடத்தில் இருந்து 6-ம் இடத்திற்கு அடியெடுத்து வைக்கிறார். இது சாதகமான நிலை என்று சொல்ல முடியாது. 5-ம் இடத்தில் இருந்தது போன்ற நன்மைகளை அவரால் செய்ய முடியாது. அதே நேரம் மிகவும் பிற் போக்கான பலனையும் அவர் தரமாடடார். பொதுவாக 6-ம் இடத்தில் இருக்கும் குரு உடல்நலத்தை பாதிப்புக்குள்ளாக்குவார். மனதில் தளர்ச்சியை ஏற்படுத்துவார் என்பது ஜோதிட வாக்கு. 

 முக்கிய கிரகங்களில் ஒன்றான சனி பகவான், 9-ம் இடமான துலாமில் இருப்பது சாதகமற்ற இடத்தில் இருக்கிறார். பொதுவாக சனி 9-ம் இடத்தில் இருக்கும் போது, உங்கள் முயற்சிகளில் தடைகள் வரலாம்; எதிரிகளின் இடையூறு தலைதூக்கும்; பிறருக்கு கட்டுப்பட்டு போகும் நிலை உருவாகும் என்று ஜோதிடத்தில் கூறப்பட்டு உள்ளது. ஆனால், அவர் உங்கள் ராசி நாயகன் என்பதால் அவரால் சிரமங்கள் அதிகம் இருக்காது. மேலும் மார்ச் 4 முதல் ஜூலை 19 வரை சனிபகவான் வக்கிரம் அடைகிறார். இந்த காலத்தில் அவரால் சிறப்பாக செயல்பட முடியாது. சாதகமற்ற கிரகம் செயல்பட முடியாமல் போவது உங்களுக்கு சாதகம்தானே. 

மேலும் அப்போது அவரால் நன்மை கிடைக்கவும் வாய்ப்பு உள்ளது. சனிபகவான் சாதகமற்ற இடத்தில் இருந்தாலும், அவரது பார்வையால் நன்மை கிடைக்கும். அவர் இருக்கும் இடத்தில் இருந்து 3,7,10-ம் இடங்களை பார்ப்பார். அந்த மூன்று பார்வைகளும் உங்களுக்கு சிறப்பாக உள்ளது. 3-ம் இடத்துப் பார்வையால் பொன், பொருள் கிடைக்கும். மகிழ்ச்சியும், ஆனந்தமும் அதிகரிக்கும். பெண்கள் மிக உறுதுணையாக இருப்பர். 7-ம் இடத்துப் பார்வையால் காரிய அனு கூலத்தையும் பொருளாதார வளத்தையும் குடும்பத்தில் மகிழ்ச்சியையும் தொழில் விருத்தியையும் தருவார். 10-ம் இடத்துப் பார்வையால் பகைவர்களின் சதியை முறியடிக்கும் வல்லமையை பெறலாம். உங்கள் ஆற்றல் மேம்படும்.உங்களுக்கு பல வகையிலும் பலரும் புகழ்மாலையும், பூ மாலையும் சூட்டுவர். 

 நிழல் கிரகமான ராகு தற்போது 9-ம் இடமான துலாமில் சனிபகவானோடு உள்ளார். அவரால் முயற்சிகளில் தடை, எதிரிகளின் இடையூறு போன்றவை வரலாம். ஆனால் குருவின் பார்வை அவர் மீது படுவதால் அவரால் கெடுபலன்கள் நடக்காது. ஜூன் 20 அன்று, ராகு 8-ம் இடமான கன்னிக்கு மாறுகிறார். அங்கு முயற்சிகளில் பல்வேறு தடைகளை உருவாக்குவார். உறவினர்கள் வகையில் மனக்கசப்பை ஏற்படுத்தலாம். 

இன்னொரு நிழல் கிரகமான கேது தற்போது 3-ம் இடமான மேஷத்தில் இருந்து இறை அருளையும், காரிய அனுகூலத்தையும் கொடுந்து கொண்டிருக்கிறார். அவர் ஜுன்20 அன்று இடம் பெயர்ந்து மீனத்திற்கு வருகிறார். இதனால் எதிரிகள் வகையில் தொல்லை வரும். வீட்டில் பொருட்கள் திருட்டு போகலாம். எனவே நகைகளை லாக்கரில் வைத்து விடுவது நல்லது. தேவைப் படும் போது குறைந்த அளவு எடுத்துக் கொள்ளலாம். மேற்கண்ட கிரகங்களின் நிலையைக் கொண்டு பார்க்கும்போது, ஆண்டின் முற்பகுதி சிறப்பாக அமையும் என்பதை உணரலாம். பொதுவாக இந்த ஆண்டு பொருளாதார வளம் சிறப்பாக இருக்கும். தடைகள் விலகி எடுத்த காரியங்கள் அனைத்தும் நிறைவேறும். பணப்புழக்கம் அதிகரிக்கும். உங்கள் முயற்சியில் தடைகள் வந்தாலும் அதை எளிதில் முறியடிப்பீர்கள். மதிப்பு, மரியாதை சிறப்பாக இருக்கும். 

மனதில் இருந்த உளைச்சல் மறைந்து மகிழ்ச்சி அதிகரிக்கும். ஜூன் மாதத்திற்கு பிறகு செலவை குறைக்கவும். வீண் விவாதங்களை தவிர்க்கவும். வீட்டிற்கு தேவையான அனைத்து வசதிகளும் கிடைக்கும். கணவன்- மனைவி இடையே அன்பு நீடிக்கும். திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் கைகூடும். அதுவும் ஜூன் மாதத்திற்குள் நிறைவேறும். சிலர் தொழில் நிமித்தமாக குடும்பத்தையே வேறு ஊருக்கு மாற்ற வேண்டியது வரலாம். அனாவசிய செலவை தவிர்க்கவும்.

தொழில், வியாபாரம்: 

தொழில் மற்றும் வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். புதிய தொழில் தொடங்க அனு கூலம் உண்டு. ஆனால், அதை ஜூன் மாதத்திற்குள் ஆரம்பித்தால் மிகச்சிறப்பாக நடக்கும். தாமதமாகத் தொடங்கினால், அதிகமாக உழைத்து சிரமப்பட்டு தொழிலைக் காப்பாற்ற வேண்டியது வரும்.

பணியாளர்கள்: 

பணியாளர்களுக்கு பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கும். மேல் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். ஆனால், ஜூன் மாதத்திற்கு பிறகு வேலையில் பளு அதிகரிக்கும். வேலையின்றி இருப்பவர்கள் ஜூன் மாதத்துக்குள் வேலையைத் தேடிக்கொள்ளவும். அதற்கு அனுகூலமான வாய்ப்பும் இருக்கிறது. அக்டோபர், நவம்பர் மாதங் களில் போலீஸ் மற்றும் பாதுகாப்புத் துறையில் வேலை பார்ப்பவர்கள் முன்னேற்றம் காண்பர்.


பெண்கள்: 

கணவருடன் கருத்து மோதல் கொள்ளாமல் பவ்வியமாக நடந்து கொள்வது நல்லது. ஜூனுக்குப் பிறகு பொறுமை பெருமை தரும். திருமண முயற்சிகளை ஜூனுக்குள் முடித்து விடுவது நல்லது. ஆண்டின் ஆரம்பத்தில் நகை வாங்கலாம். வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு சலுகைகள் கிடைக்கும்.

மாணவர்கள்: 

இந்த கல்வி ஆண்டில் முன்னேற்றத்தை காணலாம். ஆனால் அடுத்த ஆண்டு, கடும் முயற்சி எடுத்து படிக்க வேண்டியதிருக்கும்.

விவசாயிகள்: 

முதல் ஐந்து மாதங்கள் விளைபொருட்களுக்கு நல்ல விலை கிடைக்கும். அதன்பின், விவசாயத்தை நடத்த சிறு சிரமங்களைச் சந்திக்க வேண்டியிருக்கலாம். இருப்பினும், பாதகமான நிலை ஏற்படுவதற்கு வாய்ப்பில்லை. சிலர் புதிய நிலம் வாங்குவர். நவீன கருவிகள் மூலம் செய்யும் சாகுபடியில் நல்ல பலன் கிடைக்கும்.

பரிகாரம்

விநாயகரையும், பெருமாளையும் தொடர்ந்து வழிபட்டு வாருங்கள். சந்தர்ப்பம் கிடைக்கும்போது நவக்கிரகங்களை சுற்றி வாருங்கள். ஏழைகளுக்கு இயன்ற உதவி செய்யுங்கள். ஜூன் வரை ஞானிகளை சந்தித்து காணிக்கை செலுத்தி ஆசி பெறுங்கள்.

பரிகாரப் பாடல்:

செடியாய வல்வினைகள் தீர்க்கும் திருமாலே
நெடியானே வேங்கடவா நின்கோயில் வாசல்
அடியாரும் வானவரும் அரம்பபையரும் கிடந்தியங்கும்
படியாய்க் கிடந்துன் பவளவாய்க் காண்பேனே!

0 Facebook:

Post a Comment

 
ஆன்மிகம் © 2011 - WebSite & Designig by Yazhini