
ஒருவருக்கு ஜாதகம் கணிக்கும்போது, முதலில் ஒரு சுலோகத்தைக் குறிப்பிடுவார்கள்.
‘ஜனனீ ஜன்ம சௌக்யானாம் வர்த்தனீ குலஸம்பதாம் பதவீ பூர்வ புண்யானாம் லிக்யதே ஜென்ம பத்ரிகா’
ஒருவருக்கு இந்தப் பிறவியில் ஏற்படக் கூடிய உயர் கல்வி, அதிகாரப் பதவி, வசதி வாய்ப்புகள், சுக துக்கங்கள் அனைத்துமே அவருடைய பூர்வபுண்ணியத்தின் பலனாகவே ஏற்படுகின்றன.
பூர்வ ஜன்மத்தில் செய்த கர்மவினைகளின் பயனாக, இந்த ஜன்மத்தில் நாம் அடையக்கூடிய பலாபலன்களை- வாழ்க்கையைப் பற்றி அறிய வழிகாட்டுவது, நமது ஜாதகத்தில் (லக்னத்திலிருந்து எண்ணிவர) 5-ம் இடம் ஆகும். தோஷங்கள் ஏதேனும் இருந்தால், சாஸ்திர ரீதியான பரிகாரங்களைச் செய்து நன்மையை அடைவதற்கும் இந்த இடம் வழிகாட்டும்.
ஆம் ! ஒருவரின் ஜனன ஜாதகத்தில், புத்திர ஸ்தானம் எனும் பூர்வபுண்ணிய ஸ்தானத்தை நன்கு ஆராய்ந்து பார்த்தால், அவரது முற்பிறவி யைப் பற்றியும், அந்தப் பிறவி யில் அவர் செய்த பாவ-புண்ணியங்களைப் பற்றியும் தெரிந்துகொள்ளலாம்.
அதுமட்டுமல்ல, அதன் விளைவாக இந்தப் பிறவியில் அவருக்கு ஏற்படக்கூடிய சுக துக்கங்கள்; லாப நஷ்டங்கள்; தோஷங்கள் பிதுர்வகைச் சொத்துகள், பரம்பரைச் சிறப்பு, வாழ்வில் வாய்க்கவுள்ள சுக போகங்கள், மனைவி, லாபம், தர்மகுணம், குலதெய்வம் ஆகியவை குறித்த தகவல்களை அறியமுடியும்.
குறிப்பாக, ஜாதகர் ஒருவர் அவரின் முன்னோர்களில் எவரது பிரதியாகப் பிறந்திருக் கிறார் என்பதையும் துல்லிய மாகச் சொல்ல இயலும்.
பெண்கள் ஜாதகத்தில் 9-ம் இடமாகிய பாக்கியஸ்தானம், 5-ம் இடமாகிய பூர்வ புண்ணிய ஸ்தானம் ஆகியவற்றை வைத்து களத்திரம், குடும்பம், குழந்தைகள், திருமணம், மறுமணம்புரிவதற்கு வாய்ப்பு உண்டா ஆகியவை குறித்தும் அறியமுடியும். இப்படி, 5-ம் இடத்தை வைத்து பூர்வ புண்ணியத்தை, அதன் விளைவுகளை ஆராய்வதில் அந்த இடத்துக்கு உரிய கிரகம் முக்கியத்துவம் பெறும்.
இனி, இவற்றை அடிப்படையாக வைத்து ஒவ்வொரு லக்னக்காரருக்கும் உரிய பலா பலன்களை அறிந்துகொள்வோம்.
உங்களது லக்னம் எது என்பதை, ஜாதகக் கட்டத்தில் இடம்பெற்றுள்ள `ல' எனும் குறிப்பை வைத்து அறியலாம். உதாரணமாக, இந்தக் குறிப்பு மேஷ கட்டத்தில் இருந்தால், உங்கள் லக்னம் மேஷம். அதிலிருந்து எண்ணி வரும் 5-வது இடத்தையே ஆராய வேண்டும்.
மேஷ லக்னம்
மேஷ லக்னத்தில் பிறந்தவர்களுக்கு 5-ம் இடமான சிம்மத்துக்கு உரிய கிரகம் சூரியன். எனவே, மேஷ லக்னத்தில் பிறந்த ஜாதகர் ஆணாக இருந்தால், அவர் கொள்ளுத் தாத்தாவின் குணாம்சங்களைக் கொண் டிருப்பார். பெண் எனில், முற்பிறவியில் கொள்ளுத் தாத்தாவுடன் பிறந்த அத்தைப் பாட்டியாக இருந்திருப் பார். அத்தைப் பாட்டியின் கர்மவினைகளின்படியே இந்தப் பெண்ணின் வாழ்க்கை அமையும்.
5-க்கு உரிய சூரியன் 5-ல் ஆட்சிப் பெற்றிருந்தாலும், மேஷத்தில் உச்சம் பெற்றிருந்தாலும் பல தலை முறையாகத் தொடர்ந்து வரும் பரம்பரைச் சொத்து களை அனுபவிப்பார்கள். இவர்கள் நிறைய சகோதரர் களுடனும், ஒரு சகோதரியுடனும் பிறந்திருப்பார்கள். ஆனால், 5-க்கு உரிய சூரியன் பகை அல்லது நீசம் பெற்றிருந்தால், கண்களில் பிரச்னை ஏற்படுவதுடன், முன்னோர் சொத்துகளை அனுபவிப்பதில் தடை ஏற்படக் கூடும்.
5-க்கு உரிய சூரியன் நீசமாக இருந்தால், பெரும்பாலும் அந்த ஜாதகர் சுவீகார குழந்தையாக இருப்பார். இவர்களுக்கு சாஸ்தா, ஐயனார் மற்றும் மலைமேல் கோயில் கொண்டிருக்கும் தெய்வங்கள் குலசாமியாகத் திகழ்வார்கள்.
5-ல் நிற்கும் கிரகங்களும் பலன்களும்
சூரியன்: மேலான நற்பலன்கள் உண்டு.
சந்திரன்: ஓரளவு நன்மைகள்
செவ்வாய்: சவால்களுடன் கூடிய நற்பலன்.
புதன் மற்றும் சனி: மத்திம பலன்
குரு: யோகமான பலன்கள் ஏற்படும்.
சுக்கிரன்: சில ஆதாயங்கள் கிடைக்கும்
பரிகாரத் தலங்கள்: மேஷ லக்னக்காரர்கள் பழநி முருகனையும், சபரிமலை ஐயப்பனையும் வழிபடுவதால், வாழ்வில் வளம் உண்டாகும்.
ரிஷப லக்னம்
ரிஷப லக்னத்துக்கு 5-ம் இடமான கன்னிக்கு உரிய கிரகம் புதன். இந்த ஜாதகர் ஆணாக இருந்தால், முற்பிறவியில் அவரின் தாத்தாவாக இருந்திருப்பார். இவரிடம் தந்தையின் குணாதிசயங்கள் தென்படும். பெண் எனில் சென்ற தலைமுறையில அத்தைப் பாட்டியாக இருந்திருப்பார். இப்போது அத்தையின் குணாதிசயத்துடன் திகழ்வார்.
பூர்வ புண்ணியஸ்தானாதிபதி புதன் என்பதால், ஜாதகருக்கு புத்திர பாக்கியம் தாமதமாகும். புதன் கன்னியிலேயே உச்சம் பெற்று இருந்தால் நன்மை கள் அதிகரிக்கும். சுயமாக முன்னேறும் வல்லமை இவர்களிடம் உண்டு. துன்பங்களால் துவண்டு விடாமல் போராடுவார்கள். மற்றவர்களுக்கு ஆலோ சனைகள் வழங்குவதில் இவர்கள் சமர்த்தர்.
குலதெய்வ வழிபாடு இவர்களுக்குப் பலம் சேர்க்கும்.பெரும்பாலும் இந்த லக்னக்காரர்களுக்கு பெருமாள், பேச்சியம்மன் போன்ற பெண் தெய்வங் கள் குலதெய்வமாகத் திகழ்வார்கள்.
5-ல் நிற்கும் கிரகங்களும் பலன்களும்
சூரியன், சனி: சுமாரான பலன்கள்
சந்திரன்: அதீத நன்மைகள் உண்டு
செவ்வாய்: அளவான வளர்ச்சி
புதன்: சகல யோகங்களும் வாய்க்கும்
குரு: அதிர்ஷ்ட வாய்ப்புகள் ஏற்படும்
சுக்கிரன்: சுபகிரக பார்வை ஏற்பட் டிருந்தால் நன்மைகள் ஏற்படும்.
பரிகாரத் தலங்கள்: ரிஷப லக்னக்காரர்கள் வாழ்வில் ஒருமுறையேனும் உப்பிலியப்பர் மற்றும் திருவரங்கநாதரைத் தரிசித்து வழிபட்டு வந்தால், வாழ்வில் தடைகள் நீங்கும்; வெற்றி கிட்டும்.
மிதுன லக்னம்
மிதுன லக்னத்தில் பிறந்தவர்களுக்கு பூர்வ புண்ணிய ஸ்தானமாக இருப்பது துலாம். இந்த இடத்துக்கு உரிய கிரகம் சுக்கிரன்.
இந்த ஜாதகர் ஆண் எனில், முற்பிறவியில் எள்ளுத் தாத்தாவாகப் (தாத்தாவின் அப்பாவாக) இருந்திருப் பார். பெண் எனில், அத்தைப்பாட்டியாக இருந் திருப்பார். அவர்களின் குணநலன்கள் இவர்களிடமும் இருக்கும். இவர்கள் நான்கைந்து சகோதரிகளுடன் பிறந்திருப்பார்கள். ஒருவேளை ஜாதகத்தில் சுக்கிரன் பகை அல்லது நீசம் பெற்றிருந்தால், உடன் பிறந்த வர்கள் என்றும் எவரும் இருக்கமாட்டார்கள்.
இவர்களுக்குப் பெண்கள் மூலம் சொத்து சேரும் யோகம் உண்டு. மேலும், வாரிசு இல்லாத அத்தையின் சொத்தும் இவர்களுக்குக் கிடைக்கக்கூடும். இவர் களின் சொத்துகளுக்குப் பையன் ஒருவன் மட்டுமே வாரிசாக இருப்பான். மலைக்கோயில்களில் அருளும் பெருமாள், காளி போன்ற பெண் தெய்வங்கள் இவர்களுக்குக் குலதெய்வமாகத் திகழ்வார்கள்.
5-ல் நிற்கும் கிரகங்களும் பலன்களும்
சூரியன்: சுபக்கிரக பார்வை இருந் தால் ஓரளவுக்கு முன்னேற்றம் உண்டு.
சந்திரன்: எதிர்பாராத பணவரவு, அதிர்ஷ்ட வாய்ப்புகள் உண்டு.
செவ்வாய், குரு: நற்பலன்
புதன்: அதிர்ஷ்ட வாய்ப்புகள்;
சுக்கிரன்: மேன்மையான பலன்கள்
சனி: மத்திம பலன்கள்.
பரிகாரத் தலம்: நாகை செளந்தர்ராஜ பெருமாள், திருச்செந்தூர் முருகனைத் தரிசித்து வருவது சிறப்பு.
கடக லக்னம்
கடக லக்னத்துக்கு பூர்வ புண்ணியஸ்தானாதிபதி செவ்வாய். செவ்வாய் 5-ம் வீட்டில் இருந்தால், ஒன்றுக்கு மேற்பட்ட சகோதரர்களுடன் பிறந்திருப்பார்கள்.முன்னோர் சொத்து குறைவாகத்தான் கிடைக்கும்.
இந்த லக்னக்காரர் ஆண் எனில், முற்பிறவியில் எள்ளுத் தாத்தாவாக இருந்திருப்பார். பெண் எனில், அத்தை வழியில் 3-ம் தலைமுறையைச் சேர்ந்த பாட்டியாக இருந்திருப்பார். இவர்களது ஜாதகத்தில் செவ்வாய் பகவான் பகை அல்லது நீசம் பெற்றிருந்தால், இவர்களது சொத்துகள் அரசாங்கத் துக்கோ அல்லது கோயில்களுக்கோ போய்ச் சேரும்.
இந்த லக்னக்காரர்களுக்கு முருகப்பெருமான், மாரியம்மன் ஆகியோர் குலதெய்வங்களாகத் திகழ்வர். செவ்வாய்க்கிழமைகளில், நெய்தீபங்கள் ஏற்றி வைத்து குலதெய்வத்தை வழிபடுவதன் மூலம் வாழ்க்கையை வரமாக்கிக்கொள்ளலாம்.
5-ல் நிற்கும் கிரகங்களும் பலன்களும்
சூரியன்: அனைத்து வகைகளிலும் நற்பலன்களே உண்டாகும்.
சந்திரன் - சுபகிரக பார்வை இருந்தால் சுமாரான நன்மைகள் ஏற்படும்.
செவ்வாய் - மேன்மை.
புதன்: ஓரளவுக்கு நன்மை உண்டு.
குரு: மத்திம பலன்கள் வாய்க்கும்.
சுக்கிரன் - நற்பலன்கள் ஏற்படும்.
சனி - சகல யோகங்களும் ஏற்படும்.
பரிகாரத் தலம்: இந்த லக்னக்காரர்கள் திருத்தணி முருகனை வணங்கி வழிபட்டு வருவதால், விசேஷ பலன்கள் உண்டாகும். அதேபோல், மாரியம்மனையும் தரிசித்து வரவேண்டும்.
சிம்ம லக்னம்
சிம்ம லக்னத்துக்கு பூர்வபுண்ணியஸ்தானம் தனுசு. இந்த ராசிக்கு உரிய கிரகம் குரு. குரு சொந்த வீட்டில் இருந்தால், அந்த ஜாதகர் அவருடைய முன்னோர் களில் எள்ளுத் தாத்தாவுக்கும் முற்பட்ட 5-வது தலைமுறையைச் சேர்ந்த ஒருவராகப் பிறந்திருப்பார்.
இப்படிப்பட்ட ஜாதகர் அதிர்ஷ்டசாலி என்று கூறும்படி சகல செல்வங்களும், நிலபுலன்களும், வாகன வசதிகளும் பெற்று சுகமாக வாழ்வார்கள். இந்த லக்னக்காரர், நல்ல பிள்ளைகள் மற்றும் பேரப்பிள்ளைகளுடன் நீண்ட காலம் வாழ்வார்கள்.
ஆனால், இவர்களின் ஜாதகத்தில் குரு பகை, நீசம் பெற்றிருந்தால் வறுமையால் துன்பம் விளையும். குலதெய்வ வழிபாட்டின் மூலம் பிரச்னைகள் நீங்கும். வாராஹி, பெருமாள், முருகப்பெருமான் ஆகிய தெய்வங்கள் இவர்களுக்குக் குலதெய்வமாகத் திகழ்வர்.
5-ல் நிற்கும் கிரகங்களும் பலன்களும்
சூரியன், புதன்: அதிர்ஷ்ட வாய்ப்புகள்
சந்திரன்: மத்திம பலன் கிட்டும்.
செவ்வாய்: செல்வம் மற்றும் செல்வாக்கு உண்டாகும்;
குரு: தொழிலில் முன்னேற்றம்.
சுக்கிரன்: மன மகிழ்ச்சி, செல்வ வளம் உண்டாகும்.
சனி: சிற்சில பிரச்னைகள் ஏற்படக் கூடும் என்றாலும் பாதிப்பு இருக்காது.
பரிகாரத் தலம்: இந்த லக்னக்காரர்கள் சூரியனார் கோயிலுக்குச் சென்று சூரியபகவானையும், சிக்கல் சிங்கார வேலரையும் வழிபட்டு வரவேண்டும். இதனால் வாழ்க்கை நிலை உயரும்.
கன்னி லக்னம்
கன்னி லக்னத்தில் பிறந்தவர்களுக்கு பூர்வ புண்ணிய ஸ்தானாதிபதி சனிபகவான். இந்த லக்னக்காரர்களின் ஜாதகத்தில் சனி 5-ல் ஆட்சி பெற்றிருந்தால், ஜாதகர் முற்பிறவியில் சிறிய தாத்தாவாக ( தாத்தாவின் தம்பியாக) இருந்திருப்பார். இந்தப் பிறவியிலும் அவரின் குணாதிசயங்கள் இவரிடம் தென்படும்.
இவர்களது ஜாதகத்தில் சனி நல்ல இடத்தில் அமைந்திருக்க வேண்டும். அப்படியிருந்தால் சகல சுகபோகங்களுடன் வாழ்க்கை அமையும்; பெரும் செல்வந்தராகத் திகழ்வார்.
ஆனால், சனி பகை, நீசம் பெற்றுக் காணப்பட்டால் புத்திர பாக்கியம் கிடைப்பது அரிதாகும். சுவீகாரம்தான் எடுத்துக்கொள்ள நேரிடும். சனி உச்சம் பெற்றிருந்தால் புத்திர பாக்கியம் உண்டு. ஈஸ்வரன், சங்கரநாராயணர் ஆகிய தெய்வங்கள் இவர்களுக்குக் குலதெய்வமாகத் திகழ்வர்.
5-ல் நிற்கும் கிரகங்களும் பலன்களும்
சூரியன்: சொற்பமான பலன்கள்.
சந்திரன்: - அனுகூலம் உண்டு.
செவ்வாய் - அதீத முன்னேற்றம்.
புதன் - முயற்சிகளில் வெற்றி.
குரு - அனுகூலம் இல்லை.
சுக்கிரன் - அதிர்ஷ்ட வாய்ப்புகளுடன் தெய்வ அனுகூலமும் உண்டாகும்.
சனி - நற்பலன்கள் ஏற்படும்.
பரிகாரத் தலம்: இந்த லக்னக்காரர்கள் ஒருமுறையேனும் வைத்தீஸ்வரன் கோயிலுக்குச் சென்று முருகப்பெருமா னையும், திருச்சிக்குச் சென்று தாயுமான வரையும் வழிபட்டு வருவதால், குறைகள் நீங்கி நன்மைகள் உண்டாகும்.
துலாம் லக்னம்
துலாம் லக்கினத்துக்குப் பூர்வ புண்ணியாதிபதி சனிபகவான். இந்த லக்னக்காரர், எள்ளுத் தாத்தாவின் குணாம்சங்களுடன் பிறந்திருப்பார். பெரும்பாலும் இரும்பு சம்பந்தப்பட்ட தொழில்களுடன் தொடர்பு உண்டு. இவர்களுக்கு எதிர்பாராத வகையில் செல்வம் கிடைக்கும். சிலருக்குப் புதையல் கிடைக்கவும் வாய்ப்பு உண்டு. பந்தயங்களிலும் பணம் சம்பாதிப்பார்கள்.
இவர்களுக்குச் சனிபகவான் சனி பகை நீசமாக இருந் தால் அரசாங்கத்தில் உயர் பதவி வாய்க்கும்; நீதிபதி, வழக்கறிஞர் போன்ற பணிகளிலும் அமர்வார்கள். இவர்களில் சிலரின் குழந்தைகள் அங்கஹீனத்துடன் திகழ்வர். உரிய பரிகாரங்களின் மூலம் அந்தக் குறை ஏற்படாமல் தடுத்துவிடலாம். இவர்களுக்கு சனி 5-ல் இருந்தால் இரு தார யோகம் ஏற்படக்கூடும்.
சிறுவாச்சூர் மதுரகாளி, சிதம்பரம் நடராஜர், தேரழுந்தூர் பெருமாள் ஆகிய தெய்வங்கள் இவர்களுக்குக் குலதெய்வமாகத் திகழ வாய்ப்பு உண்டு.
5-ல் நிற்கும் கிரகங்களும் பலன்களும்
சூரியன்: ஓரளவு நற்பலன்கள்.
சந்திரன் புதன், சனி: சிறப்பான பலன்கள்
செவ்வாய்: சில அனுகூலப் பலன்கள் உண்டு என்றாலும் வயிறு தொடர்பான பிரச்னைகளும் ஏற்படும்.
குரு: ஓரளவுக்கு அனுகூலம் உண்டு.
சுக்கிரன்: அதிர்ஷ்ட வாய்ப்பும் செல்வச் சேர்க்கையும் உண்டாகும்.
பரிகாரத் தலம்: இந்த லக்னக்காரர்கள் திருக்கடவூர் அமிர்தக்கடேஸ்வரரையும், அபிராமியையும் தரிசித்து வரலாம். ஸ்ரீவாஞ்சியமும் இவர்கள் வழிபட்டு வரம் பெற வேண்டிய தலமாகும்.
விருச்சிக லக்னம்
விருச்சிக லக்னத்தில் பிறந்தவர்களுக்கு பூர்வ புண்ணியஸ்தானாதிபதி குரு. இவர் 5-ல் ஆட்சி பெற்று இருந்தால், ஜாதகர் சிறிய தாத்தாவின் குணாதிசயங் களைக் கொண்டிருப்பார். ஜாதகருக்கும் சரி, ஜாதகரின் சிறிய தாத்தாவுக்கும் சரி கையில் ஆறு விரல்கள் இருப்பதற்கு வாய்ப்பு உள்ளது.
5-ல் குரு கெஞ்சினாலும் கிடைக்காது என்று சொல்லும்படி, இவர்கள் அனைத்து செல்வங்களையும் பெற்று, சுகமாக வாழ்வர். ஆனால், குரு பகை, நீசம் மற்றும் தோஷத்துடன் இருந்தால் எதிர்மறையான பலன்கள் நடைபெறும். பெருமாள், சயனக் கோலத்தில் அருளும் அம்மன் ஆகிய தெய்வங்களில் ஒருவர், இவர்களின் குலதெய்வமாக இருப்பர். வருடத்துக்கு ஒருமுறையேனும் குலதெய்வ வழிபாடுகளைச் செய்யவேண்டும். உரிய கோயிலுக்குச் செல்லமுடியாவிட்டாலும், வீட்டிலேயே குலதெய்வத்தை வழிபட்டு வரம் பெறலாம்.
5-ல் நிற்கும் கிரகங்களும் பலன்களும்
சூரியன்: அனுகூலம்.
சந்திரன்: செல்வச் சேர்க்கை, தொழில் மேன்மை உண்டாகும்.
செவ்வாய்: அதிர்ஷ்ட வாய்ப்புகள் உண்டு என்றாலும், வயிற்றுப் பிரச்னை களும் தலைதூக்கும்.
புதன்: இந்தக் கிரகம் நீசம் என்பதால், சுபகிரகங்களின் பார்வை இருந்தால் ஓரளவு நன்மைகள் ஏற்படும்.
குரு: மேலான நன்மைகள் ஏற்படும்.
சுக்கிரன், சனி: சுமாரான நன்மை.
பரிகாரத் தலங்கள்: திருப்புள்ளம் பூதங்குடி ஸ்ரீவல்வில்ராமர், திருக்குறுங்குடி நம்பி ஆகிய தெய்வங்களை வழிபட்டு வந்தால், வாழ்க்கைச் செழிக்கும்.
தனுசு லக்னம்
இந்த லக்னத்தில் பிறந்தவர்களுக்கு பூர்வ புண்ணியா திபதி செவ்வாய். இவர்கள், தங்களின் எள்ளுத் தாத்தாவின் குணாம்சங்களுடன் திகழ்வர். இவரின் முன்னோர்களில் பலரும் ராணுவம், போலீஸ் என்று சீருடை அணிந்த பணியில் இருந்திருப்பார்கள். இவருக்கும் இவரின் முன்னோர்களுக்கும் அரசாங்க வீட்டில் வசிக்கும் யோகம் உண்டு.
இந்த லக்னக்காரர்களைப் பொறுத்தவரையிலும், இந்தத் தலைமுறையுடன் முந்தைய இரண்டு தலை முறைகளிலும் பெண்குழந்தைகள் அரிதுதான்.
செவ்வாய் பகை, நீசம் பெற்றிருந்தால் சொத்துகள் இருக்காது. அதேநேரம் செவ்வாயைக் குரு பார்த்தால் சொத்துச் சேர்க்கை உண்டாகும். பச்சையம்மன், நரசிம்ம ஸ்வாமி போன்ற தெய்வங்கள் இவர்களுக்குக் குலதெய்வங்களாக இருக்க வாய்ப்பு உண்டு.
5-ல் நிற்கும் கிரகங்களும் பலன்களும்
சூரியன்: மேன்மையான நற்பலன்கள்.
சந்திரன்: சகல வளங்களும் கிடைக்கும்.
செவ்வாய்: செல்வச் சேர்க்கை, உயர் பதவி வாய்க்கும்.
புதன்: ஓரளவு நன்மை.
குரு: அதீத முன்னேற்றம்.
சுக்கிரன்: வாழ்க்கையில் சுபிட்சம்.
சனி: நீசம் என்பதால், சுபகிரகங்களின் பார்வை இருந்தால் ஓரளவு நன்மைகள் ஏற்படும்.
பரிகாரத் தலம்: பரிக்கல், சிங்கபெருமாள் கோவில், சோளிங்கர் போன்ற தலங்களுக் குச் சென்று ஸ்ரீநரசிம்மரை வழிபட்டு வந்தால், நன்மைகள் பெருகும்.
மகர லக்னம்
மகர லக்னத்துக்குப் பூர்வ புண்ணியாதிபதி சுக்கிரன். சுக்கிரன் 5-ம் இடமான ரிஷபத்தில் ஆட்சி பெற்றிருந் தால், கொள்ளுத்தாத்தாவின் குணாம்சங்களைக் கொண்டிருப்பார். பெரும்பாலும் இவர்கள், நிறைய பெண் குழந்தைகளுக்குப் பிறகு கடைசிப் பிள்ளையாக பிறந்திருப்பார்கள். நிலம், கால்நடைகள், வாகன யோகம் என்று சுகபோகமாக வாழ்வார்கள். ஆனால், சுக்கிரன் பகை, நீசம் பெற்றிருந்தால், வசதி வாய்ப்புகள் குறைவாக இருக்கும்.
பெரும்பாலும் இவர்களுக்கு ஓர் ஆண்குழந்தையே இருக்கும். இருதார யோகமும் இருக்கக்கூடும். நடந்து செல்வது என்றாலே இவர்களுக்குப் பிடிக்காது. காலில் ஏதேனும் ஒரு பிரச்னை இருந்துகொண்டே இருக்கும். பிடாரியம்மன், சப்த மாதாக்கள் ஆகிய தெய்வங் களைக் குலதெய்வமாகக் கொண்டிருக்கும் இவர்கள், தில்லைவிளாகம் ராமர், நடராஜர் ஆகியோரை இஷ்ட தெய்வங்களாக வழிபடுவார்கள்.
5-ல் நிற்கும் கிரகங்களும் பலன்களும்
சூரியன்: ஓரளவு நன்மை.
சந்திரன், புதன்: மேன்மையான பலன்கள் ஏற்படும்.
செவ்வாய்: மத்திம பலன்கள்.
குரு: தெய்வ அனுகூலம் வாய்க்கும்.
சுக்கிரன்: பல வகைகளிலும் நற்பலன்கள் ஏற்படும்;
சனி: அதிர்ஷ்ட வாய்ப்புகள் ஏற்படும்.
பரிகாரத் தலங்கள்: இந்த லக்னக்காரர் கள், கும்பகோணம் ஸ்ரீகும்பேஸ்வரர் மற்றும் திருஇந்தளூர் ஸ்ரீரங்கநாதரைத் தரிசித்து வழிபடவேண்டும். அதனால். தடைகள் நீங்கி வாழ்வில் முன்னேற்றம் உண்டாகும்.
கும்ப லக்னம்
கும்ப லக்னத்துக்கு 5-ம் இடமான மிதுனத்துக்கு உரிய கிரகம் புதன். இந்த லக்னக்காரர் ஆண் எனில், முற்பிறவியில் தாத்தாவாகப் பிறந்திருப்பார். எனினும் இவரிடம் தந்தையின் குணாம்சங்கள் நிறைந்திருக்கும். பெண் எனில், சென்ற தலைமுறையில் அத்தைப் பாட்டியாகப் பிறந்திருப்பார். இவரிடம் அத்தையின் குணாம்சங்கள் நிறைந்திருக்கும்.
பூர்வ புண்ணியஸ்தானாதிபதி புதன் என்பதால், இவர்களில் பெரும்பாலானோருக்குப் புத்திரதோஷம் ஏற்படக்கூடும். புதன் கன்னியில் உச்சம் பெற்று, சுப கிரகத்தின் பார்வையும் இருந்தால் சுவீகாரம் மூலம் பிள்ளையை எடுத்து வளர்க்கலாம்.
இவர்கள், திருப்பதி வேங்கடேசப் பெருமாள், உப்பிலியப்பன், பேச்சியம்மன் ஆகிய தெய்வங்களைக் குலதெய்வமாக ஏற்று வழிபடுவார்கள்.
5-ல் நிற்கும் கிரகங்களும் பலன்களும்
சூரியன்: சுமாரான நற்பலன் ஏற்படும்.
சந்திரன், செவ்வாய்: ஓரளவு அனுகூல பலன்கள் உண்டாகும்.
புதன்: உயர்கல்வியிலும் தொழிலிலும் முன்னேற்றம் உண்டு.
குரு: அதிர்ஷ்ட வாய்ப்புகள் கைகூடும்.
சுக்கிரன்: பல வகைகளிலும் அனுகூலம்.
சனி: சிறப்பான பலன்கள் ஏற்படும்.
பரிகாரத் தலங்கள்: இந்த லக்னக்காரர்கள், திருப்பதி திருவேங்கடவனையும், ஸ்ரீஉப்பிலியப்பனையும் வழிபட்டு வந்தால், தடைகள் உடைபடும்; பிரச்னைகளை எதிர்கொள்ளும் வல்லமையும், முன்னேற் றத்துக்கான வழியைக் கண்டறியும் ஆற்றலும் வாய்க்கும்.
மீன லக்னம்
மீன லக்கினத்துக்கு பூர்வ புண்ணியாதிபதி சந்திரன். சந்திரன் 5-ல் ஆட்சி பெற்று வலுவாக இருந்தால், ஜாதகர் அவருடைய எள்ளுத் தாத்தாவின் குணாம்சங் களுடன் பிறந்திருப்பார். இவர்களுக்குப் பெண்கள் மூலம் சொத்து கிடைக்கும். வாரிசு இல்லாத அத்தை வழியிலும் இவர்களுக்குச் சொத்து கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு.
இந்த லக்னக்காரர்களுக்கு பெரும்பாலும் பெண் குழந்தைகளே பிறப்பர். ஆசிரியர் பணியிலும் ஆன்மிகத் துறையிலும் ஈடுபட்டு பொருள் சம்பாதிப்பார்கள். சந்திரன் பகை மற்றும் நீசம் பெற்றிருந்தால் மேற்கூறிய பலன்கள் கிடைப்பதில் தடைகள் ஏற்படக்கூடும். முருகன், ராமன், செல்லியம்மன் போன்ற தெய்வங்கள் இவர்களுக்குக் குலதெய்வங்களாகத் திகழ்வர். பெரும்பாலும் இவர்கள் முருகப்பெருமானையும், அம்பாளையும் இஷ்டதெய்வங்களாக ஏற்று வழிபடுவர்.
5-ல் நிற்கும் கிரகங்களும் பலன்களும்
சூரியன், புதன், சனி: சுமாரான நற்பலன்களே ஏற்படும்.
சந்திரன்: முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். அதிர்ஷ்ட வாய்ப்புகள் கைகூடும்.
செவ்வாய்: சுபகிரக பார்வை இருந் தால் ஓரளவு நன்மை ஏற்படும்;
குரு: அதிர்ஷ்ட வாய்ப்புகளுடன் தெய்வ அனுகூலமும் வாய்க்கும்.
சுக்கிரன்: நற்பலன்கள் உண்டாகும்.
பரிகாரத் தலங்கள்: இந்த லக்னக் காரர்கள், ராமேஸ்வரம் ஸ்ரீராமநாத சுவாமியையும், மதுரை ஸ்ரீமீனாட்சி அம்மனையும் தரிசித்து வழிபட்டு வந் தால் சகல சுபிட்சங்களும் உண்டாகும்.